இட்லிக்கு பாசிப்பருப்பு வெச்சு.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. கணக்கில்லாம சாப்பிடுவாங்க..
Paasi Paruppu Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலை வேளையில் பெரும்பாலும் இட்லி தான் காலை டிபனாக இருக்குமா? அந்த இட்லிக்கு எப்போதும் ஒரே மாதிரி தான் சட்னி, சாம்பார் செய்வீர்களா? இப்படி ஒரே சுவையில் சமைத்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா?
பொதுவாக சட்னிக்கு கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்றவற்றை தான் பயன்படுத்துவோம். ஆனால் பாசிப்பருப்பைக் கொண்டும் சட்னி செய்யலாம் என்பது தெரியுமா? அதுவும் இந்த பருப்பு கொண்டு சட்னி செய்தால், யாராலும் இது பாசிப்பருப்பு கொண்டு தயாரித்தது என்று கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவில் இதன் சுவை வித்தியாசமாக இருக்கும்.

முக்கியமாக இந்த பாசிப்பருப்பு சட்னியை ஒருமுறை செய்தால், அதன் சுவைக்கு அடிமையாகி, அடிக்கடி செய்து கொடுக்குமாறு சொல்வார்கள். மேலும் எப்போதெல்லாம் இந்த சட்னியை செய்கிறீர்களோ, அப்போது வீட்டில் உள்ளோர் அனைவரும் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு இந்த பாசிப்பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பாசிப்பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* இஞ்சி - சிறிய துண்டு
* சின்ன வெங்காயம் - 2
* தேங்காய் - 1/4 மூடி
* பூண்டு - 2 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய் மற்றும் நறுக்கிய இஞ்சியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 2 சின்ன வெங்காயம், 1/4 மூடி நறுக்கிய தேங்காய், 2 பல் பூண்டு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக சட்னியை தாளிப்பதற்கு ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பாசிப்பருப்பு சட்னி தயார்.
Credit: Boldsky


Click it and Unblock the Notifications








