கொட்டும் மழையில் 4 மணி நேரம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய காவலர்... எஸ்பி கொடுத்த சர்ப்ரைஸ்...
கொட்டும் மழையில் 4 மணி நேரம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய காவலருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதை தடுக்கும் முயற்சிகளிலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளிலும், போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஒரு சில போக்குவரத்து காவலர்கள் பணியில் தங்கள் அர்ப்பணிப்பு உணர்வின் காரணமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விடுகின்றனர்.

இந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த போக்குவரத்து காவலர் முத்துராஜ் தற்போது மக்களின் மனதை வென்றுள்ளார். மழை கொட்டிய சூழலிலும், அவர் பின் வாங்காமல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் அவர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். கொட்டும் மழையில் அவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

தென் தமிழகத்தின் தூத்துக்குடியில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. சம்பவத்தன்று எப்போதும் பரபரப்பாக காணப்படும் விவிடி ஜங்ஷன் பகுதியில் கனமழை கொட்டியது. ஆனால் போக்குவரத்தில் குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, போக்குவரத்து காவலர் முத்துராஜ் சுமார் 4 மணி நேரம் கொட்டும் மழையில் நின்று தொடர்ச்சியாக பணியில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இந்த காணொளியை பார்த்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அவர், போக்குவரத்து காவலர் முத்துராஜூக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார். முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் இந்த காணொளி தற்போது வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறுகையில், ''கடினமான சூழ்நிலையில் முத்துராஜ் பணியாற்றியுள்ளார். அவரது கடமை உணர்வை அங்கீகரிக்க நான் விரும்பினேன்'' என்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரே நேரில் வந்து பாராட்டியதால், 34 வயதான போக்குவரத்து காவலர் முத்துராஜ் நெகிழ்ந்து போயுள்ளார்.

இதுகுறித்து முத்துராஜ் கூறுகையில், ''எஸ்பி நேரடியாக வந்து என்னை கௌரவிக்க நேரம் ஒதுக்கியது எனக்கு மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் ஏற்படுத்துகிறது. பொதுவாக எஸ்பி அலுவலகத்தில்தான் காவல் துறையினர் கௌரவிக்கப்படுவார்கள்'' என்றார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ''இது எனது பணி.

குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்களை நினைத்துதான் நான் கவலைப்பட்டேன். போக்குவரத்து சிக்னல்களில் காத்திருந்தால் அவர்கள் நனைந்து விடுவார்கள். எனவே சிக்னலை அணைத்து விட்டு, நானாகவே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினேன். இது அவர்களுக்கு கொஞ்சம் எளிமையாக இருக்கும்'' என்றார்.
இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக, சுமார் 4 மணி நேரம் கொட்டும் மழையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய காவலர் முத்துராஜ் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்தான். போக்குவரத்து காவலர்கள் சிலர் மீது வாகன ஓட்டிகளுக்கு விமர்சனம் இருக்கும் நிலையில், முத்துராஜ் போன்ற கடமை உணர்ச்சி மிக்கவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

காவல் துறையை சேர்ந்த ஒரு சிலர் இதுபோல் தங்களின் கடமையுணர்ச்சி மூலம் மக்களின் கவனத்தையும், பாராட்டுக்களையும் பெற்று விடுகின்றனர். அதேபோல் ஒரு சில காவலர்கள், தங்களின் வித்தியாசமான நடவடிக்கைகள் மூலமும் மக்களின் கவனத்தை ஈர்க்கின்றனர். தமிழக காவல் துறையை சேர்ந்த பலரை இதற்கு உதாரணமாக கூற முடியும்.

கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சமயத்தில் சென்னையில் போக்குவரத்து காவலர் ஒருவர், தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வாகன ஓட்டிகளிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஊரடங்கு சமயத்தில், வாகன ஓட்டிகள் பலர் தொடர்ச்சியாக வீட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருந்த சமயத்தில், அவர்களிடம் கெடுபிடி காட்டாமல் அவர் கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்தார்.

இதன் மூலம் அந்த சமயத்தில் தமிழக மக்கள் அனைவரின் கவனத்தையும் அவர் ஈர்த்தார். அதேபோல் அதே சென்னையில் காவல் துறை அதிகாரி ஒருவர், கோவிட்-19 வைரஸின் தோற்றத்தில் டிசைன் செய்யப்பட்ட தலை கவசத்தை அணிந்து கொண்டு, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதும், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








