கொல்கத்தா காவல் படையில் இணைந்து கெத்து காட்டும் அல்ட்ராவைலட் EV பைக்!
இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான அல்ட்ராவைலட், கொல்கத்தா காவல் துறைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய X-47 ஸ்கைஃபோர்ஸ் என்ற எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக 183 ஸ்கைஃபோர்ஸ் பைக்குகளை கொல்கத்தா லால்பஜார் காவல் துறை தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் அதிகாரப்பூர்வமாக காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டன.
இந்தியாவில் ரோந்துப் பணிகளுக்காக இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மின்சார பைக்குகள் மாநில காவல் படையில் சேர்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும். தினசரி ரோந்து மற்றும் அவசர கால நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் இந்த பைக்குகள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் காவல்துறையினர் தங்களின் கடமைகளை தடையின்றி செய்ய பல சிறப்பு மாற்றங்கள் இந்த பைக்கில் செய்யப்பட்டுள்ளன. அவசர கால அறிவிப்புகளை வெளியிட பப்ளிக் அட்ரஸ் (PA) சிஸ்டம், மைக்கோஃபோன் மற்றும் வாக்கி-டாக்கி வைப்பதற்கான ஹோல்டர்கள், பலத்த சத்த எழுப்பும் சைரன் மற்றும் ஹூட்டர்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், காவல்துறையை அடையாளம் காட்டும் எல்.இ.டி பிளிங்கர் விளக்குகள், காவல்துறை வாகனம் என்பதற்கான சிறப்பு ஸ்டிக்கர்கள் மற்றும் தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல வசதியாக பக்கவாட்டு பெட்டிகள் (Side Panniers) ஆகிய அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த X-47 ஸ்கைஃபோர்ஸ் எலெக்ட்ரிக் பைக்கின் மோட்டார் 36 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 145 கிமீ வேகம் வரை செல்லும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஐடிசி சோதனை சான்றுபடி, இந்த பைக் 211 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும்.
நகரத்தின் போக்குவரத்து நெரிசலிலும், அவசரமான காலங்களில் அதிவேகமாக செயல்படவும் இந்த ஆற்றல் பெரிதும் உதவும். நீண்ட தூரம் செல்லும் திறன் காரணமாக ரோந்து பணியில் இருக்கும் காவலர்கள் அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
மோசமான சாலைகள், கரடுமுரடான பாதைகள் என எந்தவொரு சூழலிலும் எளிதாக பயணிக்கும் வகையில் இதன் கிராஸ்ஓவர் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் பைக் ஓட்டும் காவலர்களுக்கு அசதி ஏற்படாத வகையில் இதன் இருக்கை அமைப்பு மற்றும் சஸ்பென்ஷன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது, இந்த மின்சார பைக்கின் பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவு மிகக் குறைவாக இருக்கும் என்று தெரிகிறது. இது பராமரிப்புக்கான செலவை கணிசமாகக் குறைப்பதோடு, சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் வழிவகுக்கும். எதிர்காலத்தை நோக்கிய இந்த மாற்றம், நம் நாட்டு காவல் துறையின் நவீனமயமாக்கலில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


