மகிழ்ச்சி! இந்தியாவிற்கு உபேர் செய்ய இருக்கும் நல்ல காரியம்! இத கனவுலகூட எதிர்பாத்திருக்க மாட்டீங்க!
கால் டாக்சி சேவையில் ஈடுபட்டு வரும் உபேர் நிறுவனம், இந்தியர்களின் நன்மைக்காக குறிப்பிட்ட ஓர் செயலை இந்தியாவில் செய்ய இருக்கின்றது. அது என்ன என்பதை கீழே காணலாம்.

உலக நாடுகள் சிலவற்றில் வாடகை வாகன சேவையில் ஈடுபட்டு வரும் உபேர் நிறுவனம், இந்தியாவின் வாடகை வாகன துறையிலும் பங்கெடுத்து வருகின்றது. இது, நாட்டின் மிகப்பெரிய வாடகை வாகன சேவை நிறுவனம் என்ற பெறுமையை இந்தியாவில் சூடியிருக்கின்றது. குறைந்த கட்டணம், சிறப்பான சேவை உள்ளிட்டவையே உபேர் இந்த இடத்தைப் பெறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

எனவே, நிறுவனம்குறித்து இந்தியர்கள் மத்தியில் நிலவி வரும் நற்மதிப்பைத் தக்க வைத்துக்கொள்ளும் விதமாக, உபேர் சில தனித்துவமான முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. அந்தவகையில், விரைவில் நாட்டின் சில முக்கிய நகரங்களில் மின்சார வாகனங்களைப் பயன்பாட்டிற்கு களமிறக்க இருப்பதாக அது அறிவித்துள்ளது.

இதுகுறித்து உபேர் நிறுவனம் நேற்று (08 அக்டோபர்) வெளியிட்டுள்ள தகவலில், டெல்லி-என்சிஆர், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களில் ஆயிரம் எண்ணிக்கையிலான மின்சார வாகனங்களை வாடகை வாகனச் சேவையில் களமிறக்க இருப்பதாக அது அறிவித்துள்ளது.

இந்த தனித்துவமான செயலுக்காக உபேர் நிறுவனம், லித்தியம் அர்பன் டெக்னாலஜிஸ் எனும் மின்சார வாகனம் சார்ந்து இயங்கும் நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. இந்த கூட்டணியே விரைவில் மேற்கூறிய முக்கிய நகரங்களில் ஆயிரம் எண்ணிக்கையில் மின் வாகனங்களை வாடகை வாகனங்களாக களமிறக்க இருக்கின்றன.

உபேர் கால் டாக்சி சேவையின்கீழ் ஏற்கனவே நூற்றுக் கணக்கான மின்சார வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மஹிந்திரா இ-வெரிட்டோ, டாடா டிகோர் உள்ளிட்ட செடான் ரக கார்களே தற்போது அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே ஆயிரம் யூனிட் மின்சார கார்களைக் களமிறக்க இருப்பதாக அது தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மைக் காலங்களாக அதிகரித்து வரும் சுற்றுச் சூழல் மாசு மற்றும் புவி வெப்ப மயமாதல் உள்ளிட்டவற்றில் தீர்வு காண்பதற்கு மின் வாகனங்கள் மட்டுமே சிறந்த வழியாகும். இவற்றால் மட்டுமே மாசுபாட்டைக் குறைக்க முடியும். இவை பூஜ்ஜிய மாசு வெளியீட்டைக் கொண்டிருப்பதே இதற்கு காரணம். எனவேதான் உலக நாடுகள் பல மின் வாகன பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.

இந்தியாவிலும் அம்மாதிரியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையிலேயே ஆயிரம் யூனிட் மின்சார கார்களைக் களமிறக்கும் பணியில் உபேர் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளது. இதுமட்டுமின்றி, 12 மாதங்களுக்கு உள்ளாக 2 ஆயிரம் யூனிட்டுகளாக மாற்ற இருப்பதாகவும் அது கூறியிருக்கின்றது.

உபேர் நிறுவனம் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு இத்துடன் நான்காவது கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. முன்னதாக, யுலூ, மஹிந்திரா மற்றும் சன் மொபிலிட்டி ஆகிய நிறுவனங்களுடன் அது கூட்டணியைத் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இதைத்தொடர்ந்தே நான்காவதாக லித்தியம் அர்பன் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் உபேர் தற்போது கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. இதன் மூலம் நகரங்களை பசுமையாகவும், சுத்தமானதாகவும், அதிக ஆரோக்யமானதாகவும் வைத்திருக்க முடியும் என அந்த நிறுவனம் நம்பிக்கைத் தெரிவத்துள்ளது.

மின்சார வாகனங்கள் மட்டுமின்றி பன்முக மின் வாகனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சார்ஜிங் நிலையங்களை களமிறக்கும் முயற்சியிலும் உபேர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையும் நாட்டின் சில முக்கியமான நகரங்களிலேயே முதல் கட்டமாக அது பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது.

அந்த சார்ஜிங் நிலையங்கள் 90 நிமிடங்களிலேயே மின்சார கார்களை முழுமையாக சார்ஜ் செய்யும் திறனில் கொண்டுவரப்பட இருக்கின்றன. தற்போது ஒரு சில சார்ஜிங் மையங்கள் அதிகபட்சம் 8 முதல் 9 மணி நேரங்கள் வரை சார்ஜ் செய்ய வேண்டும் என்றநிலையில் இருக்கின்றன. இதனை மாற்றும் விதமாக இந்த லித்தியம் சார்ஜிங் மையங்கள் அமைய இருக்கின்றன.

மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக காற்று மாசுபாடு இருக்கின்றது. இது பல்வேறு உயிர்களைப் பலிவாங்க காரணமாக இருக்கின்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், காற்று மாசுபாட்டின் காரணமாக 2017 ஆம் ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக 1.2 மில்லியன் பரிதாபமாக பலியாகியிருக்கின்றன. உலகளாவிய காற்று அறிக்கை வெளியிட்ட தகவலின் அடிப்படையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

இதுபோன்ற காரணங்களுக்காக உலக நாடுகள் எரிபொருள் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்துமாறு ஊக்குவித்து வருகின்றன. இதற்கு சிறப்பு சலுகை மற்றும் மானியம் போன்ற ஊக்கத்தொகை வழங்கும் முயற்சியிலும் அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இம்மாதிரியான முயற்சியில் பங்குக் கொள்ளும் விதமாக உபேர் கலந்துக்கொண்டிருப்பது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உபேர் நிறுவனம், வருகின்ற 2040ம் ஆண்டிற்குள் தனது வாடகை வாகன சேவையின்கீழ் இயங்கும் அனைத்து வாகனங்களையும் பூஜ்ஜிய எமிசன், அதாவது, மின்சார வாகனங்களாக மாற்ற இருப்பதாக சபதம் எடுத்துள்ளது. இந்த இலக்கை நோக்கி நகருவம் விதமாக முதல் கட்டமாக 1,000 மின்சார வாகனங்களை இந்தியாவில் களமிறக்க அது திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








