காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு இவ்வளவு வேகமா வர முடியுமா? அதுவும் சைக்கிளில்! உலக சாதனை படைத்த இளைஞர்...
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிளில் மிக வேகமாக வந்த நபர் என்ற சாதனையை இளைஞர் ஒருவர் படைத்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காஷ்மீரை சேர்ந்த 23 வயது இளைஞர் அடில் டெலி. இவர் வெறும் எட்டே நாட்களில், காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிளில் பயணம் செய்துள்ளார். இதன் மூலம், காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிளில் மிக வேகமாக பயணம் செய்த நபர் என்ற கின்னஸ் உலக சாதனையை அடில் டெலி படைத்துள்ளார்.

அடில் டெலி காஷ்மீரில் இருந்து சைக்கிளில் கன்னியாகுமரிக்கு வருவதற்கு, 8 நாட்கள், 1 மணி நேரம் மற்றும் 37 நிமிடங்கள் மட்டுமே ஆகியுள்ளது. இவ்வளவு குறுகிய நேரத்தில், சுமார் 3,600 கிலோ மீட்டர்கள் தொலைவை அடில் டெலி சைக்கிளில் கடந்துள்ளார். உலக சாதனை படைத்துள்ள அடில் டெலி, காஷ்மீரின் பட்கம் மாவட்டத்தில் உள்ள நர்பல் பகுதியை சேர்ந்தவர்.

கடந்த மார்ச் 22ம் தேதி காலை 7.30 மணியளவில் ஸ்ரீநகரில் இருந்து அடில் டெலி தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார். கடந்த மார்ச் 30ம் தேதி காலை 9 மணியளவில் அவர் கன்னியாகுமரியை வந்தடைந்து விட்டார். தற்போதைய நிலையில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிளில் மிகவும் வேகமாக பயணம் செய்தவர் என்ற உலக சாதனை ஓம் மகாஜன் என்பவரிடம் உள்ளது.

17 வயதாகும் இவர், நாசிக் பகுதியை சேர்ந்தவர். இவர் 8 நாட்கள், 7 மணி நேரம் மற்றும் 38 நிமிடங்களில் காஷ்மீரில் இருந்து சைக்கிளில் கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். ஆனால் இவரின் சாதனையை அடில் டெலி தற்போது முறியடித்துள்ளார். இந்த சாதனைக்காக பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்டர் பகுதியில் அடில் டெலி 5 மாதங்களாக தீவிர பயிற்சி மேற்கொண்டார்.

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலான சைக்கிள் பயணத்தின்போது, டெல்லி, ஆக்ரா, குவாலியர், ஹைதராபாத் மற்றும் மதுரை ஆகிய முக்கிய நகரங்களை அடில் டெலி கடந்துள்ளார். புதிய உலக சாதனை படைத்துள்ள அடில் டெலிக்கு தற்போது பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

அடில் டெலி உடன் 8 பேர் அடங்கிய குழு பயணம் செய்துள்ளது. இதில், பிஸியோதெரபிஸ்ட், ஊட்டச்சத்து நிபுணர், மெக்கானிக் மற்றும் கேமரா குழுவினர் ஆகியோர் அடங்குவர். தற்போது அதிகாரப்பூர்வ அங்கீகாரத்திற்காக, தனது சாதனையின் அனைத்து ஆதாரங்களையும் கின்னஸ் உலக சாதனை அமைப்பிடம் சமர்ப்பிக்கும் பணிகளில் அடில் டெலி ஈடுபட்டுள்ளார்.

அடில் டெலியின் இந்த சாதனை இளைஞர்கள் மத்தியில் சைக்கிள் ஓட்டுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. இன்றைய சூழலில் கிட்டத்தட்ட அனைத்து இளைஞர்களும் மோட்டார் வாகனங்களில் பயணம் செய்வதைதான் விரும்புகின்றனர். இதன் காரணமாக உடல் பருமன் போன்ற பல்வேறு பிரச்னைகள் அவர்களுக்கு ஏற்படுகிறது.

ஆனால் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் இதுபோன்ற உடல் நலன் சார்ந்த பிரச்னைகள் மட்டுமல்லாது, மோட்டார் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடு போன்ற பிரச்னைகளையும் நாம் தவிர்க்க முடியும். எனவே இளைஞர்கள் மத்தியில் சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தற்போது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.


Click it and Unblock the Notifications








