360 இருக்கைகள் கொண்ட விமானத்தில் தனியாக பறந்த அதிர்ஷ்டசாலி! டிக்கெட் எவ்ளோனு தெரிஞ்சா கண்டிப்பா நம்ப மாட்டீங்க
பிரம்மாண்ட விமானத்தில், மும்பையில் இருந்து துபாய் வரை தனியாக பறக்கும் அதிர்ஷ்டம் ஒருவருக்கு அடித்துள்ளது. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நம்மில் பலருக்கும் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். எனினும் அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் இங்கே ஒருவருக்கு, 360 பேர் அமரக்கூடிய போயிங் 777 விமானத்தில் தனியாக பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த பிரம்மாண்ட விமானத்தில், சுமார் இரண்டரை மணி நேரம் அவர் தனியொரு பயணியாக பயணம் செய்துள்ளார்.

இந்த விஷயத்தை நம்புவது கடினமாக இருக்கலாம். ஆனால் 40 வயதான பாவேஷ் ஜாவேரி என்பவருக்கு உண்மையிலேயே இப்படி ஒரு அதிர்ஷடம் அடித்துள்ளது. இவர் கடந்த மே 19ம் தேதியன்று, எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானத்தில், மும்பையில் இருந்து துபாய்க்கு தனி ஆளாக பயணம் செய்துள்ளார். விமானத்தில் இவரை தவிர வேறு பயணிகள் யாரும் இல்லை.

இதுகுறித்து பாவேஷ் ஜாவேரி கூறுகையில், ''நான் விமானத்தில் நுழைந்தபோது, விமான பணிப்பெண்கள் என்னை கை தட்டி வரவேற்றனர்'' என்றார். பாவேஷ் ஜாவேரி விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவர் ஆவார். கடந்த இரண்டு தசாப்தங்களில், மும்பை மற்றும் துபாய்க்கு இடையே 240க்கும் மேற்பட்ட முறை பாவேஷ் ஜாவேரி விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

ஆனால் தனியாக பயணம் செய்த இந்த அனுபவம்தான் அவருக்கு சிறப்பான ஒன்றாக அமைந்திருக்கும். இது குறித்து அவர் கூறுகையில், ''நான் பல முறை விமானத்தில் பறந்துள்ளேன். ஆனால் இதுதான் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம்'' என்றார். பாவேஷ் ஜாவேரி விமானத்தில் ஏறிய பின், காக்பிட்டில் இருந்து கமாண்டர் கையசைத்துள்ளார்.

அந்த நேரத்தில், விமானத்தில் தனியாக பயணம் செய்ய உங்களுக்கு பயமாக இருக்கும் என நினைக்கிறேன் என்று விமான பணிப்பெண் ஒருவர் கூறியுள்ளார். அதன்பின் காக்பிட்டில் இருந்து வந்த கமாண்டரும், அந்த உரையாடலில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் 18 A இருக்கையில் பாவேஷ் ஜாவேரி அமர்ந்துள்ளார் (18 தனக்கு ராசியான எண் என்பதால், அந்த இருக்கையை அவர் கேட்டு பெற்றுள்ளார்).

போயிங் 777 விமானத்தின் எடை சுமாராக 180 டன்கள். உலகின் மிகப்பெரிய ட்வின்-இன்ஜின் விமானங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. மும்பையில் இருந்து துபாய் செல்வதற்காக, 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள 17 டன் எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரே ஒரு எகானமி க்ளாஸ் பயணிக்காக இவ்வளவு எரிபொருள் செலவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி தற்போதைய நிலையில் ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா வைத்துள்ளவர்கள் மற்றும் மிகவும் முக்கியமான உயரதிகாரிகள் ஆகியோர் மட்டுமே இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல முடியும்.

பாவேஷ் ஜாவேரி கோல்டன் விசா வைத்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை-துபாய் வழித்தடத்தில் போயிங் 777 விமானத்தை இயக்குவதற்கு சுமார் 70 லட்ச ரூபாய் வரை செலவு ஆகும். ஆனால் வெறும் 18 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட எகானமி க்ளாஸ் டிக்கெட் மூலம் இந்த விமானத்தில் தனியாக பயணிக்கும் வாய்ப்பை பாவேஷ் ஜாவேரி பெற்றுள்ளார்.

இதன்படி பார்த்தால் பாவேஷ் ஜாவேரி உண்மையிலேயே பெரிய அதிர்ஷ்டசாலிதான். ஆனால் விமானத்தில் பயணி ஒருவர் மட்டும் தனியாக பயணம் செய்வது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாகவும் இதுபோன்ற சம்பவங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








