வெறும் 12 ஆயிரம் ரூபாய்க்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விற்பனைக்கு கொண்டு வர கல்லூரி மாணவர்கள் தீவிரம்..
குப்பையில் கிடந்த பஜாஜ் சீட்டாக் ஸ்கூட்டரை, வெறும் 12 ஆயிரம் ரூபாய் செலவில், எலக்ட்ரிக் வாகனமாக மாற்றி, கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
குப்பையில் கிடந்த பஜாஜ் சீட்டாக் ஸ்கூட்டரை, வெறும் 12 ஆயிரம் ரூபாய் செலவில், எலக்ட்ரிக் வாகனமாக மாற்றி, கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். அதனை வணிக ரீதியில் விற்பனைக்கு கொண்டு வர அவர்கள் முயன்று வருகின்றனர். இதுதொடர்பான விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பஜாஜ் நிறுவனத்தில் இருந்து வெளிவந்த மிகவும் பிரபலமான ஸ்கூட்டர்களில் ஒன்று சீட்டாக். சீட்டாக் ஸ்கூட்டர் கடந்த 1972ம் ஆண்டு முதல் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. 2002ம் ஆண்டுக்கு முன்பு வரை 2 ஸ்ட்ரோக் இன்ஜினுடனும், 2002ம் ஆண்டுக்கு பின் 4 ஸ்ட்ரோக் இன்ஜினுடனும் சீட்டாக் ஸ்கூட்டர் வெளிவந்தது.

1990களில் சாலை முழுவதும் சீட்டாக் ஸ்கூட்டர்கள் நிறைந்து காணப்படும். ஆனால் சீட்டாக் ஸ்கூட்டரை இன்று சாலைகளில் காணமுடியாது. ஏனெனில் 2006ம் ஆண்டிலேயே, சீட்டாக் ஸ்கூட்டரின் உற்பத்தியை பஜாஜ் நிறுவனம் நிறுத்திவிட்டது.

ஆனால் துருப்பிடித்து மூலையில் வீசப்பட்ட பஜாஜ் சீட்டாக் ஸ்கூட்டருக்கு, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் கல்லூரி மாணவர்கள் சிலர் மீண்டும் உயிர் கொடுத்துள்ளனர். அதுவும் பேட்டரி வடிவில். சீட்டாக் ஸ்கூட்டர்கள் பேட்டரியில் இயங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா?

பெங்களூருவில் உள்ள சப்தகிரி இன்ஜினியரிங் கல்லூரியில், இறுதியாண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வரும் மாணவர்கள்தான், பழைய துருப்பிடித்த பஜாஜ் சீட்டாக் ஸ்கூட்டரை எலக்ட்ரிக் வாகனமாக மாற்றியுள்ளனர்.

சிவாஜி நகர் என்ற பகுதியில் உள்ள ஒரு கேரேஜில், பஜாஜ் சீட்டாக் ஸ்கூட்டர் துருப்பிடித்த நிலையில் மூலையில் கிடாசப்பட்டிருந்தது. அதனை வெறும் 500 ரூபாய்க்கு, மாணவர்கள் வாங்கியுள்ளனர். பேரம் பேசியதால்தான் 500 ரூபாய்க்கு, பஜாஜ் சீட்டாக் ஸ்கூட்டர் அவர்களுக்கு கிடைத்தது.

பஜாஜ் சீட்டாக் ஸ்கூட்டரை வாங்கிய உடனேயே, மாணவர்கள் குழுவினர் அதனை முழுவதுமாக பிரித்து போட்டு விட்டனர். பின்னர் அதனை பேட்டரி பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் வாகனமாக மாற்ற சுமார் 2 மாதங்கள் பகல், இரவாக மாணவர்கள் குழுவினர் கடினமாக உழைத்துள்ளனர்.

மாணவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள ஹேமந்த் குமார் என்பவர் கூறுகையில், ''இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள DC கண்ட்ரோலர், ஹெட்லைட், இன்டிகேட்டர் மற்றும் ஹாரன் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது'' என்றார்.

முழுவதும் பிரித்து போடப்பட்ட பஜாஜ் சீட்டாக் ஸ்கூட்டரை, மீண்டும் கட்டமைத்து, எலக்ட்ரிக் வாகனமாக மாற்ற மொத்தம் 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகியுள்ளது. மாணவர்களின் இந்த சாதனையால் பெருமிதம் கொள்வதாக அக்கல்லூரி முதல்வர் சிவபாசப்பா தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அத்துடன் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதற்கு மாற்றாக ஒரு சக்தியை கண்டறிய வேண்டும் என்பதற்காக, மாணவர்கள் இந்த ப்ராஜெக்டில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர்.

மாணவர்கள் கண்டறிந்துள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முழுமையாக சார்ஜ் ஏற்ற 3-4 மணி நேரங்கள் ஆகும். ஸ்கூட்டரின் இடது பக்கத்தில் சாக்கெட் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதில், AC அடாப்டர் மூலமாக மிக எளிதாக சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும்.

தாங்கள் தயாரித்துள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டரை, வணிக ரீதியில் தொடர்ந்து உற்பத்தி செய்ய வேண்டும் என மாணவர்கள் விரும்புகின்றனர். அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய பஜாஜ் நிறுவனத்தை அணுக திட்டமிட்டுள்ளனர்.

இக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், விவசாயிகளுக்கு உதவும் வகையில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய கலப்பை இயந்திரம் ஒன்றையும் கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு நகரை மையமாக கொண்டு செயல்படும் ஏத்தர் நிறுவனம், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகில் புரட்சியை ஏற்படுத்தும் வகையிலான 2 ஸ்கூட்டர்களை சமீபத்தில் லான்ச் செய்தது. இதுதவிர பல்வேறு நிறுவனங்களும் வேக வேகமாக எலக்ட்ரிக் வாகனங்களை களமிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஆனால் அவற்றின் விலை சற்று அதிகமாக உள்ளது. எனினும் பெட்ரோல், டீசலின் விலை உயர்வால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறியே ஆக வேண்டிய நெருக்கடி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், மலிவான விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் லான்ச் ஆனால், மக்களுக்கு பயன் உள்ளதாக அமையும்.
Source: ET Auto
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








