பெரிய அண்ணனுக்கு பயந்து மோடி எடுத்த விபரீத முடிவு.. பெட்ரோல் விலை மீண்டும் உயர்வதன் பகீர் காரணம்..
அமெரிக்காவின் எச்சரிக்கை எதிரொலியாக, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை, கடந்த ஜூன் மாதத்தில் மட்டும், 15.9 சதவீதம் அளவிற்கு இந்தியா குறைத்துவிட்டது.
அமெரிக்காவின் எச்சரிக்கை எதிரொலியாக, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை, கடந்த ஜூன் மாதத்தில் மட்டும், 15.9 சதவீதம் அளவிற்கு இந்தியா குறைத்துவிட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலை கணிக்க முடியாத அளவிற்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஈரான் அரசுடன் செய்து கொண்டிருந்த அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து, கடந்த மே மாதம் அமெரிக்கா விலகியது. இதனால் ஈரான் நாட்டுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு வழிகளில் நெருக்கடி கொடுத்து கொண்டிருக்கிறார்.

பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஈரான் ஏற்றுமதி செய்துவருகிறது. இதன்மூலம் கிடைக்கும் வருவாயைதான் ஈரான் பெரிதும் நம்பியுள்ளது. இதனை முடக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் திட்டம்.

இதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க அரசு பகிரங்கமாக ஓர் எச்சரிக்கை விடுத்தது. ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை படிப்படியாக குறைத்து கொண்டே வந்து, வரும் நவம்பர் 4ம் தேதிக்குள் முழுமையாக நிறுத்தி கொள்ள வேண்டும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையை மீறி, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் எனவும் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது. இதனால் இந்தியா கடும் நெருக்கடியில் சிக்கி கொண்டுள்ளது.

ஈராக், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஈரானிடம் இருந்துதான் அதிக அளவிலான கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கி கொண்டுள்ளது. இந்த சூழலில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தினால், இந்தியா கடும் நெருக்கடியை சந்திக்கும் அபாயம் நிலவி வருகிறது.

ஏற்கனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. நிலைமை இப்படி இருக்க, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை இன்னும் அதிகரிக்கும் என வல்லுனர்கள் எச்சரித்தனர்.

ஆனால் அதையும் மீறி, அமெரிக்காவின் உத்தரவுக்கு கட்டுப்படும்படியான முடிவை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு எடுத்துள்ளது. அமெரிக்கா உடனான பொருளாதார உறவு சீர்குலைந்து விடக்கூடாது என்பதற்காக, ஈரானை கை கழுவ இந்தியா முடிவெடுத்துவிட்டது.

அமெரிக்காவின் உத்தரவு குறித்து விவாதிக்க, இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுடனான ஆலோசனை கூட்டத்தை, கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய எரிபொருள் துறை அமைச்சகம் நடத்தியது. அப்போது சில அதிரடியான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா மிக மிக கடுமையான அளவுக்கு குறைத்து விடும் அல்லது முழுமையாக நிறுத்திவிடும். எனவே ஈரான் கச்சா எண்ணெய்க்கான மாற்று ஏற்பாடுகளை செய்யும்படி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கேட்டு கொள்ளப்பட்டன.

இந்நிலையில் அமெரிக்காவின் உத்தரவுக்கு இணங்க, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா படிப்படியாக குறைத்து கொண்டு வருவதை தற்போது வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள் உறுதி செய்கின்றன. இதனால் சாமானிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த மே மாதத்தில், ஈரானிடம் இருந்து ஒரு நாளைக்கு 7,05,200 பேரல் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்தது. ஆனால் இந்த எண்ணிக்கை ஜூன் மாதத்தில், வெறும் 5,92,800 பேரல்களாக திடீரென கடுமையாக குறைந்துவிட்டது.

அதாவது ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை, வெறும் ஒரே மாதத்தில் 15.9 சதவீதம் அளவிற்கு இந்தியா குறைத்து கொண்டுள்ளது. ஷிப்பிங் மற்றும் இன்டஸ்ட்ரீ மூலம் கிடைத்த புள்ளி விபரங்களின்படி இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா விதித்த கெடுவான நவம்பர் 4ம் தேதிக்கு இன்னும் சுமார் 3 மாதங்கள் உள்ளன. ஆனால் அமெரிக்கா எச்சரித்த முதல் மாதத்திலேயே, ஈரானில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதியாவது 15.9 சதவீதம் சரிந்து விட்டது.

இதன் காரணமாகதான் இந்தியாவில், பெட்ரோல், டீசல் விலை கடந்த 6 நாட்களாக, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதாக கருதப்படுகிறது. நவம்பர் 4ம் தேதி நெருங்க நெருங்க, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியாவது இன்னும் அதிகமான அளவிற்கு குறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இனி வரும் காலங்களில், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை இன்னும் கடுமையாக அதிகரிக்க கூடும். இதனால் இந்தியாவின் சாமானிய மற்றும் மிடிஸ் கிளாஸ் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








