சவூதி எண்ணெய் சப்ளையில் சிக்கல்... சைக்கிளை தூசி தட்ட வேண்டிய நிலை வருமா?
மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றம் தற்போது எண்ணெய் சந்தையில் கடுமையாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. சவூதி அரேபியாவின் முக்கியமான எண்ணெய் வினியோக குழாய் மீது ஈரானுக்கு ஆதரவான போராளிக் குழு நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து, சில நாடுகளுக்கான கச்சா எண்ணெய் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உலக நாடுகளில் எரிபொருள் விலை மேலும் உயருமா என்ற கவலை உருவாகியுள்ளது.
சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெயை செங்கடல் பகுதியில் உள்ள யன்பு துறைமுகத்துக்கு கிழக்கு-மேற்கு தடத்தின் எண்ணெய் குழாய் (East-West Pipeline) வழியாக கொண்டு செல்லப்படுகிறது. 1,200 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த குழாய், பாரசீக வளைகுடா வழியாக எண்ணெயை அனுப்புவதற்கு மாற்று பாதையாகவும் செயல்படுகிறது.

இந்த குழாய் மீது கடந்த 10ம் தேதி தொடங்கி நடத்தப்பட்ட தொடர் ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு, அதன் செயல்பாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக யன்பு துறைமுகத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் சில எண்ணெய் ஏற்றுமதி பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சவூதியின் இந்த முக்கிய மாற்று எண்ணெய் பாதையும் முடங்கியுள்ளது. இதனால் உலக எண்ணெய் சந்தையில் வினியோகம் தொடர்பான கவலை மேலும் அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய, ஆசிய நாடுகள் இந்த பிரச்சனையால் எரிபொருள் விலை உயர்வை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சில ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் மாத இறுதியில் அனுப்பப்பட வேண்டிய சவூதி கச்சா எண்ணெய் சரக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆசியாவுக்கான சில சரக்குகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், மாற்று கடல் வழிகளைப் பயன்படுத்தி, குறிப்பாக ஆசிய நாடுகளுக்கு எண்ணெய் அனுப்பும் முயற்சிகளை சவூதி அரேபியா மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்துதான் அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே, சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள எண்ணெய் சப்ளை பிரச்னை குறித்து அனைத்து நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இதற்கிடையே, உலகின் எண்ணெய் சந்தையை கண்காணிக்கும் சர்வதேச எரிசக்தி முகமை (International Energy Agency - IEA), மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள வினியோக பாதிப்புகள் காரணமாக எண்ணெய் சந்தையில் அழுத்தம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பா மற்றும் ஆசியாவில் டீசல் விலையில் தாக்கம் அதிகம் இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டால், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தால் கார், லாரிகள், பேருந்துகள், சரக்கு வாகனங்கள் மற்றும் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும் வர்த்தக வாகனங்களின் செலவும் உயரும். இதன் தாக்கம் படிப்படியாக அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் தெரிய வாய்ப்புள்ளது. விமானப் போக்குவரத்து மற்றும் பொதுப்போக்குவரத்து சேவைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அது போதுமானதாக இல்லை.
மேலும், இந்த வினியோகப் பிரச்சனை நீடித்து, எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்தால், குறுகிய தூர பயணங்களுக்கு காருக்கு பதிலாக சைக்கிள் அல்லது பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படலாம். எனினும், இந்த நிலைமையை சமாளிக்கும் வகையில் போதிய இருப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதேநிலை நீடித்தால் நிச்சயமாக இது பெரிய அளவிலான தாக்கத்தை உலக அளவில் ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications


