தமிழகத்தில் அமலுக்கு வந்தது பொது முடக்கம்... வாகன ஓட்டிகளுக்கான முக்கியத் தகவல்கள்!
தமிழகத்தில் முழுமையான பொது முடக்கம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், வாகனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

நாடுமுழுவதும் கொரோனா தீயாய் பரவி வரும் நிலையில், கட்டுப்படுத்துவதற்கான கடைசி முயற்சியாக தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மூன்று தென் மாநிலங்களில் முழுமையான பொது முடக்கம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்திலும், கர்நாடகாவில் இன்று முதல் மே 24ந் தேதி வரையில் இரண்டு வாரங்களுக்கும், கேரளாவில் ஒரு வார காலத்திற்கும் பொது முடக்கம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து, பிற அனைத்து சேவைகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, வாகனங்களுக்கு மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்கள் தவிர்த்து பிற அனைத்து வாகனங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, உரிய காரணங்கள் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் உரிய காரணங்கள் இல்லாமல் வெளியில் செல்வதை அறவே தவிர்ப்பது அவசியமாகிறது.

விமான நிலையம், ரயில் நிலையம் செல்வோர் வாகனங்களில் செல்வதற்கும், வாடகை கார் மற்றும் ஆட்டோரிக்ஷக்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. அதேபோன்று, கொரோனா தடுப்பூசி போடுவதற்கு, அவசரத்திற்காக மருத்துமனைகளுக்கு வாகனங்களில் செல்வதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

சென்னையில் வாகன நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். மேலும், 35 மேம்பாலங்களில் வாகன ஓட்டத்தை நிறுத்துவதற்காக தடைகளை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

மேலும், சென்னையில் வாகன நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக 10,000 போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 200 தற்காலிக சோதனைச் சாவடிகள் மூலமாக வாகன நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. 360 ரோந்து வாகனங்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று, கர்நாடக மாநிலத்திலும் முழு பொது முடக்கம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால், பெங்களூர் நகரிலும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், ஓசூர் அருகே அத்திப்பள்ளி சோதனைச் சாவடியில் வைத்து இரு மாநிலங்களுக்கு இடையே செல்லும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.

மேலும், திருமணம், இறப்பு, அரசு அலுவல்கள் உள்ளிட்ட உரிய காரணங்களுடன் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. எனவே, அவசர தேவைகளுக்காக வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டிலிருந்து வருவோர் கண்டிப்பாக இ-பாஸ் எடுத்துக் கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் எடுப்பதற்கான வழிமுறைகளை இங்கே க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே கொரோனா கோரத்தாண்டவத்தை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவசியமின்றி வெளியே சென்று ஆபத்தை விலைக்கு வாங்குவதை அனைவரும் உறுதி செய்வது நல்லது.


Click it and Unblock the Notifications








