கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்ட ஆம்புலன்ஸ்... காவலர்கள் செய்த காரியத்திற்கு குவியும் பாராட்டு...
ஆம்புலன்ஸ் ஒன்று கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்ட நிலையில், காவலர்கள் துரிதமாக செயல்பட்டு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகிலேயே அதிக வாகனங்கள் இயங்கி கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதன் காரணமாக இந்திய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலைவிரித்தாடி வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருவதற்கு ஏற்ப, இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் சாலைகள் விரிவுபடுத்தப்படுவதில்லை.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதும்தான் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு முக்கியமான காரணமாக உள்ளது. அவசரமாக அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடியவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.

இதுதவிர அவசரமாக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ்களும் சில சமயங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ளும் அவல நிலை காணப்படுகிறது. இந்த வகையில் டிஎன்டி (DND - Delhi Noida Direct flyway) சாலையில் உள்ள சுங்க சாவடிக்கு அருகே ஆம்புலன்ஸ் ஒன்று கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது.
ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா புதிய மீட்டியோர் 350? வீடியோ!
தலைநகர் டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக டெல்லி எல்லைகளில் கடந்த ஒரு சில நாட்களாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் இன்று காலை (டிசம்பர் 7) ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் இந்த ஆம்புலன்ஸ் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் ஆம்புலன்ஸ் சிக்கியிருப்பதை கண்டதும் காவலர் ஒருவர் உடனடியாக களத்தில் இறங்கினார். அவர் ஆம்புலன்ஸ் விரைவாக செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தார். அத்துடன் மற்றொரு காவலரும் இந்த பணிகளில் உதவி செய்தார். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்து ஆம்புலன்ஸ் சென்றது.

அந்த காணொளி தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அத்துடன் ஆம்புலன்ஸ் வேகமாக செல்ல உதவிய காவலர்களுக்கு சமூக வலை தளங்களில் பாராட்டும் குவிந்து வருகிறது. ஆனால் நாம் ஏற்கனவே கூறியபடி இந்தியாவில் ஆம்புலன்ஸ்கள் இப்படி போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்வது இது முதல் முறை கிடையாது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூட ஐதராபாத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது. அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்துவதற்காக சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடினார். அவர் முன்னால் ஓடி மற்ற வாகனங்களை ஒதுக்கி விட்டு வழி ஏற்படுத்த, அவரை பின் தொடர்ந்து ஆம்புலன்ஸ் சென்றது.

கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் நடந்த அந்த சம்பவத்தின் காணொளியும் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி, சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவலருக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஆம்புலன்ஸ்களுக்கு போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி ஒரு சில வாகன ஓட்டிகளும் பிரச்னையாக உள்ளனர்.

ஆம்புலன்ஸ் வாகனங்கள் சைரன் ஒலியுடன் அவசர அவசரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அதற்கு வழி விட ஒரு சில வாகன ஓட்டிகள் மறுக்கின்றனர். இதன் காரணமாக ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைகளுக்கு சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டு, உள்ளே இருக்கும் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

ஆம்புலன்ஸ்களை பொறுத்தவரை ஒரு சில வினாடிகள் தாமதம் ஆனால் கூட ஆபத்து என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஆனால் அத்தகைய வாகன ஓட்டிகளை கடுமையாக தண்டிப்பதற்கான ஏற்பாடுகள் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் செய்யப்பட்டுள்ளன. இதன்படி ஆம்புலன்ஸ்களுக்கு வழி விட மறுக்கும் வாகன ஓட்டிகளுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, ஆம்புலன்ஸ்கள் மட்டுமல்லாது தீயணைப்பு வாகனம் போன்ற அவசர கால வாகனங்களுக்கு வழி விடாதவர்களுக்கு 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். அத்துடன் சிறை தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதை எல்லாம் மனதில் வைத்து கொண்டு, ஆம்புலன்ஸ்களுக்கு முறையாக வழி விடுவது அவசியம்.


Click it and Unblock the Notifications








