ரொம்ப பெரிய மனசு... பரிசாக கிடைத்த மஹிந்திரா காரை நடராஜன் என்ன செய்தார் தெரியுமா? பாராட்டு குவிகிறது...
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனின் செயலுக்கு தற்போது அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட நடராஜன் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் 6 பேருக்கு, தனது சொந்த செலவில், புதிய தலைமுறை தார் எஸ்யூவி பரிசாக வழங்கப்படும் என மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த வாக்குறுதிப்படி, கிரிக்கெட் வீரர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள மஹிந்திரா ஷோரூம்கள் வாயிலாக புதிய தலைமுறை தார் எஸ்யூவிகள் பரிசாக வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜனும், புதிய தலைமுறை தார் எஸ்யூவியை பரிசாக பெற்றுள்ளார்.

ஆனால் அந்த காரை அவர் பயன்படுத்தப்போவதில்லை. ஆம், தனக்கு பரிசாக கிடைத்த புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி காரை, தனது நலம் விரும்பியான ஜெயப்பிரகாஷ் என்பவருக்கு நடராஜன் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். ஜெயப்பிரகாஷ் பற்றி நடராஜன் பல்வேறு பேட்டிகளில் குறிப்பிட்டிருப்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

நடராஜன் இன்று மிகப்பெரிய உயரத்தை எட்டியுள்ளதற்கு, ஜெயப்பிரகாஷ் மிக முக்கியமான காரணமாக இருந்தவர். அந்த நன்றியை நடராஜன் கொஞ்சம் கூட மறக்கவில்லை. தனக்கு பரிசாக வந்த புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியை, அவர் ஜெயப்பிரகாஷிற்கு பரிசாக வழங்கியிருப்பது அதற்கு சிறு உதாரணம் மட்டுமே.

நடராஜனின் இந்த செயலுக்காக, சமூக வலை தளங்களில் அவருக்கு ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். புதிய தலைமுறை தார் எஸ்யூவி டெலிவரி கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் திண்டாடி வரும் நிலையில், தனக்கு பரிசாக கிடைத்த அந்த காரை நடராஜன் தனது வழிகாட்டிக்கு பரிசாக வழங்கியிருப்பது பெரிய விஷயம்தான்.

மஹிந்திரா தார் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எஸ்யூவி ரக கார் ஆகும். இதன் புதிய தலைமுறை மாடலை மஹிந்திரா நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்தது. பழைய மாடலும் ஒப்பிடும்போது புதிய தலைமுறை மாடல் முற்றிலும் புதிய அவதாரம் எடுத்திருந்ததால், வாடிக்கையாளர்களை கவர்ந்தது.

எனவே இந்தியா முழுவதும் பிரபலங்கள் உள்பட வாடிக்கையாளர்கள் பலர் போட்டி போட்டு கொண்டு புதிய தலைமுறை தார் எஸ்யூவியை முன்பதிவு செய்தனர். ஆனால் அவர்கள் அனைவருக்கும் புதிய தலைமுறை தார் எஸ்யூவியை உடனடியாக டெலிவரி செய்ய முடியாத சூழலில் மஹிந்திரா நிறுவனம் உள்ளது. உலக அளவில் செமி கண்டக்டர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையே இதற்கு காரணம்.

ஆட்டோமொபைல் துறைக்கு தேவையான முக்கிய பாகங்களில் ஒன்றான செமி கண்டக்டர்களுக்கு உலகளவில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், புதிய தலைமுறை தார் எஸ்யூவியின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிய தலைமுறை தார் எஸ்யூவிக்கு நீண்ட காத்திருப்பு காலம் நிலவுகிறது.

வாடிக்கையாளர்கள் பலர் புதிய தலைமுறை தார் எஸ்யூவியை முன்பதிவு செய்து விட்டு, எப்போது டெலிவரி கிடைக்கும்? என வழி மேல் விழி வைத்து காத்து கொண்டுள்ளனர். இதற்கிடையே தனக்கு புதிய தலைமுறை தார் எஸ்யூவியை பரிசளித்த ஆனந்த் மஹிந்திராவிற்கு, வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








