மீண்டும் இந்தியாவிற்குள் வருகிறதா ஃபோர்டு நிறுவனம்? சென்னைக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்!
ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இந்தியாவிற்குள் தனது காலடி தடத்தை எடுத்து வைக்க திட்டமிட்டு வருவதாக தற்போது செய்திகள் உலா வருகின்றன. தமிழகத்தில் உள்ள கோடு ஆலையை வேறு நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் திட்டம் கைவிடப்பட்டதால் மீண்டும் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவிற்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஃபோர்டு சர்வதேச அளவில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனம். கடந்த 1995 ஆம் ஆண்டு மஹிந்திரா நிறுவனத்துடன் கூட்டு வைத்து இந்தியாவிற்குள் மஹிந்திரா போர்டு என்ற பெயரில் நுழைந்தது பின்னர் 1998 ஆம் ஆண்டு தனது பங்கை 72 சதவீதமாக உயர்த்திக் ஃபோர்டு இந்தியா என அந்நிறுவனம் தனது பெயரை மாற்றி இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது.

இந்நிலையில் சர்வதேச அளவில் ஃபோர்டு நிறுவனத்திற்கு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்தியாவில் உள்ள தனது ஆலைகளை கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூடியது. இதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியது. ஃபோர்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் குஜராத்திலும் தமிழகத்திலும் ஆலைகள் உள்ளன. அந்த ஆலைகளில் தான் ஃபோர்டு கார்கள் எல்லாம் தயாராகி விற்பனை செய்யப்பட்டன.
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு குஜராத் பகுதியில் உள்ள தனது ஆலையை விற்கப் போவதாக அறிவித்தது இந்த ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. முதல் குஜராத்தில் உள்ள ஃபோர்டு ஆலை டாடா நிறுவனத்திற்கு சொந்தமாக மாறிவிட்டது. அந்நிறுவனம் அந்த ஆலையில் டாடா கார்களை தயாரிக்க முடிவு செய்திருந்தது. இந்நிலையில் சென்னையில் உள்ள தனது ஆலையையும் விற்பனை செய்ய ஃபோர்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஆலை சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு 1.5 லட்சம் கார்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆலையை விற்க ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்த பிறகு பல்வேறு நிறுவனங்கள் இந்த ஆலையை வாங்க முன்வந்தன. ஜேஎஸ்டபிள்யூ என்ற நிறுவனம் எஸ்ஏஐசி என்ற சர்வதேச ஆட்டோமொபைல் தயாரிக்கும் நிறுவனத்திடம் 35 சதவீத பங்கை வாங்கி இருந்தது.
எஸ்ஏஐசி என்பது இந்தியாவில் உள்ள எம் ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேல் உள்ள நிறுவனம் ஆகும். அந்நிறுவனத்தின் முதலீட்டில் தான் இந்தியாவில் எம் ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது தொழிலை செய்து வருகிறது. இந்நிலையில் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் சார்பில் இந்தியாவில் புதிதாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பிராண்டை கொண்டு வர முடிவு செய்திருந்தது. ஆனால் அந்த ஒப்பந்தம் தற்போது நடைபெறவில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது.

இதற்கிடையில் மஹிந்திரா நிறுவனத்திடம் ஃபோர்டு நிறுவனம் கடந்த 2019-ம் ஆண்டு இரு நிறுவனமும் சேர்ந்து வாகன தயாரிப்பில் ஈடுபடும் முயற்சியை கையில் எடுத்தது. ஆனால் அதிலும் வெற்றி பெற முடியவில்லை. அதன் பிறகு தான் இந்தியாவில் இருந்து ஃபோர்டு நிறுவனம் வெளியேறியது. இந்நிலையில் தனது ஆலைகளை எல்லாம் விற்று விட்டு மொத்தமாக இந்தியாவை காலி செய்து சென்று விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான சாத்தியமில்லாமல் தற்போது தவித்து வருகிறது.
வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் என்ற நிறுவனமும் ஃபோர்டு நிறுவனத்தின் ஆலையை கைப்பற்ற திட்டமிட்டு இருந்தது. ஆனால் அதுவும் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. தற்போது ஃபோர்டு நிறுவனத்தின் சென்னை ஆலையை விற்பனை செய்வதற்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்ட நிலையில் மீண்டும் இந்த ஆலையில் ஃபோர்டு நிறுவனமே தனது வாகனத்தை தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்யலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.
ஃபோர்டு நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து வெளியேறி இருந்தாலும் அதற்குப் பிறகு இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன புரட்சி ஏற்பட்டு இந்தியாவையே ஆட்டோமொபைல் துறையையே புரட்டி போட்டுள்ளது. இதை மனதில் வைத்து ஃபோர்டு நிறுவனம் முற்றிலுமாக புதிய ஐடியாவுடன் இந்தியாவில் தனது காலடி தடத்தை எடுத்து வைத்தால் அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் களம் இறங்கினால் நிச்சயம் அது மிகப்பெரிய அளவில் பிரபலமாகும். இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் துறையே புரட்டி போடும் அளவிற்கு இந்த முடிவு இருக்கும். பல பெரிய நிறுவனங்கள் எல்லாம் தங்கள் திட்டங்களை எல்லாம் மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். என்ன நடக்கப் போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்


Click it and Unblock the Notifications









