வெளியானது அதிரடி உத்தரவு... இந்திய கார்கள் இனி பாதுகாப்பில் வேற லெவலுக்கு போகப்போகுது... எப்படினு தெரியுமா?
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக அதிரடி உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும், இனிமேல் முன் பகுதி பயணியின் இருக்கைக்கும் ஏர்பேக் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்பதை அரசு தற்போது கட்டாயமாக்கியுள்ளது. கார்களின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக இந்த அதிரடி உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் ஓட்டுனர் இருக்கைக்கு மட்டும் ஏர்பேக் வழங்குவது கட்டாயமாக இருந்து வருகிறது. அதாவது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களும் குறைந்தபட்சம் ஓட்டுனர் இருக்கைக்கு ஒரு ஏர்பேக்கையாவது கொண்டிருக்க வேண்டும். அனைத்து கார்களிலும் ஓட்டுனர் இருக்கைக்கு ஏர்பேக் கட்டாயம் என்ற உத்தரவு கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள புதிய உத்தரவின் மூலம், இனி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களும் குறைந்தபட்சம் முன் பகுதியில் 2 ஏர்பேக்குகளை கொண்டிருக்கும். வாகன உற்பத்தி நிறுவனங்கள் விரும்பினால் எத்தனை ஏர்பேக்குகளை வேண்டுமானலும் வழங்கலாம். ஆனால் குறைந்தபட்சம் முன் பகுதியில் 2 ஏர்பேக்குகள் இருப்பது கட்டாயம்.

முன் பகுதியில் ஓட்டுனர் இருக்கைக்கு மட்டும் ஒரு ஏர்பேக் என்பது போதுமானதாக இல்லை. விபத்து நடைபெறும் சமயங்களில் ஓட்டுனருக்கு படுகாயம் ஏற்படுவதையோ அல்லது உயிரிழப்பு ஏற்படுவதையோ இது தவிர்த்து விடும்தான். ஆனால் ஏர் பேக் இல்லாததால், முன் இருக்கையில் உள்ள கோ-பாசஞ்சருக்கு படுகாயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படலாம்.

எனவேதான் தற்போது முன் இருக்கை பயணிக்கும் ஏர்பேக் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதாவது புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் கார் என்றால், ஏப்ரல் 1ம் தேதி முதல் முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகளை கொண்டிருப்பது கட்டாயம்.

அதே சமயம் இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் உள்ள கார் என்றால், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகளை கண்டிப்பாக கொண்டிருக்க வேண்டும். ஏற்கனவே விற்பனையில் உள்ள கார்களில் கூடுதலாக ஒரு ஏர்பேக்கை வழங்க வேண்டும் என்றால், சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும்.

எனவேதான் ஆகஸ்ட் 1ம் தேதி வரை என சற்று கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய உத்தரவு காரணமாக எண்ட்ரி-லெவல் கார்களின் விலை 5 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கே எண்ட்ரி-லெவல் கார்கள் என குறிப்பிட காரணம், விலை குறைவான அந்த கார்களில் தற்போது ஒரு ஏர்பேக் மட்டுமே வழங்கப்படுகிறது என்பதுதான்.

எனவே பெரும்பாலும் அந்த கார்களில்தான் வாகன உற்பத்தி நிறுவனங்கள் கூடுதலாக ஒரு ஏர்பேக்கை வழங்க வேண்டியிருக்கும். சற்று விலை அதிகமான கார்களில் ஏற்கனவே முன் பகுதியில் குறைந்தபட்சம் இரண்டு ஏர்பேக்குகளை வாகன உற்பத்தி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. எனவே அந்த கார்களின் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் இல்லை.


Click it and Unblock the Notifications








