பாஜக போட்ட பிரஷரை எல்லாம்.. காங்கிரஸுக்காக தாங்கிக்கிட்டோம்! எல்லாம் வேஸ்ட்.. கண்கள் சிவந்த ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி உறவில் தற்போது முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய அரசியல் நகர்வுகள் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகளின் தொடர் விமர்சனங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக தலைமையை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

மோதலுக்கு வித்திட்ட 'தாகூர் - சக்கரவர்த்தி' பேச்சுக்கள்
இந்த விரிசலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் மற்றும் காங்கிரஸ் அகில இந்திய தரவுப் பிரிவின் தலைவர் பிரவீண் சக்கரவர்த்தி ஆகியோரின் சமீபத்திய பேச்சுகளே ஆகும்.
மாணிக்கம் தாகூர்: கடந்த பிப்ரவரி 15 அன்று மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய அவர், "2014-ல் திமுக செய்த தவறுகளுக்காக காங்கிரஸ் தான் பழி சுமந்து பதில் சொல்ல வேண்டியிருந்தது" என்று பேசினார். மேலும், திமுக தோற்ற தொகுதிகளை காங்கிரஸிற்கு ஒதுக்க வேண்டும் என்றும், அதிகாரப் பகிர்வு (ஆட்சியில் பங்கு) என்பது தங்களின் உரிமை என்றும் அவர் முழங்கியது திமுகவினரை கொந்தளிக்கச் செய்துள்ளது.
பிரவீண் சக்கரவர்த்தி: தமிழக அரசின் நிதி மேலாண்மை குறித்து பிரவீண் சக்கரவர்த்தி வெளியிட்ட கருத்துக்கள் கூட்டணியில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. தமிழகத்தின் கடன் சுமை உத்தரப் பிரதேசத்தை விட மோசமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டது, திமுக அரசின் சாதனைகளை சிதைப்பதாக அக்கட்சியினர் கருதுகின்றனர்.
காங்கிரஸால் திமுகவிற்கு நேர்ந்த தியாகம் - அறிவாலயம் வேதனை
திமுகவின் முக்கியத் தலைவர்கள் மற்றும் உடன்பிறப்புகள் மத்தியில் ஒரு வேதனையான கருத்து நிலவுகிறது. கடந்த பல ஆண்டுகளாக பாஜகவின் நேரடி அழுத்தங்களையும், மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைகளையும் திமுக எதிர்கொள்வதற்கு ஒரே ஒரு முக்கியக் காரணம் காங்கிரஸ் உடனான கூட்டணி தான் என்று அவர்கள் நம்புகின்றனர். காங்கிரஸ் உடன் இருப்பதால்தான் பாஜக எங்களை தாக்குகிறது. பாஜக போட்ட பிரஷரை எல்லாம்.. காங்கிரஸுக்காக தாங்கிக்கிட்டோம். ஆனால் இப்போ மாறிவிட்டது.
காங்கிரஸை தாங்கிப் பிடிப்பதற்காக நாங்கள் கொடுத்த விலை அதிகம். ஆனால் இன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறப்படும் காங்கிரஸ், எங்களையே முதுகில் குத்தப் பார்க்கிறது, என மூத்த திமுக நிர்வாகிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
பாஜகவுடன் ஒருவேளை திமுக சமரசம் செய்திருந்தால், இவ்வளவு நெருக்கடிகள் இருந்திருக்காது; ஆனால் கொள்கைக்காக காங்கிரஸை கைவிடாமல் இருந்த தங்களுக்கு, இப்போது காங்கிரஸே "துரோகம்" செய்வதாக திமுகவினர் கருதுகின்றனர்.
மு.க. ஸ்டாலினின் முடிவு என்ன?
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி இடையிலான தனிப்பட்ட நட்பு கூட தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீண் சக்கரவர்த்தி மீது காங்கிரஸ் மேலிடம் உரிய நடவடிக்கை எடுக்காத வரை, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸை அழைக்கத் தேவையில்லை என்ற முடிவில் திமுக தலைமை இருப்பதாகத் தெரிகிறது.
ஆட்சியில் பங்கு இல்லை என்பதை முதலமைச்சர் திட்டவட்டமாக அறிவித்த பின்பும், காங்கிரஸ் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது, 2026 தேர்தலில் இந்தக் கூட்டணி நீடிக்குமா என்ற மிகப்பெரிய கேள்வியை தமிழக அரசியலில் எழுப்பியுள்ளது.
Credit: Oneindia


Click it and Unblock the Notifications








