கால் டாக்சியில் பயணிக்க செல்ஃபி கட்டாயம்..? அதிரடி அறிவிப்பு வெளியிட்ட உபேர்... ஏன் தெரியுமா?
இதுவரை எந்தவொரு கால் டாக்சி நிறுவனமும் அறிவிக்காத புதிய அறிவிப்பு ஒன்றை உபேர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பிரபல கால் டாக்சி சேவை நிறுவனமான உபேர், அதன் வாடிக்கையாளர்களைக் கோவிட்19 வைரசிடம் இருந்து பாதுகாக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக, தனது பார்ட்னர்களுக்கு, அதாவது, உபேர் நிறுவனத்தின்கீழ் தங்களின் வாகனங்களை இணைத்து சேவையில் ஈடுபட்டு வரும் ஓட்டுநர்களுக்கு கோவிட்19 வைரஸ் குறித்த விழிப்புணர்வும், அதைத் தடுக்கும் விதமாக ஆற்ற வேண்டிய செயல்குறித்த அறிவுரைகளையும் வழங்கி வருகின்றது.

குறிப்பாக, கோவிட்19 வைரஸ் பரவல் தலை விரித்தாட ஆரம்பித்த நாளிலிருந்து இந்த செயலில் உபேர் ஈடுபட்டு வருகின்றது. இதுமட்டுமின்றி, வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக கால் டாக்சிகளில் பாதுகாப்பு கவசங்கள் அமைக்கும் பணியையும் அது மேற்கொண்டது.

இந்நிலையில், தற்போதுக் கட்டுக்கடங்காமல் பரவிக் கொண்டிருக்கும் வைரசுக்கு எதிராக புதிய நடவடிக்கையை மேற்கொள்ளும் விதமாக தனித்துவமான அறிவிப்பு ஒன்றை உபேர் வெளியிட்டுள்ளது. தன்னுடைய வாடிக்கையாளர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வருவதை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக இந்த செயல் அமைந்துள்ளது.

அதாவது, உபேர் கால் டாக்சி பயனர், தனது அடுத்த சவாரியை தங்கு தடையில்லாமல் புக் செய்ய வேண்டும் என்றால், முந்தைய அல்லது தற்போதைய சவாரியின்போது மாஸ்க் அணிந்திருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக செல்ஃபி எடுத்துக் கொள்ள வேண்டும் என அது கூறியிருக்கின்றது.

உபேர் மென்பொருள் வழியாக எடுக்கப்படும் அந்த செல்ஃபி அடுத்த சவாரிக்காக அதுவாகவே ஆட்டோமேட்டிக்கா உபேர் ஆப்-பில் அப்டேட் செய்துவிடும். இந்த புதிய திட்டத்தையே உபேர் நிறுவனம் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

பார்ட்னர்கள் சார்பாக முன் வைக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த தனித்துவமான அறிவிப்பை உபேர் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக பலர் கொடுத்த அறிவுரையின்படியும் இத்திட்டத்திற்கு அது ஒப்புதல் அளித்துள்ளது.

பெரும்பாலான சவாரிகளில், வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணியாமல் வருவதாக பார்ட்னர்கள் சிலர் புகாரை முன் வைத்திருக்கின்றனர். இச்செயல், உபேரின் பார்ட்னர்களுக்கு மட்டுமின்றி அடுத்ததாக அதே கேப்பை நுகரும் பிற வாடிக்கையாளருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

எனவேதான் உபேர் நிறுவனம், தனது வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்தும் விதமாக, மாஸ்க் அணிந்தவாறு செல்ஃபி எடுக்க வேண்டும் என கூறியிருக்கின்றது. முன்னதாக, தனது பார்ட்னர்கள் சவாரியைப் பெறும் முன் இதுபோன்ற செல்ஃபி எடுக்க வேண்டும் என கூறியிருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது வரை 17.44 மில்லியன் ஓட்டநர்கள் தங்களின் செல்ஃபியினை பகிர்ந்திருக்கின்றனர்.

இந்த நிலையிலேயே தற்போது வாடிக்கையாளர்களும் அதை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக மாஸ்க் வெரிஃபிகேஷன் செல்ஃபி அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான பயணத்தை வழங்க முடியும் என உபேர் நம்புகின்றது.

இதுபோன்ற பல்வேறு தனித்துவமான செயல்களை உபேர் நிறுவனம் இந்தியாவில் மேற்கொண்டு வருகின்றது. அண்மையில், இந்தியாவில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு ஆயிரம் எண்ணிக்கையில் மின்சார வாகனங்களை முதல்கட்டமாக பயன்பாட்டிற்கு களமிறக்க இருப்பதாக அறிவித்திருந்தது. இதன்மூலம், நாட்டின் மாசு ஒழிப்பு பணியில் கணிசமாக பங்கேற்க முடியும் என அது நம்புகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








