விமானம் 10 ஆயிரம் அடிக்கு கீழ் பறக்கும்போது பேச கூடாது... இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
விமானம் 10 ஆயிரம் அடி உயரத்திற்கு கீழ் பறந்து கொண்டிருக்கும்போது, பைலட்களும், விமான ஊழியர்களும் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறை குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானங்களில் பைலட்களுக்கு ஏராளமான விதிமுறைகள் இருக்கின்றன. 10 ஆயிரம் அடி உயரத்திற்கு கீழாக பறந்து கொண்டிருக்கும்போது பேசக்கூடாது என்பதும் இதில் ஒன்று. விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டுதான், 10 ஆயிரம் அடி உயரத்திற்கு கீழாக பறந்து கொண்டிருக்கும் நேரத்தில், பைலட்கள் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு ஸ்டெரில் காக்பிட் விதி (Sterile Cockpit Rule) என்று பெயர். இந்த விதியின்படி 10 ஆயிரம் அடி உயரத்திற்கு கீழாக பறந்து கொண்டிருக்கும்போது பைலட்கள் தேவையில்லாமல் பேசக்கூடாது. ஒரு விமான விபத்தில் ஏராளமான பயணிகள் உயிரிழந்த காரணத்தால்தான், இந்த விதிமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

கடந்த 1974ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அமெரிக்காவின் சார்லஸ்டனில் இருந்து சார்லோட்டி டக்ளஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் 212 தரையிறங்குவதற்கு முன்னதாக விபத்தில் சிக்கியது. இதன் காரணமாக விமானத்தில் இருந்த 82 பயணிகளில், 69 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக நடந்த விசாரணையில், அந்த விமானத்தின் கேப்டனும், முதல் அலுவலரும் சம்பந்தமில்லாத உரையாடலில் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அவர்களின் கவனம் திசை திரும்பி விட்டது. தரையிறங்குவதற்கு முன்னதாக பரிசோதிக்க வேண்டிய உபரகணங்களை அவர்கள் பார்க்க தவறி விட்டனர்.

எனவே 7 ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்டெரில் காக்பிட் விதி அறிமுகம் செய்யப்பட்டது. அனைத்து விமான நிறுவனங்களும் இந்த விதியை அமல்படுத்த வேண்டும். இந்த விதியின் கீழ், விமான பயணத்தின் முக்கியமான கட்டத்தில், விமானத்தை பாதுகாப்பாக இயக்குவதற்கான பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விதிமுறை காக்பிட்டில் உள்ள பைலட்களுக்கு மட்டுமானது கிடையாது. விமான பணியாளர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். இந்த நேரத்தில் அவர்கள் சாப்பிட கூடாது. யாருடனும் தேவையற்ற உரையாடல்களில் ஈடுபடக்கூடாது. புத்தகம் படிக்க வேண்டியதாக இருந்தால், அது விமானத்தை பாதுகாப்பாக இயக்குவது தொடர்பானதாக இருக்க வேண்டும்.

மிகவும் அவசியமான நேரங்களில் பைலட்கள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரின் கவனத்தையும் அதிகரிப்பதற்காகவே இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது. விமானம் 10 ஆயிரம் அடி உயரத்திற்கு கீழ் பறந்து கொண்டிருக்கும்போது, அதிக கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக டேக் ஆஃப் மற்றும் லேண்ட் செய்வது ஆகியவைதான், விமான பயணத்தில் பைலட்களுக்கு மிகவும் சவாலான பணி.

இந்த நேரத்தில், பைலட்கள் விமான கட்டுப்பாட்டு மையத்துடன் பேச வேண்டியதாக இருக்கும். மேலும் விமானத்தின் கணிணியில் தரவுகளை வழங்குவது, உபகரணங்களை க்ராஸ்-செக் செய்வது உள்ளிட்ட பணிகளையும் அவர்கள் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும். எனவே இந்த நேரத்தில், விமானத்தை பாதுகாப்பாக இயக்குவது மட்டுமே பைலட்களின் தலையாக கடமையாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








