வேதனையாக இருக்கிறது.. நல்லகண்ணு உடல்நிலை குறித்து டாக்டர்கள் சொன்னது என்ன? திருமாவளவன் விளக்கம்
சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான நல்லகண்ணு, உடல்நல பாதிப்பு காரணமாக கடந்த 15 நாட்களுக்கும் மேல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
மருத்துவமனையில் நல்லகண்ணுவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளத்ததாவது, "திடகாத்திரமான உடல் கொண்டவர் ஐயா நல்லகண்ணு. 100 ஆண்டுகள் வாழ்வது என்பது சாதனைதான். கடந்த ஆண்டுதான் அவரது 100வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

உடல் நிலையில் என்ன பிரச்சனை?
இப்படி இருக்கையில் கடந்த 15 நாட்களாக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சு திணறல் காரணமாகத்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவருக்கு சிறுநீரகத்திலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்திருக்கிறது. அவரை காப்பாற்ற மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
அவர் மிகவும் திடகாத்திரமான உடலுக்குரியவர். இப்படி இருப்பதை பார்ப்பதற்கு வேதனையாக இருக்கிறது. ஐயா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று விழைகிறோம்.
என்ன சிகிச்சை?
மருத்துவர்கள் ஐயா நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்று கூறினார்கள். தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பதாக சொன்னார்கள். அவருக்கு நேரடியாக இரைப்பையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல ட்ரக்கியோஸ்டமி செய்யப்பட்டு, தொண்டையில் துளையிடப்பட்டு நேரடியாக மூச்சுக்குழலுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவர்கள் சொன்னது என்ன?
இது தவிர, சிறுநீரகத்தில் உப்பு அதிகரித்திருப்பதால் அந்த பிரச்சனையும் தொந்தரவை ஏற்படுத்தி வருகிறது. எங்களால் முடிந்தவரை நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம் என்று மருத்துவர்கள் கூறினா்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக நேற்றிரவு, ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து அவரது சிகிச்சை குறித்து விசாரித்திருந்தார்.
மக்களுக்கான போராளி
நல்லகண்ணுவுக்கு தற்போது வயது 101. அவர் தனது 16வது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர முயன்றார். ஆனால், கட்சி அவரை சேர்க்கவில்லை. 18 வயது நிரம்பிய பின்னீரே உறுப்பினராக சேர்த்துக்கொண்டது. அவர் தனது வாழ்நாளில் ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கும் மேல் மக்களுக்கான போராட்டங்களில் தன்னை முன்னிறுத்திக்கொண்டிருந்தார். அவரது 86வது வயதில், தாமிரபரணி ஆற்றில் மணல் எடுப்பதற்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியிருந்த சம்பவம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அந்த வழக்கில், ஒரு வழக்கறிஞராக அவர் வெற்றியும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்து.
Credit: Oneindia


Click it and Unblock the Notifications









