பான் கார்டு முதல் காப்பீடு வரை.. ஏப்ரல் 1 முதல் எல்லாமே மாறுது.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய வருமான வரிச் சட்டம் 2025 இன் கீழ், பான் கார்டு பயன்பாடு, சொத்து வாங்குதல் மற்றும் காப்பீடு ஆகிய துறைகளில் புதிய விதிகள் செயல்படுத்தப்படும். அதுவும் இந்த மாற்றங்கள் சாமானிய மக்களிடம் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
குறிப்பாக வரி செலுத்துவோருக்கு சில சலுகைகளை வழங்குவதோடு, சிலவற்றில் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பான் கார்டு கட்டாயம்: புதிய விதிகளின்படி, வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸில் பணம் டெபாசிட் செய்யும்போது அல்லது எடுக்கும்போது பான் எண்ணை மேற்கொள் காட்டுவதற்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது முன்னதாக ரூ.50,000-க்கு மேல் பரிவர்த்தனைகளுக்கு பான் கட்டாயமாக இருந்தது. இப்போது, ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் வரையிலான ரொக்க பரிவர்த்தனைகளுக்கு பான் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ரூ.10 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனைகளுக்கு பான் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள்: குறிப்பாக ஹோட்டல், உணவகங்கள், அரங்குகள் அல்லது ஈவென்ட் மேனேஜர்களுக்குக் கொடுக்கும் பேமென்ட் ரூ.1 லட்சத்தைத் தாண்டினால் பான் கார்டு காட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நடைமுறையில் பேமென்டில் ரூ.50,000 தாண்டினால் பான் கார்டு காட்ட வேண்டும் என்ற நிலை உள்ளது.
நிலம் அல்லது வீடு: புதிய வருமான வரிச் சட்டத்தின் படி, ரியல் எஸ்டேட்டில் ரூ.20 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள நிலம் அல்லது வீட்டை வாங்கினாலோ, பரிசாகப் பெற்றாலோ பான் கார்டு தேவைப்படும். முன்பு இந்த லிமிட் ரூ.10 லட்சமாக இருந்தது.
வாகனங்கள்: புதிய விதியின்படி ரூ.5 லட்சத்திற்கும் மேலான இருசக்கர வாகனங்களை வாங்கினால் பான் கார்டை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். அதேபோல் கார் வாங்கினாலும் பான் கார்டு கட்டாயம் ஆகும். இதற்கு டிராக்டர்கள் மட்டும் விதிவிலக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்பீடு : புதிய விதியின்படி எந்தவொரு காப்பீட்டுக் கொள்கையையும் வாங்குவதற்கு இனி PAN அட்டை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு பெரிய தொகை பாலிசிகளுக்கு மட்டுமே PAN தேவைப்பட்டது. இப்போது அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இது கட்டாயமாகும். மேலும் மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம் மூலம் பெறப்படும் இழப்பீட்டிற்கான வட்டி இப்போது முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது விபத்துக்குள்ளானவர்களுக்கு முழு இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்கிறது.

குறிப்பாக இப்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டம் 1961-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. எனவே தான் தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் வருமான வரிச் சட்டங்களைப் புதுப்பிக்கக் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரி மசோதா நிறைவேற்றப்பட்டது.
மக்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்பதற்காக, புதிய வருமான வரி விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இப்போது வரைவு விதிகள் வெளியாகி உள்ள நிலையில் வரும் 2026 ஏப்ரல் 1 முதல் இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் வருமான வரிச் சட்டத்தில் உள்ள 511 விதிகள் 333 ஆக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதவிர 399 படிவங்கள் 190 படிவங்களாகக் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Credit: Gizbot


Click it and Unblock the Notifications








