டாடா இல்ல! 20 அடி பள்ளத்துல உருண்டும் பயணிகளை காப்பாற்றிய கார்! எந்த நிறுவன தயாரிப்புனு தெரிஞ்சா அசந்திருவீங்க
20 அடி பள்ளத்தில் உருண்டும் பயணிகளின் உயிரை கார் ஒன்று காப்பாற்றியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெரும்பாலான மரணங்களுக்கு சாலை விபத்துக்கள்தான் மிக முக்கியமான காரணங்களாக உள்ளன. கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் 1,51,113 பேரின் மரணத்திற்கு சாலை விபத்துக்கள் காரணமாக இருந்துள்ளன. இது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளி விபரம் ஆகும்.

இது மிக அதிகமாக எண்ணிக்கை என்பதால், சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களை குறைப்பதற்கு இந்தியாவில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் சாலை விபத்துக்களில் இருந்து தப்ப வேண்டுமானால், வாகனங்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்க வேண்டும்? என்ற விழிப்புணர்வும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஒரு பாதுகாப்பான கார் விபத்துக்களின்போது பயணிகளின் உயிரை காப்பாற்றி விடும். இதனை உணர்ந்து கொண்டு, விலை, மைலேஜ், வசதிகள் மற்றும் டிசைன் ஆகியவற்றின் வரிசையில், புதிய கார் வாங்குவதை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக தற்போது பாதுகாப்பையும் இந்திய வாடிக்கையாளர்கள் இணைத்துள்ளளனர்.
புத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 ரிவியூ... ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன? விரிவாக அலசும் வீடியோ!
விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை கார்கள் காப்பாற்றிய நிகழ்வுகள் தொடர்பான பல்வேறு செய்திகளை கடந்த காலங்களில் நாங்கள் உங்களுக்கு வழங்கியுள்ளோம். இந்த வரிசையில் கொடூரமான விபத்து ஒன்றில் இருந்து பயணிகளை ஒரு கார் காப்பாற்றிய செய்தியை இன்று உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம்.

இந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருப்பது மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் ஆகும். விபத்து நிகழ்ந்த சமயத்தில், 4 பயணிகள் அந்த காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பான துல்லியமான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் இந்த கார் சாலையில் இருந்து விலகி சுமார் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

அத்துடன் ஓரிரு முறை உருண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் உள்ளே இருந்த பயணிகளுக்கு படுகாயங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. சிறு சிறு காயங்களுடன் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலம் சதாரா பகுதியை சேர்ந்த சுபம் கடம் என்பவர் இந்த விபத்தின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

கார் எவ்வளவு சேதம் அடைந்துள்ளது? என்பதை இந்த புகைப்படங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். ஆனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். இதுகுறித்து காடிவாடி செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவாக டாடா நிறுவனத்தின் நெக்ஸான், டியாகோ மற்றும் ஹாரியர் உள்ளிட்ட கார்கள் சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளை காப்பாற்றிய செய்திகளை நாம் பல முறை கேள்விபட்டுள்ளோம்.

ஆனால் மாருதி சுஸுகி நிறுவன கார்களின் பாதுகாப்பு தொடர்பாக எழுப்பப்பட்டு வரும் சந்தேகங்களுக்கு இந்த நிகழ்வு பதில் அளிப்பது போல் உள்ளது. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக இருந்தாலும் மாருதி சுஸுகி கார்களின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

ஆனால் மாருதி சுஸுகி நிறுவன கார்களில் விட்டாரா பிரெஸ்ஸா கொஞ்சம் பாதுகாப்பானது. குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் சோதனைகளில், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் 4 நட்சத்திரங்களை பெற்று அசத்தியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications








