கல்யாண மண்டபமாக மாறிய டெல்லி ஃபார்முலா- 1 கார் பந்தய களம்!
டெல்லி, அருகே நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் இப்போது கல்யாண சத்திரமாக மாறியிருக்கிறது. ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஃபார்முலா- 1 கார் பந்தய களமான இதில், தற்போது கல்யாண வைபவங்கள் நடத்தும் இடமாக மாறியிருக்கிறது.
ரேஸ் கார், பைக்குகளின் மிரட்டலான சப்தத்திற்கு பதிலாக இப்போது புத் சர்க்யூட்டில் டும்டும்டும் சப்தம் கேட்டும் இடமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஏமாற்றம்
அதிக அளவிலான வரிவிதிப்பு என்ற குற்றச்சாட்டை முன் வைத்து, கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் ஃபார்முலா- 1 கார் பந்தயங்களை சர்வதேச கார் பந்தய சம்மேளனம் விலக்கிக் கொண்டது. இதனால், 2,000 கோடியில் சர்வதேச தரத்தில் உருவான புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் வழக்கமான உற்சாகத்தை இழந்து தவிக்கிறது.

நிகழ்ச்சிகள்...
எதை நோக்கமாக கொண்டு அமைக்கப்பட்டதோடு, அதனை விடுத்து தற்போது இந்த புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் கார், பைக் அறிமுக நிகழ்ச்சிகளும், இரண்டாம் நிலை பந்தயங்களும் மட்டுமே நடத்தப்படுகின்றன. மேலும், கார், பைக் பந்தயங்களுக்கு பயிற்சி அமைப்புகளும் நடந்து வருகின்றன.

கல்யாண சத்திரம்
ஃபார்முலா- 1 கார் பந்தய போட்டிகள் நடக்காததால், பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் அங்கு திருமணம் ஒன்றுக்கான அழைப்பிதழ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் மட்டும்...
கடந்த 24ந் தேதி அங்கு ஒரு திருமண வைபவம் நடப்பதற்கான அழைப்பிதழே அது. அதில், இது இந்தியாவில் மட்டுமே நடக்கும் என்ற வாசகமும் இடம்பெற்றிருக்கிறது.

வருமானம்...
இதுபோன்று திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடுவதன் மூலமாக சற்று வருவாயை பெருக்கிக் கொள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டின் நிர்வாகம் முடிவு செய்திருப்பது தெளிவாகியுள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி...
திருமணத்திற்கு வாடகைக்கு விட்டதற்கு சமூக வலைதளங்களில் கார் பந்தய ரசிகர்கள் கண்டனத்தையும், வருத்தத்தையும் பதிவு செய்தனர்.

விளக்கம்...
இதுதொடர்பாக, சமூக வலைதளத்தில் பதலளித்துள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் நிர்வாகம், ரேஸ் டிராக்கில் திருமணம் நடக்காது. திருமணம் உள்ளிட்ட அனைத்து விதமான நிகழ்ச்சிகளை நடத்தும் அளவுக்கு எங்களிடம் பெரிய இடவசதி உள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது. அந்த அழைப்பிதழில் குறிப்பிட்டது போன்று இதெல்லாம் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும்!!

சரிதான்...
சரிதான்... அழைப்பிதழில் குறிப்பிட்டது போல இதெல்லாம் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும்!!


Click it and Unblock the Notifications








