சற்றும் யோசிக்காமல் 85 லட்ச ரூபாயை செலவழித்த இஸ்லாமியர்... காரணத்தை கேட்டு மெய் சிலிர்த்து போன இந்திய மக்கள்
சற்றும் யோசிக்காமல் 85 லட்ச ரூபாயை செலவழித்த இஸ்லாமியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் சிக்கி இந்தியா மூச்சு திணறி வருகிறது. கோவிட்-19 நோயாளிகள் பலருக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் இருப்பது வருத்தமான செய்தி. ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தீர்க்க மத்திய, மாநில அரசுகளும், முன்னணி நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த சூழலில், பியாரே கான் என்பவர் குறித்த தகவல் தற்போது நமக்கு தெரியவந்துள்ளது. நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 400 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்குவதற்காக தற்போது வரை இவர் 85 லட்ச ரூபாயை செலவிட்டுள்ளார். பியாரே கான் முன்னணி போக்குவரத்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சிறிய வியாபாரியின் மகன் ஆவார். அவரது தந்தை கடந்த 1995ம் ஆண்டு நாக்பூர் ரயில் நிலையத்திற்கு வெளியே ஆரஞ்சு பழங்களை விற்பனை செய்து வந்தார். ஆனால் பியாரே கான் தற்போது நல்ல நிலைமைக்கு உயர்ந்துள்ளார். இவரது ஆஸ்மி ரோடு கேரியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இன்று 1,200க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது.

பியாரே கான் வழங்கியுள்ள ஆக்ஸிஜனுக்கான தொகையை திருப்பி வழங்கி விடுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பியாரே கான் இதனை மறுத்து விட்டார். ரம்ஜான் மாத சகாத்தை அவர் இதற்கு காரணமாக கூறியுள்ளதாக தெரிகிறது. சகாத் என்பது இஸ்லாமியர்களின் மத கடமைகளில் ஒன்றாகும்.

இதன்படி இஸ்லாமியர்கள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் தங்களது செல்வத்தின் ஒரு பகுதியை நல்ல காரியங்களுக்கு தானமாக வழங்க வேண்டும். எனவே தான் செலவிட்ட தொகையை வேண்டாம் என பியாரே கான் மறுத்து விட்டார். இதற்காக பியாரே கானுக்கு தற்போது பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதனிடையே நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனை, எய்ம்ஸ் ஆகியவற்றுக்கு 116 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை தானமாக வழங்கவும் பியாரே கான் விரும்புகிறார். இந்த ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் விலை தோராயமாக 50 லட்ச ரூபாய் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

பியாரே கானை பொறுத்தவரை டேங்கர்களை பெறுவதுதான் மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவர் டேங்கர்களை ஏற்பாடு செய்துள்ளார். பிலாய், ராய்ப்பூர் மற்றும் ரூர்கேலா உள்ளிட்ட நகரங்களில் இருந்து டேங்கர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர பெங்களூரில் இருந்து 2 க்ரையோஜெனிக் கேஸ் டேங்கர்களும் வாடகைக்கு பெறப்பட்டுள்ளது.

இதற்கு வழக்கமான கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிக கட்டணத்தை பியாரே கான் கொடுத்துள்ளார். பூடான், நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் பியாரே கானின் அலுவலகங்கள் உள்ளன. சுமார் 2,000 லாரிகள் கொண்ட நெட்வொர்க்கை அவர் தற்போது நிர்வகித்து வருகிறார். இவரை போல் இன்னும் பலர் நோயாளிகளுக்கு தங்களது சொந்த செலவில் ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

சிலர் தங்களது காரை விற்றும், சேமிப்புகளில் இருந்தும் கூட நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு இக்கட்டான நிலையை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில், இத்தகைய உதவிகளை செய்யும் நபர்களுக்கு சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








