அரசே உருவாக்கும் குறைந்த விலை மின் வாகன சார்ஜிங் கருவி... ரொம்ப ரொம்ப கம்மி விலை... எவ்ளோ தெரியுமா?
மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசே குறைந்த விலையில் மின் வாகன சார்ஜிங் பாயிண்டை உருவாக்க திட்டமிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் சமீப காலமாகவே மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், தற்போதைய இக்கட்டான சூழ்நிலை (கொரோனா வைரஸ் பரவலால்) இதில் தொய்வை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால், மின் வாகன ஊக்குவிப்பு பணிகள் சற்று வேகம் குறைந்து காணப்படுகின்றது.

இருப்பினும், இதற்கான பணிகளில் ஈடுபடுவதை அரசும், அரசு சார்ந்த துறைகளும் நிறுத்தவில்லை. இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்திய அரசு, குறைந்த கட்டண ஏசி சார்ஜிங் கட்டமைப்பு வசதியை உருவாக்கும் பணியில் ஈடுபட தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, இந்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் மற்றும் நிதி-ஆயோக் ஆகிய மூன்றும் இணைந்திருக்கின்றன. இந்த கூட்டணியே புதுமையான மற்றும் குறைந்த கட்டண மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயிண்டுகளை நாடு முழுவதும் உருவாக்க இருக்கின்றது.

இது நகர் புறங்களில் மட்டுமின்றி ஊரக (கிராம) பகுதிகளிலும் மின்வாகனங்களுக்கான அடிப்படை வசதியையே உருவாக்குவதே இந்த கூட்டணியின் முக்கி இலக்காகும். குறைந்த கட்டண சார்ஜிங் மையங்களாக இவை இருந்தாலும் அதி-விரைவாக மின் வாகனங்களை இவை சார்ஜ் செய்யும் என கூறப்படுகின்றது.

இந்த சிறப்பு வாய்ந்த மின்சார வாகன சார்ஜிங் பாயிண்டின் முன்மாதிரிகளே தற்போது செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றை இந்திய தரநிலைகள் ஆய்வகத்தின் (BIS) அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மின் வாகன சார்ஜிங் பாயிண்ட் ரூ. 3,500 என்ற குறைந்த விலையைக் கொண்டதாக இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகபட்சமாக 3கிலோவாட் வரையிலான திறன்பாட்டை வெளிப்படுத்தும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா போன்ற மின் வாகனங்களுக்கு இது நிச்சயம் உதவும். இக்குறைந்த விலை மற்றும் கட்டணம் கொண்ட மின் வாகன சார்ஜிங் மையங்களை எளிதில் கண்டறிவதற்காக ஸ்பெஷல் ஒன்று அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

இந்த ஆப்பினைக் கொண்டு சார்ஜிங் பாயிண்ட் எங்கு இருக்கின்றது என்பதை எளிதில் கண்டறிய முடியும். இதுமட்டுமின்றி, மின் வாகனத்தைச் சார்ஜ் செய்ததற்கான கட்டணத்தையும் செலுத்த முடியும். இது குறைந்த கட்டண சார்ஜிங் மையமாக பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதேபோன்று தனியார் நிறுவனங்கள் சிலவும் இந்தியாவில் மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதியை உருவாக்கும் பணியில் ஈடுபட தொடங்கியிருக்கின்றன. எதிர்காலத்தில் மின் வாகனங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கும் என்பதை கணித்து இந்த நடவடிக்கையில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

மால்கள், பொது இடங்கள் மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் ஆகியவற்றில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை முதலில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மக்களை மின் வாகனங்களின் பக்கம் ஈர்க்கும் வகையில் நாட்டின் அனைத்து மூலைகளிலும் குறைந்த கட்டண சார்ஜிங் மையங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, இந்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் மற்றும் நிதி-ஆயோக் ஆகியவை திட்டமிட்டிருக்கின்றன.

தற்போது நாட்டில் அதிகம் எரிபொருளால் இயங்கக் கூடிய (ஐசிஇ எஞ்ஜின்) வாகனங்களே அதிகம் விற்பனையாகின்றன. அதாவது நாட்டில் விற்பனையாகும் ஒட்டுமொத்த வாகனங்களில் 84 சதவீதம் உள்ளெரிப்பு எஞ்ஜின் கொண்ட வாகனங்கள் ஆகும். இந்த எண்ணிக்கையைக் வரும் 2025ம் ஆண்டிற்குள் குறைக்க வேண்டும் என்பதில் தற்போதைய கூட்டணி மிக உறுதியாக உள்ளது.

ஆகையால், குறைந்த விலை கொண்ட மின் வாகன சார்ஜிங் மையங்கள் மிக விரைவிலேயே பயன்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications







