செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்குபவர்களுக்கு ஏற்படும் தவறான எண்ணங்கள்... உண்மை என்னனு தெரியுமா?
செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்குபவர்களுக்கு ஏற்படும் தவறான எண்ணங்கள் குறித்தும், அவற்றின் உண்மைதன்மை குறித்தும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

முன்பெல்லாம் யூஸ்டு கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் தற்போது நிறைய பேர் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்குகின்றனர். எனினும் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்குவதில், சிலருக்கு தவறான எண்ணங்கள் உள்ளன. அப்படி யூஸ்டு கார்களை பற்றி வலம் வரும் கட்டுக்கதைகள் குறித்தும், அவற்றின் உண்மைதன்மை குறித்தும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

1. யூஸ்டு காரை விட புதிய காரை வாங்குவதுதான் லாபகரமானது
யூஸ்டு காரை வாங்குவதை விட புதிய காரை வாங்குவதுதான் லாபகரமானது என்பது மிகப்பெரிய தவறான எண்ணம். உண்மையில் புதிய கார்களில் தேய்மானம் அதிகமாக இருக்கும். முதல் வருடத்தில் புதிய காரின் தேய்மானம் 30 சதவீதம் ஆகவும், 5 ஆண்டு கால அளவில் சுமார் 60 சதவீதம் ஆகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மறுபக்கம் யூஸ்டு கார்களில் தேய்மானம் குறைவு. அத்துடன் யூஸ்டு கார்களை வாங்கினால் வரிகளுக்காக செலுத்த வேண்டிய தொகையையும் நீங்கள் மிச்சம் பிடிக்கலாம். ஏனெனில் அந்த காரை புதிதாக வாங்கிய முதல் உரிமையாளர் வரிகளை செலுத்தியிருப்பார். யூஸ்டு கார்களை வாங்குவதால் உங்களுக்கு இப்படி பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

2. யூஸ்டு கார்களில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கும்
பழுது ஏற்பட்டு கொண்டே உள்ளது என்பதற்காக மட்டும் ஒருவர் காரை விற்பனை செய்வதில்லை. பல்வேறு காரணங்களுக்காக காரை விற்பனை செய்கின்றனர். உதாரணத்திற்கு ஒருவர் வேறு ஒரு புதிய காருக்கு அப்டேட் ஆகிறார் என்றால், அவர் தன்னுடைய பழைய காரை விற்பனை செய்து விடுவார். அதுபோன்ற கார்களில் எந்த பிரச்னையும் இருக்காது.

அத்துடன் தற்போது பெரும்பாலான செகண்ட் ஹேண்ட் கார்கள் சர்வீஸ் ரெக்கார்டு உடன் வருகின்றன. என்னென்ன பாகங்கள் மாற்றப்பட்டுள்ளன? என்னென்ன வகையான சர்வீஸ் செய்யப்பட்டுள்ளது? விபத்துக்களில் கார் சிக்கியுள்ளதா? வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதா? என்பது உள்பட காரின் முழுமையான வரலாற்றையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

3. தற்கால நவீன மற்றும் பாதுகாப்பு வசதிகள் இருக்காது
ஒரு சிலர் கிளாசிக் கார் மற்றும் விண்டேஜ் கார்களை சேகரிப்பார்கள். இதற்காக அதிக செலவு செய்து அந்த கார்களை வாங்குவார்கள். இந்த வகையான கார்களில் மட்டும்தான் தற்கால நவீன மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறைவாக இருக்கும். ஆனால் மற்ற பெரும்பாலான யூஸ்டு கார்களில் தற்போது ஏசி வசதி ஸ்டாண்டர்டாக இருக்கிறது.

அதே நேரத்தில் மியூசிக் மற்றும் இன்போடெயிண்மெண்ட் மாடலை பொறுத்து மாறுபடலாம். தற்போதைய நிலையில் பெரும்பாலான யூஸ்டு கார்களில் யூஎஸ்பி போர்ட், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ என ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன.

நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், டச் ஸ்க்ரீன் உடன் கனெக்டட் வசதிகள் கொண்ட யூஸ்டு கார்களையும் வாங்கலாம். எனவே யூஸ்டு கார்களில் தற்கால நவீன மற்றும் பாதுகாப்பு வசதிகள் இருக்காது என்ற கருத்தில் உண்மையில்லை. மாருதி ஆனாலும் சரி அல்லது மஸராட்டி ஆனாலும் சரி, இது முழுக்க முழுக்க நீங்கள் வாங்கும் காரை பொறுத்தது.

அதே சமயம் பாதுகாப்பை பொறுத்தவரை பெரும்பாலான யூஸ்டு கார்களில், ஏபிஎஸ் மற்றும் முன் பகுதியில் 2 ஏர்பேக்குகள் ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், கேமரா போன்ற வசதிகளையும் கூட தற்போது செகண்ட் ஹேண்ட் கார்களில் பார்க்க முடிகிறது. எனவே இதுவும் நீங்கள் வாங்கும் காரை பொறுத்ததுதான்.


Click it and Unblock the Notifications








