சாகச பயணம்... ஜேஇஇ தேர்வுக்காக ரிஸ்க் எடுத்த தந்தை, மகன்... சென்டருக்கு எப்படி வந்தார்கள் தெரியுமா?
ஜேஇஇ தேர்வுக்காக தந்தையும், மகனும் சவாலான பயணத்தை செய்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்பட்ட பிறகு மக்களின் இயல்பு வாழ்க்கை தலைகீழாக மாறி விட்டது. முக்கியமாக ஊரடங்கு காரணமாக பயணங்களை மேற்கொள்ள முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் 24ம் தேதி முதல் பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்ஸி என பொது போக்குவரத்து வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அத்துடன் தனியார் கார், டூவீலர்களை இயக்குவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இந்த எச்சரிக்கையை மீறிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக தற்போது பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது. அத்துடன் தனியார் கார், டூவீலர்களை இயக்குவதற்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு விட்டன.

எனினும் வாகன போக்குவரத்து இன்னும் முழுமையாக சீராகவில்லை. நாட்டின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே பேருந்துகள் இயங்குகின்றன. அதுவும் குறைவான எண்ணிக்கையில்தான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே அவசர தேவைக்காக பயணம் செய்ய வேண்டியவர்கள், சொந்த வாகனங்களில்தான் செல்ல வேண்டியுள்ளது.

சொந்தமாக காரோ அல்லது பைக்கோ இல்லாதவர்கள் சைக்கிள் மூலமாக பயணம் செய்கின்றனர். பல்வேறு காரணங்களுக்காக சைக்கிள் மூலம் வெகு தொலைவு பயணம் செய்த பலரின் கதையை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் ஜேஇஇ (JEE) தேர்வை எழுதுவதற்காக, தந்தையும், மகனும் சைக்கிள் பயணம் மேற்கொண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள கோசாபா என்னும் பகுதியை சேர்ந்தவர் ரபி. இவர் கார்பெண்டராக உள்ளார். இவரது மகன் டிகாண்டா மோண்டல். 19 வயதாகும் இவர் ஜேஇஇ தேர்வை எழுத வேண்டியிருந்தது. இதற்காக தந்தையும், மகனும் சைக்கிள் மூலமாக தேர்வு மையத்திற்கு சென்றுள்ளனர்.

இவர்கள் இருவரும் கடந்த செவ்வாய் கிழமை மாலை 6 மணியளவில் தங்கள் வீட்டில் இருந்து சைக்கிள் மூலம் புறப்பட்டனர். குறுக்கே உள்ள பித்யாதாரி ஆற்றை அவர்கள் இருவரும் படகு மூலம் கடந்தனர். அதன்பின்னர் சுமார் 4 மணி நேரம் சைக்கிள் ஓட்டி வந்து, பியாலி என்னும் கிராமத்தை அடைந்தனர். அங்கு அவர்களது உறவினர் ஒருவரின் வீடு உள்ளது. செவ்வாய் கிழமை இரவு இருவரும் அங்கு தங்கி விட்டனர்.

பின்னர் மறுநாள் காலை, அதாவது புதன் கிழமை காலை தேர்வுக்காக புறப்பட்டனர். தந்தை ரபி சைக்கிள் ஓட்டி வர, மகன் டிகாண்டா மோண்டல் பின் இருக்கையில் அமர்ந்து, படித்தவற்றை ஒரு முறை திரும்பி பார்த்து கொண்டே வந்துள்ளார். சரியாக காலை 9 மணியளவில் சோனார்பூர் பகுதியை அவர்கள் அடைந்துள்ளனர்.

அங்கு சைக்கிளை நிறுத்தி விட்டு மூன்று சக்கர வாகனம் மூலம் காரியா பகுதிக்கு அவர்கள் சென்றுள்ளனர். அங்கிருந்து 2 பேருந்துகள் மாறி கொல்கத்தா நகரில் உள்ள சால்ட் லேக் செக்டார் 5 பகுதியை அடைந்தனர். அங்குதான் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. சால்ட் லேக் செக்டார் 5 பகுதிக்கு அவர்கள் வந்தபோது காலை சுமார் 11 மணி ஆகியிருந்தது.

எனினும் தேர்வு மதியம் 3 மணிக்குதான் தொடங்குவதாக இருந்தது. எனவே அவர்களுக்கு போதுமான நேரம் கிடைத்தது. இந்த தேர்வுக்காக நீண்ட காலமாக தயாராகி வந்ததாகவும், எனவே எக்காரணத்தை கொண்டும் தேர்வை தவற விட்டு விடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்ததாகவும் டிகாண்டா மோண்டல் கூறியுள்ளார்.

கோசாபா பகுதியில் இருந்து தந்தையும், மகனும் புறப்பட்ட நிலையில் கொல்கத்தாவின் புறநகர் பகுதியை அடைவதற்கு மட்டும் சுமார் 75 கிலோ மீட்டர் அவர்கள் சைக்கிள் பயணம் செய்துள்ளனர். அதன்பின்னர் பொது போக்குவரத்து மூலமாக தேர்வு மையத்திற்கு வந்துள்ளனர். சைக்கிள், படகு மற்றும் பொது போக்குவரத்து என தேர்விற்காக தந்தை, மகன்மேற்கொண்ட சாகச பயணம் கவனம் பெற்றுள்ளது.

இதுகுறித்து டிகாண்டா மோண்டலின் தந்தை கூறுகையில், ''தேர்வு எழுத வேண்டும் என எனது மகன் மிகுந்த மன உறுதியுடன் இருந்தார். அதுதான் எங்களை அழைத்து வந்தது. மோசமான சாலையில் 75 கிமீ சைக்கிள் ஓட்டியதெல்லாம் ஒரு விஷயமே அல்ல. எனினும் கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் இருந்து கொண்டே இருந்தது'' என்றார். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








