உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 விமானத்தை இந்திய நிறுவனங்கள் வாங்கவில்லை ஏன்?
உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 விமானத்தை இந்திய நிறுவனங்கள் வாங்குவதற்கு ஏன் ஆர்வம் காட்டவில்லை என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் காணலாம்.
வாழ்வில் ஒருமுறையாவது ஏர்பஸ் ஏ380 இரண்டடுக்கு விமானத்தில் பயணித்துவிட வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஏராளம். ஆனால், இந்த விமானத்தை இந்திய நிறுவனங்கள் இதுவரை வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. இதற்கான காரணங்களை பார்க்கலாம்.

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமாக கருதப்படும் ஏர்பஸ் ஏ380 விமானத்தை தரை இறக்குவதற்கும், அதனை கையாள்வதற்கும் விமான நிலையங்களில் அதிக அளவிலான கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகிறது. இதற்கான முதலீடு மிக அதிகமாக இருக்கிறது.

பயணிகளை கையாள்வதற்கான நேரம், அவர்களுடைய உடைமைகளை ஏற்றுவதற்கான நேரம் அதிகம் என்பதுடன், உடைமைகளை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் இதற்கென பிரத்யேக வாகனங்கள் தேவைப்படுகிறது. பிற விமானங்களுக்கு பயன்படும் வாகனங்களை இதற்கு பயன்படுத்த இயலாது.

ஏனெனில், இந்தியாவில் நடுத்தர வகை விமானங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், இதற்கான முதலீடு தேவையற்றதாக விமான நிறுவனங்களும், விமான நிலைய நிர்வாகங்களும் கருதுகின்றன.

ஓடுபாதை நீள, அகலம் மற்றும் இந்த விமானத்தை நிறுத்துவதற்கான இடம் மற்றும் சிக்னல் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டி இருக்கிறது. இதுவே முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

இவற்றை எல்லாம் செய்தால்கூட இந்தியாவில் இதுபோன்ற மிக பிரம்மாண்ட விமானங்களுக்கான தேவை மிக குறைவு. இதற்கு பூகோள ரீதியிலான அமைப்பும் முக்கிய காரணமாக இருக்கிறது.

துபாய், அபுதாபி உள்ளிட்ட நகரங்கள் மற்றும் பிராங்க்ஃபர்ட் உள்ளிட்ட நகரங்கள் பூகோள ரீதியில் விமானங்கள் நின்று செல்வதற்கான மையப்புள்ளிகளாக விளங்குகின்றன. பல்வேறு நாடுகளிலிருந்து வரும் பயணிகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கான நீண்ட தூர சேவைக்கு இங்கு அதிக தேவை இருக்கிறது.

அதேபோன்று, இந்த பக்கத்தில் ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் அங்கிருந்து இணைப்பு கிடைக்கிறது. இதனால்தான், அரபு நாடுகளை சேர்ந்த எமிரேட்ஸ், எதிஹாட் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக அளவில் இந்த ஏர்பஸ் ஏ380 விமானத்தை பயன்படுத்துகின்றன. தேவை மிக அதிகம்.

ஆனால், இந்தியாவில் நிலைமை அப்படியில்லை. கடந்த ஆண்டு அமெரிக்காவிலிருந்து அபுதாபி வரை இயக்கப்பட்ட ஏர்பஸ் ஏ380 விமானத்தை மும்பை வரை நீடித்ததது. ஆனால், அந்த விமானத்திற்கு பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. அதாவது, விமான இருக்கைகள் முழுவதுமாக நிரம்பவில்லை.

இதையடுத்து, அந்த விமான சேவையை எதிஹாட் நிறுவனம் சில மாதங்களிலேயே ரத்து செய்தது. ஆனால், எமிரேட்ஸ் நிறுவனம் மட்டும் இப்போது துபாயிலிருந்து மும்பைக்கு ஏர்பஸ் ஏ380 விமான சேவையை வழங்கி வருகிறது.

எனினும், டெல்லியிலிருந்து அமெரிக்காவிலுள்ள சான்பிரான்சிஸ்கோ நகருக்கு போயிங் 777 விமானத்தை ஏர் இந்தியா இயக்கி வருகிறது. அதேபோன்று, 737, 787 உள்ளிட்ட விமானங்களும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது இண்டிகோ, கோ ஏர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏர்பஸ் ஏ320 விமானங்களை இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்துகின்றன. ஏர்பஸ் ஏ380 விமானத்தின் விலையும், பராமரிப்பு செலவும் அதிகம். எரிபொருள் சிக்கனமும் நம் நாட்டு நிறுவனங்களுக்கு கட்டுப்படியாகாது என்ற நிலைதான் இருக்கிறது.

கட்டணத்தை அதிகம் நிர்ணயிக்கும் நிலை வரும். இதனால், பயணிகள் இந்த விமான சேவையை தவிர்க்க தொடங்கி விடுவர் என்ற அச்சமும் இந்திய நிறுவனங்களுக்கு ஏர்பஸ் ஏ380 மீது ஈர்ப்பு ஏற்படவில்லை.

இதனால்தான் ஏர்பஸ் ஏ80 விமானத்தை இந்திய நிறுவனங்கள் தவிர்த்து வருகின்றன. எனினும், இந்தியாவில் டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் நகர விமான நிலையங்கள் மட்டும் ஏர்பஸ் ஏ380 விமானத்தை தரை இறக்குவதற்கான கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கின்றன.

இவை இந்திய வான் எல்லையை பயன்படுத்தி கடந்து செல்லும் ஏர்பஸ் ஏ380 விமானத்தை அவசர சமயத்தில் தரை இறக்க வசதிபடுமே தவிர்த்து, இந்தியாவுக்காக பிரத்யேக விமானங்களை தரை இறக்குவதற்கான வசதியை அளிக்காது. அதேநேரத்தில், மிக சொகுசான பயணத்தை அனுபவிக்க, வெளிநாடு செல்லும்போது ஏர்பஸ் ஏ380 விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நழுவ விடாதீர்.


Click it and Unblock the Notifications