கர்ப்பிணி மனைவியுடன் 1,200 கிமீ ஸ்கூட்டர் பயணம்... கணவர் சொன்ன காரணத்தை கேட்டு வியந்த உறவினர்கள்...
கர்ப்பிணி மனைவியுடன் கணவர் 1,200 கிலோ மீட்டர் ஸ்கூட்டர் பயணம் செய்திருக்கும் சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலுக்கு வந்ததில் இருந்து அவசர தேவைகளுக்கு பயணம் செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பேருந்து, ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டு விட்டாலும் கூட, நாட்டின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே அவை இயங்குகின்றன.

அத்துடன் மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் பொது போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் போக்குவரத்தும் இன்னும் சீராகவில்லை. எனவே அவசர பயணம் என்றால், மக்கள் தங்களது சொந்த வாகனங்களைதான் நம்பியுள்ளனர். சைக்கிள், பைக் மற்றும் கார்கள் மூலம் பலர் தற்போது ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த வரிசையில் கணவர் ஒருவர் தனது கர்ப்பிணி மனைவியுடன் ஸ்கூட்டரில் தற்போது 1,200 கிலோ மீட்டர்களுக்கும் மேல் பயணம் செய்துள்ளார். வேலையிழப்பால் ஏற்பட்ட வறுமைக்கு மத்தியில் அவர் செய்துள்ள இந்த பயணத்திற்கான காரணம் அவரது உறவினர்கள் மட்டுமின்றி, பொது மக்கள் அனைவரையும் மூக்கின் மேல் விரலை வைக்க செய்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள காண்டா டோலா என்னும் கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்ஜெய் குமார். இவருக்கு 27 வயதாகிறது. இவரது மனைவி சோனி ஹெம்ராம். இவருக்கு 22 வயதாகிறது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் டி.எட்., (DEd - Diploma in Education) தேர்வு எழுதியாக வேண்டிய சூழல் சோனி ஹெம்ராமுக்கு இருந்தது.

ஆசிரியராக வேண்டும் என விரும்புவர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும். ஆனால் தனஜ்ஜெய் குமார்-சோனி ஹெம்ராம் தம்பதியின் ஊரில் இருந்து குவாலியர் சுமார் 1,200 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது. பொது போக்குவரத்து சீராக இருந்தால் கூட, சற்று எளிதாக சென்று விடலாம். ஆனால் பொது போக்குவரத்து இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

எனினும் தனது மனைவி பள்ளி ஆசிரியராக உருவெடுக்க வேண்டும் என தனஜ்ஜெய் குமார் விரும்பினார். எனவே அவரை ஸ்கூட்டரில் அழைத்து கொண்டு குவாலியருக்கு சென்றுள்ளார். ஜார்கண்ட், பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் என நான்கு மாநிலங்களின் வழியாக சுமார் 1,200 கிலோ மீட்டர்கள் தூரம் அவர்கள் இருவரும் ஸ்கூட்டரிலேயே பயணம் செய்துள்ளனர்.

மழையிலும், மோசமான சாலைகளிலும் அவர்களின் பயணம் அமைந்திருந்தது. பஸ் மற்றும் ரயில்களின் போக்குவரத்து சீரடையாத காரணத்தால், இந்த தம்பதிக்கு வேறு வழியில்லாத சூழல் இருந்தது. எனவே இந்த சவாலான பயணத்தை அவர்கள் செய்துள்ளனர். இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். சோனி ஹெம்ராம் தற்போது கர்ப்பமாக உள்ளார்.

இருந்தாலும் தேர்வை மனதில் வைத்து சவாலான பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து தனஜ்ஜெய் குமார் கூறுகையில், ''பஸ், ரயில் போன்ற போக்குவரத்து வழிகள் இல்லாததால், சாலை மார்க்கமாக எங்களது இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்ய முடிவு செய்தோம். கர்ப்பமாக உள்ள எனது மனைவி முதலில் இந்த கடினமான பயணத்தை மேற்கொள்ள தயங்கினார்.

ஆனால் நான் தீர்மானமாக இருப்பதை பார்த்த பின் இந்த நீண்ட பயணத்தை மேற்கொள்வதற்கு அவர் ஒப்பு கொண்டார். குவாலியர் வருவதற்கு நான் டாக்ஸியை வாடகைக்கு அமர்த்தியிருந்தால், 30,000 ரூபாய் வரை செலவாகியிருக்கும். என்னை பொறுத்தவரை அது மிகப்பெரிய தொகை. எனவே எங்களிடம் இருந்த சிறிய நகையை அடமானம் வைத்து, 10,000 ரூபாய் திரட்டினோம்.

இதில், நாங்கள் குவாலியர் வருவதற்கான ஒரு வழி பயணத்திற்கே 5,000 ரூபாய் செலவாகி விட்டது'' என்றார். தனஜ்ஜெய் குமார் சமையல்காரராக வேலை செய்து வந்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே அவர் வேலையை இழந்து விட்டார். இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவர் இந்த சவாலான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இவர்களின் பயணம் குறித்த தகவல்கள் தெரியவந்தவுடன் குவாலியர் அரசு அதிகாரிகள், அவர்களுக்கு சிறிய அளவிலான பண உதவி மற்றும் உணவுக்கான வசதிகளை வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சோனி ஹெம்ராம் கர்ப்பமாக இருப்பதால், மருத்துவ சோதனைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








