பெங்களூரில் இருந்து காரில் சொந்த ஊருக்கு போறீங்களா? - 'இ-பாஸ்' பெறுவதற்கான வழிமுறைகள்!
கொரோனா பரவல் இரண்டாம் அலை மிக மோசமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் கொரோனா மிக வேகமாக பரவி வருவதால், கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் தமிழர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு இ-பாஸ் பெற்று செல்வது அவசியமாகி இருக்கிறது.

புதுச்சேரி தவிர்த்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வருவோருக்கு நாளை (ஏப்.26) முதல் இந்த இ-பாஸ் கட்டாயமாக்கப்படுகிறது. எனவே, சொந்த ஊருக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் முதலில் இ-பாஸ் விண்ணப்பித்து அனுமதி பெற்ற பின்னரே தங்களது பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்வது அவசியம்.

கடந்த ஆண்டு போலவே தற்போதும் இ-பாஸ் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வர இருக்கிறது. இ-பாஸ் பெறுவதற்கு தமிழக அரசின் https://eregister.tnega.org/#/user/pass என்ற இணையதளப் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

முதலாவதாக உங்களது மொபைல்போன் நம்பரை உள்ளீடு செய்ய வேண்டும். அதன்பிறகு உங்களது மொபைல்போனுக்கு ஒரு ஒடிபி நம்பர் வரும். இதனை வைத்து இ-பாஸ் விண்ணப்ப பக்கத்தில் உள்ளே நுழைய வேண்டும்.

அதன்பிறகு, சாலை, ரயில், விமானம் என எவ்வழியாக தமிழகத்திற்குள் வருகிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும். சாலை வழிப் பயணம் என்றால், எத்தனை பேர் செல்கிறீர்கள் என்ற விபரத்தையும், கார், வேன், பேருந்து என வாகன வகை விபரத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், என்ன காரணத்திற்காக தமிழகத்திற்குள் வருகிறீர்கள் என்ற காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். திருமணம், அரசு ஒப்பந்தப் பணிகள், மருத்துவம், சுற்றுலா அல்லது இறுதிச் சடங்களில் பங்கேற்க செல்வது உள்ளிட்டவற்றில் தகுந்த காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

அத்துடன், விண்ணப்பிப்பவரின் அடையாளச் சான்றும் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். ஏதேனும் ஒரு அடையாளச் சான்றை ஸ்கேன் செய்து அதற்கான இடத்தில் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், சாலை வழியாக வருவோர் தங்களது வாகனத்தின் பதிவு எண் உள்ளிட்டத் தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். வேறு காரணங்கள் இருந்தால் அதனை தெரிவிப்பதற்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இ-பாஸுக்கு அனுமதி கொடுக்கப்படும். இது எளிய நடைமுறையாகத்தான் இருக்கிறது. இ-பாஸ் இல்லாமல் பயணிக்கும்போது மாநில அல்லது மாவட்ட எல்லைகளில் தடுத்து நிறுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இ-பாஸ் பெற்றுக் கொண்டு பயணிப்பதே அசகவுரியங்களை தவிர்க்க உதவும்.


Click it and Unblock the Notifications








