வந்தே பாரத் ரயிலுக்கு சனி உச்சத்துல இருக்கு... சென்னை அருகே குறுக்கே வந்த "கவுசிக்" உரிமையாளுக்கு வீலை வீச்சு
சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் மாடு மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. மாட்டின் உரிமையாளரை ரயில்வே அதிகாரிகள் வலை வீசி தேடி வருகின்றனர்.
சென்னையிலிருந்து மைசூரு வரை செல்லும் வந்தே பாரத் ரயில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயிலைப் பிரதமர் மோடி பெங்களூருவில் பச்சை கொடியசைத்துத் துவங்கி வைத்தார். ஏற்கனவே வந்தே பாரத் ரயில்கள் மாடி மீது மோதி அதன் மூக்குபகுதி உடையும் சம்பவம் வட இந்தியாவில் நடந்துள்ளது.

இந்நிலையில் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண ரயில் பாதைக்குள் மாடுகள் உள்ள வர முடியாத படி பக்கவாட்டில் சுவர் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. மத்திய அரசு ஒரு புறம் திட்டமிட்டு வரும் நிலையில் இனி வந்தே பாரத் ரயிலில் விபத்துக்களைத் தவிர்க்கச் சென்னை- மைசூரு ரயிலில் வேகத்தை 130-ல் இருந்து 90 ஆக குறைக்கவும், திருப்பங்களில் 70-75 கி.மீ வேகத்தில் செல்லவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு மைசூரிலிருந்து கிளம்பி சென்னை வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் அரக்கோணம் அருகே வந்து கொண்டிருந்த போது கன்று குட்டி ஒன்று குறுக்கே வந்தது. ரயில் கன்று மீது மோதியதில் கன்று தூக்கி வீசப்பட்டது. இதனால் ரயிலின் முகப்பு பகுதியில் சேதம் ஏற்பட்டது. இதனால் ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் ரயிலுக்குப் பாதிப்பில்லை என்றதும் ரயில் கிளம்பிச் சென்றது.
வந்தே பாரத் ரயில் மீது மாடு மோதும் சம்பவம் வாடிக்கையாக நடந்து வருகிறது, கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இது 5வது சம்பவமாகும். இந்த சேவை துவங்கப்பட்ட முதல் வாரத்திலேயே கன்று மீது ரயில் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலின் வேகம் குறைக்கப்பட்ட பின்பும் இந்த விபத்து நடந்துள்ளது எப்படி என அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் முதல் சம்பவம் நடந்த போதே ரயில் பாதை அருகே கால் நடை வளர்ப்பவர்களுக்கு எச்சிரிக்கை விடுக்கப்பட்டது.
இது குறித்து தென்னக ரயில்வே அதிகாரிகள் கூறும் போது இது குறித்து தற்போது ஆய்வு நடந்து வருவதாகவும் இந்த கன்றுகுட்டிக்கு சொந்தக்காரரை தேடி வருவதாகவும், அவரை பிடித்ததும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இந்த சேவை துவங்கப்படும் போதே சமூகவலைத்தளங்களில் பலர் இந்த ரயிலின் குறுக்கே மாடு வந்தால் என்னவாகும் என விமர்சனம் செய்து வந்தனர். தற்போது ஒரே வாரத்தில் இந்த சம்பவம் நடந்து விட்டது. நல்லவேளையாக இதில் ரயிலுக்குப் பெரிய அளவில் சேதம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications