என்ன மனுஷன்யா... சோனு சூட் செய்யப்போகும் அடுத்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா இவரை நெனச்சு பெருமைப்படுவீங்க
நடிகர் சோனு சூட் உதவுவதை நிறுத்தவில்லை. அடுத்த நல்ல காரியம் ஒன்றை செய்யவுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களால் காற்று அதிகம் மாசடைந்து வருவதுதான் இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. இதுதவிர கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதும் இதற்கு மற்றொரு காரணம்.

எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் மற்றும் பல்வேறு சலுகைகளை மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் வழங்கி வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் வழங்கி வரும் ஊக்கம் காரணமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளன.

எலெக்ட்ரிக் கார்கள், எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள், எலெக்ட்ரிக் ரிக்ஸாக்கள் என ஏராளமான மின்சார தயாரிப்புகள் தற்போது அறிமுகமாகி வருகின்றன. இதில், எலெக்ட்ரிக் ரிக்ஸாக்கள் ஒருவரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வாகனங்களாகவும் உள்ளன. எனவே கொரோனா பெருந்தொற்கு காலகட்டத்தில் வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கு எலெக்ட்ரிக் ரிக்ஸாக்கள் வழங்கப்படவுள்ளன.

நடிகர் ஒருவர் இந்த எலெக்ட்ரிக் ரிக்ஸாக்களை பரிசாக வழங்கவுள்ளார். அவர் வேறு யாருமல்ல. சோனு சூட்தான் அந்த நடிகர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சோனு சூட் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

ஊரடங்கால் வேலையிழந்த வெளி மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கு சோனு சூட் உதவினார். அத்துடன் வேலையிழந்த பலருக்கு புதிய வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகளையும் அவர் செய்து கொடுத்தார். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டு இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறது.

ஆனாலும் சோனு சூட் உதவுவதை நிறுத்தவில்லை. இந்த பெருந்தொற்று காலகட்டத்தில் உதவி தேவைப்படும் நபர்களுக்காக தற்போது மற்றொரு புதிய முயற்சி ஒன்றை சோனு சூட் முன்னெடுத்துள்ளார். இதன் கீழ், கொரோனா பிரச்னையால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு எலெக்ட்ரிக் ரிக்ஸாக்களை அவர் பரிசாக வழங்கவுள்ளார்.

இந்த புதிய முயற்சிக்கு 'நீங்களாக சம்பாதியுங்கள். உங்கள் குடும்பத்தை நடத்துங்கள்' என பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சோனு சூட் கூறுகையில், ''கடந்த சில மாதங்களாக மக்கள் என் மீது அதிக அன்பு செலுத்தி வருகின்றனர். அவர்களுக்காக தொடர்ந்து இருக்க வேண்டும் என இது என்னை ஊக்குவிக்கிறது.

எனவே இந்த புதிய முயற்சியை தற்போது தொடங்கியுள்ளேன். பொருட்களை வழங்குவதை விட வேலைவாய்ப்புகளை கொடுப்பதுதான் மிகவும் முக்கியமானது என நான் நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் சொந்த காலில் நிற்பதற்கு இந்த முயற்சி உதவும்'' என்றார். தொடர்ந்து ஏராளமான உதவிகளை செய்து வரும் நடிகர் சோனு சூட்டிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு, எலெக்ட்ரிக் ரிக்ஸாக்களை வழங்க சோனு சூட் முடிவு செய்துள்ள நிலையில், ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்தியாவில் தற்போது பல்வேறு புதிய எலெக்ட்ரிக் ரிக்ஸாக்கள் அறிமுகமாக தொடங்கியுள்ளன. யு.பி.டெலிலிங்க்ஸ் லிமிடெட் நிறுவனம் கூட சமீபத்தில் புதிய எலெக்ட்ரிக் ரிக்ஸா ஒன்றை விற்பனைக்கு கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய தயாரிப்பிற்கு சிங்கம் Li-ion என பெயரிடப்பட்டுள்ளது. இதனை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு வெறும் 30 பைசா மட்டுமே செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ரிக்ஸாவின் விலை 1.85 லட்ச ரூபாய். ஆனால் மத்திய அரசின் ஃபேம் இந்தியா II திட்டத்தின் கீழ், 37 ஆயிரம் ரூபாய் மானியமாகவே கிடைத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








