ரூ.30 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த விவசாயி! காரணம் தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க
விவசாயி ஒருவர், 30 கோடி ரூபாய்க்கு ஹெலிகாப்டர் வாங்கி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கியிருப்பது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவருக்கு விவசாயி என்பதுடன், தொழில் அதிபர் என்பது உள்பட பல்வேறு முகங்கள் உள்ளன. தனது பால் பண்ணை தொழிலை சிறப்பாக செய்வதற்காக நாடு முழுவதும் பயணிக்க வேண்டிய தேவை அவருக்கு இருக்கிறது.

இதன் காரணமாகதான் அவர் தற்போது ஹெலிகாப்டரை வாங்கியுள்ளார். ஜனார்த்தன் போயிர் என்ற அந்த விவசாயி, பால் பண்ணை தொழிலில் சமீபத்தில்தான் களமிறங்கினார். நாங்கள் ஏற்கனவே கூறியபடி இந்த புதிய தொழில் காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு ஜனார்த்தன் போயிர் பயணிக்க வேண்டியுள்ளது.

எனவே தொழில் நிமித்தமான தனது பயணங்கள் சௌகரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக 30 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டரை ஜனார்த்தன் போயிர் வாங்கியுள்ளார். பால் பண்ணை தொழில் காரணமாக, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு அடிக்கடி பயணம் செய்ய வேண்டியுள்ளதாக ஜனார்த்தன் போயிர் கூறியுள்ளார்.

நிறைய பகுதிகளில் விமான நிலைய வசதி இல்லாத காரணத்தால், சில சமயங்களில் மிக நீண்ட நேரம் பயணிக்க வேண்டிய சூழல் ஜனார்த்தன் போயிருக்கு ஏற்படுகிறதாம். எனவே ஹெலிகாப்டரை வாங்கி விடுவது என ஜனார்த்தன் போயிர் முடிவு செய்து விட்டார். இந்த யோசனையை ஜனார்த்தன் போயிருக்கு, அவரது நண்பர் ஒருவர்தான் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜனார்த்தன் போயிர் கூறுகையில், ''தொழில் நிமித்தமாக நான் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியுள்ளது. நான் ஹெலிகாப்டரை வாங்கியுள்ளதற்கு அதுவே காரணம். விவசாயத்துடன் எனது பால் பண்ணை தொழிலையும் நான் கவனிக்க வேண்டியுள்ளது'' என்றார். கடந்த ஞாயிற்று கிழமையன்று, ஜனார்த்தன் போயிரின் கிராமத்திற்கு சோதனைக்காக ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த ஹெலிகாப்டரில் பயணிக்கும் வாய்ப்பை கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு ஜனார்த்தன் போயிர் வழங்கினார். 2.5 ஏக்கர் நிலத்தில் பாதுகாப்பு சுவருடன் ஹெலிபேட் அமைப்பதற்கான ஏற்பாடுகளை ஜனார்த்தன் போயிர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே ஹெலிகாப்டரை நிறுத்துவதற்கான கராஜ் இருக்கும்.

அத்துடன் பைலட் அறை மற்றும் டெக்னீஷியன் அறையும் இருக்கும். வரும் மார்ச் 15ம் தேதி ஹெலிகாப்டர் டெலிவரி செய்யப்படவுள்ளதாக ஜனார்த்தன் போயிர் கூறியுள்ளார். ஜனார்த்தன் போயிருக்கு சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம்.

விவசாயம், பால் பண்ணை ஆகிய தொழில்கள் மட்டுமல்லாது, ரியல் எஸ்டேட் தொழிலையும் ஜனார்த்தன் போயிர் செய்து வருகிறார். பிவாண்டி பகுதியில் பல்வேறு பெரிய நிறுவனங்களின் கிடங்குகள் உள்ளன. எனவே அந்த கிடங்குகளின் உரிமையாளர்களுக்கு பெரிய நிறுவனங்களிடம் இருந்து நல்ல வாடகை கிடைக்கிறது.

இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த பலர் செல்வ செழிப்புடன் காணப்படுகின்றனர். எனவே மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்களும் அப்பகுதியில் மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்த வரிசையில் ஜனார்த்தன் போயிருக்கு சொந்தமாகவும் நிறைய கிடங்குகள் உள்ளன. இதன் மூலமும் அவருக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








