குளோபல் மாடல் கான்செப்டில் புதிய கார்: மாருதி தீவிரம்

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி, உள்நாட்டு சந்தை விற்பனையில் 50 சதவீத பங்களிப்பை அளித்து வருகிறது. மேலும், வெளிநாடுகளுக்கும் கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
ஆனால், இந்த கார்கள் அனைத்தும் மாருதியின் தாய் நிறுவனமான ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனத்தின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.
ஆனால், தற்போது முதன்முறையாக சொந்த வடிவமைப்புடன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யும் விதத்தில் தரம், வசதிகள் மற்றும் தொழில்நுட்பம் கொண்ட புதிய குளோபல் காரை வடிவமைக்க மாருதி திட்டமிட்டுள்ளது.
சுஸுகி நிறுவனத்தின் குளோபல் கார் மாடல்களான ஸ்விப்ட், ரிட்ஸ் உள்ளிட்ட கார் வடிவமைப்புகளில் மாருதியின் வடிவமைப்பு எஞ்சினியர்கள் பங்கு பெற்றுள்ளனர்.
இந்த அனுபவ அறிவை அடிப்படையாக கொண்டு இந்தியாவிலேயே புதிய குளோபல் காரை மாருதி எஞ்சினியர்கள் வடிவமைக்க உள்ளனர்.
இதுகுறித்து மாருதியின் ஆர்&டி பிரிவு நிர்வாக அதிகாரி ஐ.வி. ராவ் கூறியதாவது:
"முதல் முறையாக புதிய குளோபல் காரை சொந்த தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பில் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக, ரோத்டாக்கில் உலக தரம் வாய்ந்த ஆர்&டி மையத்தை கட்டி வருகிறோம். இந்த மையத்தில் புதிய குளோபல் கார் வடிவமைக்கப்படும்.
இந்த புதிய குளோபல் கார் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்படும். வரும் 2017ம் ஆண்டுக்குள் புதிய குளோபல் காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். தவிர, புதிய 800 சிசி காரை முழுக்க முழுக்க சொந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கி வருகிறோம். விரைவில் இந்த கார் அறிமுகம் செய்யப்படும்," என்றார்.


Click it and Unblock the Notifications








