முதல்முறையாக மின்சார உந்துவிசை நுட்பத்துடன் இஸ்ரோ செயற்கைகோள்!
முதல்முறையாக ஜிசாட்- 9 செயற்கைகோளில் ரசாயன எரிபொருள் மட்டுமின்றி, மின்சார உந்துவிசை தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டு இருக்கிறது.
தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள அண்டை நாடுகளுக்கான பரிசாக ஜிசாட்- 9 தகவல் தொழில்நுட்ப செயற்கைகோளை இந்தியா இன்று ஏவ இருக்கிறது. இயற்கை பேரழிவுகள் குறித்து தெற்காசிய நாடுகள் முன்கூட்டியே எச்சரிக்கை பெறும் விதத்தில் இந்த செயற்கைகோள் செலுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், முதல்முறையாக இந்த செயற்கைகோள் இயங்குவதற்கான எரிபொருள் தொழில்நுட்பத்தில் புதிய யுக்தியை இஸ்ரோ பயன்படுத்தி உள்ளது. எதிர்காலத்தில் செயற்கைகோள் தயாரிப்பு துறையில் பல புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இந்த எரிபொருள் நுட்பம் அடித்தளமாக அமையும். சற்று விரிவாகவே பார்ப்போம்.

ஜிசாட்- 9 செயற்கைகோள் ஜிஎஸ்எல்வி எஃப்- 09 ராக்கெட் மூலமாக ஏவப்பட உள்ளது. இந்த நிலையில், செயற்கைகோள் புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு, அது இயங்குவதற்கு ரசாயன எரிபொருள் நிரப்பி செலுத்தப்படும்.

ஜிசாட் - 9 செயற்கைகோள் 12 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது. இந்த செயற்கைகோளுக்கு 250 கிலோ முதல் 300 கிலோ அளவிற்கு ரசாயன எரிபொருள் வைத்து நிரப்பி அனுப்பப்படுவது வழக்கம். ஆண்டுக்கு 25 கிலோ முதல் 30 கிலோ வரையிலான ரசாயன எரிபொருள் செயற்கைகோள் இயங்குவதற்கு பயன்படும்.

ஆனால், இன்று அனுப்பப்பட இருக்கும் ஜிசாட்- 9 செயற்கைகோளில் ரசாயன எரிபொருள் மட்டுமின்றி, இபிஎஸ் சிஸ்டம் எனப்படும் மின்சார உந்துவிசையில் இயங்குவதற்கான தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இபிஎஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருப்பதால், ஜிசாட்- 9 செயற்கைகோளில் வெறும் 80 கிலோ மட்டுமே ரசாயன எரிபொருள் வைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, வழக்கமான அளவில் இது 25 சதவீதம் மட்டுமே. ரசாயனம் மற்றும் மின்சார உந்துவிசை நுட்பத்தில் இயங்குவதால் இது ஹைப்ரிட் செயற்கைகோளாக இருக்கிறது.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக செயற்கைகோள் எடை வெகுவாக குறையும். எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக பல்வேறு அனுகூலங்கள் கிடைக்கும். விண்ணில் ஏவப்பட்டு 2 வாரங்களுக்கு பின் இபிஎஸ் எனப்படும் மின்சார உந்துவிசை நுட்பம் செயற்கைகோளில் செயல்பட துவங்கும்.

அடுத்து 12 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை இந்த மின்சார உன்துவிசை தொழில்நுட்பத்தில் செயற்கைகோள் இயங்கும். இதன்மூலமாக, ரசாயன எரிபொருள் பயன்பாடு என்பது அதிகம் தேவைப்படாது. எனவே, தயாரிப்பு மற்றும் செயற்கைகோளுக்கான எரிபொருளுக்கான செலவு வெகுவாக குறையும். ஆயுட்காலத்தையும் அதிகரிக்க முடியும்.

தற்போது ஜிசாட் - 9 செயற்கைகோளில் இருக்கும் இபிஎஸ் சிஸ்டம் பரிசோதனை முயற்சியாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தை முழு அளவில் பயன்படுத்துவதற்கும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

புதிய ஜிசாட் - 9 செயற்கைகோளில் 12 கேயூ டிரான்ஸ்பான்டர்கள் இந்த செயற்கைகோளில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. நமது அண்டை நாடுகளான நேபாளம், பூட்டான், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தலா ஒரு டிரான்ஸ்பான்டர்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். பாகிஸ்தான் மட்டும் இந்த திட்டத்தில் பங்குபெறவில்லை.

கல்வித் துறை, பேரழிவு முன் எச்சரிக்கை, தகவல் தொடர்பு உள்ளிட்ட பன்முக பயன்பாட்டு பலன்களை இந்த செயற்கைகோள் மூலமாக அண்டை நாடுகள் பெற முடியும். இந்த செயற்கைகோள் தயாரிப்பு மற்றும் ஏவுவதற்கான ரூ.450 கோடி செலவை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








