லல்லு பிரசாத் யாதவின் உறவினரிடம் துப்பாக்கி முனையில் துணிகரம்... 6 ஆண்டுக்கு பின் அதிசயம் நிகழ்ந்தது
முன்னாள் முதல்வர் உறவினரிடம் துப்பாக்கி முனையில் கார் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், 6 ஆண்டுகளுக்கு பின் அதிசயம் நிகழ்ந்துள்ளது.

உலகிலேயே அதிக வாகனங்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. வீட்டுக்கு குறைந்தபட்சம் ஒரு வாகனம் என்ற நிலையை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டுள்ளது. ஒரு சில வீடுகளிலோ ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் ஒரு வாகனம் இருக்கிறது. இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு ஏற்ப, வாகன திருட்டு சம்பவங்களும் அதிக அளவில் நடைபெறுகின்றன.

வாகனங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுப்பதற்காக, பல்வேறு தொழில்நுட்பங்களை வாகன உற்பத்தி நிறுவனங்கள் வழங்குகின்றன. அத்துடன் வாகன உரிமையாளர்களும் மிகவும் கவனமாக இருக்கின்றனர். இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு மத்தியிலும், கொள்ளையர்கள் புதுப்புது டெக்னிக்குகளை பயன்படுத்தி வாகனங்களை திருடி சென்று விடுகின்றனர்.

வாகன திருட்டு சம்பவங்களை தடுப்பதற்கும், கொள்ளையடிக்கப்பட்ட வாகனங்களை மீட்பதற்கும் காவல் துறையினரும் தீவிரமாக முயற்சி செய்கின்றனர். திருடி செல்லப்பட்ட வாகனங்கள் கொள்ளையர்களிடம் இருந்து அவ்வப்போது பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த வகையில் அருணாச்சல பிரதேச மாநிலம் இட்டாநகர் போலீசார் சமீபத்தில் 26 கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இவை அனைத்தும் பல்வேறு நபர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டவை ஆகும். இதில், 22 டொயோட்டா பார்ச்சூனர் கார்களும், 2 ஹூண்டாய் கிரெட்டா கார்களும், 2 மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார்களும் அடக்கம். அத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட டொயோட்டா பார்ச்சூனர் கார்களில் ஒன்று, லல்லு பிரசாத் யாதவின் உறவினரிடம் கொள்ளையடிக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

பீகார் மாநில முன்னாள் முதல் அமைச்சரான லல்லு பிரசாத் யாதவின் உறவினர்களில் ஒருவரிடம் இருந்து 6 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த டொயோட்டா பார்ச்சூனர் கார் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையர்கள் காரை திருடி சென்றுள்ளனர். இந்த துணிகர சம்பவம் ஹரியானா மாநிலம் குர்கானில் நடந்துள்ளது.

கார் கொள்ளையடிக்கப்பட்ட உடனேயே இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் 6 ஆண்டுகளுக்கு பின், தற்போதுதான் கார் மீட்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள கார்களில் பெரும்பாலானவை, ஹரியானா, டெல்லி, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக பஸங் டமங் மற்றும் விக்கி குரங் என்ற இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள கார்களில் பெரும்பாலானவை போலியான நம்பர் பிளேட்டை கொண்டுள்ளன. அத்துடன் 5 கார்களின் சேஸிஸ் நம்பர் ஒன்றாகவே உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கார்களின் மதிப்பு சுமார் 9.34 கோடி ரூபாய் ஆகும்.

பொதுவாக கொள்ளையர்கள் கார்களை திருடினால், முக்கியமான பாகங்களை தனித்தனியாக கழற்றி, கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்து விடுவார்கள். காவல் துறையினர் தங்களை கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக, கொள்ளையர்கள் இந்த யுக்தியை கையாள்கின்றனர். ஆனால் இந்த சம்பவத்தில், கார்கள் அனைத்தும் ஒரே பீஸாக இருந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கார்கள் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய முதலீடாக உள்ளது. பல லட்சங்களை செலவழித்து வாங்கப்படும் கார்களை கண்ணும், கருத்துமாக பார்த்து கொள்வது அவசியம். ஒரு சிலர் கார்களை நிறுத்தி செல்லும்போது, சாவியை மறந்து விட்டு சென்று விடுகின்றனர். கொள்ளையடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவரை கூட இது திருட தூண்டிவிடும்.

எனவே கார்களில் எக்காரணத்தை கொண்டும் சாவியை வைத்து செல்லாதீர்கள். மேலும் மிக பாதுகாப்பான இடங்களில் கார்களை பார்க்கிங் செய்வதும் அவசியம். வெளியில் எங்கு சென்றாலும், பாதுகாப்பான இடமா? என்பதை உறுதி செய்த பிறகு கார்களை பார்க்கிங் செய்யுங்கள். அதே சமயம் ஒரு சிலர் இரவு நேரங்களில், கார்களை வீடுகளுக்கு வெளியே பாதுகாப்பற்ற முறையில் பார்க்கிங் செய்கின்றனர்.
இதுவும் தவறான விஷயம்தான். கூடுமான வரை கார்களை நிறுத்துவதற்கென பாதுகாப்பான ஒரு இடத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். இதுதவிர டிராக்கிங் டிவைஸ்களை கார்களில் இன்ஸ்டால் செய்து கொள்வதும் நல்லது. உங்கள் கண்காணிப்பையும் மீறி கார் கொள்ளையடிக்கப்பட்டால், அதனை ட்ரேஸ் செய்வதற்கு இது உதவிகரமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








