நம்ம மஹிந்திராவின் தயாரிப்பு... ஜனாதிபதி மாளிகைக்கு வந்த புதிய கார்... வெளிநாட்டு பென்ஸ்க்கு குட்பை?
இந்தியாவின் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய கார், குடியரசு தலைவர் மாளிகைக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா. மஹிந்திரா நிறுவனம் எஸ்யூவி ரக கார்களை தயாரிப்பதில், நிபுணத்துவம் பெற்று விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மிகவும் பிரபலமான எஸ்யூவி ரக கார்களில் ஒன்று மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 (Mahindra Alturas G4).

இதன் பிஎஸ்-6 வெர்ஷன் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. ஆனால் அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி காரின் முதல் பிஎஸ்-6 வெர்ஷனை, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு மஹிந்திரா நிறுவனம் டெலிவரி செய்துள்ளது. குடியரசு தலைவர் மாளிகையில், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்-6 கார் நிற்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஆனால் மஹிந்திரா நிறுவனம் அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி காரின் பிஎஸ்-6 வேரியண்ட்டை ஷோரூம்களுக்கு இன்னமும் அனுப்ப தொடங்கவில்லை. இதனால் ஷோரூம்களில் தற்போதைய நிலையில் இந்த கார் கிடைப்பதில்லை. ஆனால் இந்த காரின் உற்பத்தியை மஹிந்திரா தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே விரைவில் விற்பனைக்கும் வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் செய்துள்ள ட்வீட் மூலமாக, குடியரசு தலைவர் மாளிகைக்கு அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி கார் டெலிவரி கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு தலைவர் மாளிகைக்கு கருப்பு வண்ணத்தில், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

தற்காலிக பதிவு எண்ணை பெற்றுள்ள இந்த காரின் டெலிவரியை, குடியரசு தலைவர் அலுவலகத்தின் இணை செயலாளர் ஏற்று கொண்டுள்ளார். ஆனால் இது குண்டு துளைக்காத வாகனம் போல் தெரியவில்லை. எனவே குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ அலுவல் வாகனமான மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் எஸ்600 புல்மேன் கார்டுக்கு (Mercedes-Benz S-Class S600 Pullman Guard) மாற்றாக இருக்குமா? என்பது சந்தேகமே.

பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா அறிவிப்புக்கு பின், இந்திய அரசியல் தலைவர்கள் உள்ளூர் கார்களை பயன்படுத்த வேண்டும் என்ற குரல்கள் வலுவாகியுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் பிரதமர், குடியரசு தலைவர் மற்றும் முக்கியமான நபர்களின் அதிகாரப்பூர்வ வாகனங்கள் எஸ்பிஜியால் (SPG) பாதுகாக்கப்படுகின்றன.

நாட்டின் முக்கிய நபர்கள் என்ன கார்களை பயன்படுத்த வேண்டும்? என்பதை அதிகாரிகள்தான் தீர்மானம் செய்கின்றனர். இதன் காரணமாக முக்கியமான நபர்களின் அதிகாரப்பூர்வ வாகனங்கள் உடனடியாக மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். அதாவது உள்ளூர் தயாரிப்பு என்பதை விட பாதுகாப்பிற்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்.

குடியரசு தலைவர் மாளிகைக்கு தற்போது டெலிவரி செய்யப்பட்டுள்ள மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி, இந்திய சந்தையில் டொயோட்டா பார்ச்சூனர் (Toyota Fortuner) மற்றும் ஃபோர்டு எண்டேவர் (Ford Endeavour) ஆகிய கார்களுக்கு எதிராக போட்டியிட்டு வருகிறது. ஆனால் இதன் விலை மிக சவாலான வகையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தைகளில் விற்பனையில் இருந்து வரும் சாங்யாங் ரெக்ஸ்ட்டன் (SsangYong Rexton) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மஹிந்திரா அளவிற்கு சாங்யாங் பிரபலமான நிறுவனம் கிடையாது. எனவே ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் 2018ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமான மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது, தோற்றத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது போல் தெரியவில்லை. பிஎஸ்-6 அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி காரின் விலைகளை மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது. இருந்தாலும் டெலிவரி பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications








