1 லட்ச ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு சிறை... இனி ஹெல்மெட்களை பார்த்து வாங்குங்க... மத்திய அரசு அதிரடி...
இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, மத்திய அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத அனைத்து ஹெல்மெட்களும் தடை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜூன் 1ம் தேதியில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இதன்படி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஹெல்மெட்களும் பிஐஎஸ் தரநிலைகளுக்கு இணங்க வேண்டும்.

அத்துடன் ஐஎஸ்ஐ முத்திரையையும் கொண்டிருக்க வேண்டும். இந்த உத்தரவை மீறி, ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டைகளை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் இறக்குமதி செய்பவர்களுக்கு குறைந்தபட்சம் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அல்லது ஒரு வருட சிறை தண்டணை விதிக்கப்படும்.

இந்த உத்தரவின் மூலம் போலியான ஹெல்மெட்கள் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் நம்புகிறது. மேலும் தரமான ஹெல்மெட்கள் விற்பனை செய்யப்படுவதால், சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சக உத்தரவின்படி, இறக்குமதியாகும் ஹெல்மெட்களும், விற்பனை செய்யப்படுவதற்கு முன்பாக ஐஎஸ்ஐ முத்திரையை பெற்றாக வேண்டும். கூடுதலாக சான்றிதழ் பெற வேண்டியுள்ளதால், இறக்குமதி செய்யப்படும் ஹெல்மெட்களின் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலானவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை. இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக உள்ளது.

அதே நேரத்தில் பலர் ஹெல்மெட் அணிகின்றனர் என்பதையும் நாம் மறுக்க முடியாது. இதில், ஒரு சிலருடைய ஹெல்மெட்கள் போலியானவையாக உள்ளன. அவை தரமில்லாமல் இருப்பதால், சாலை விபத்துக்களில் இரு சக்கர வாகன ஓட்டியின் உயிரை காப்பாற்ற தவறி விடுகின்றன. இதன் காரணமாகவும் சாலை விபத்துக்களால் பலர் உயிரிழக்கின்றனர்.

எனவேதான் ஹெல்மெட்களின் தரத்தை உறுதி செய்யும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக இனி தரமான ஹெல்மெட்கள் விற்பனையாகும் என நம்பலாம். இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

அதில், ஒரு நடவடிக்கையாக இதனை கருதலாம். இதுதவிர கார்களில் ஏர்பேக், ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு வசதிகளை அதிகரிப்பது, சாலைகளின் தரத்தை மேம்படுத்துவது, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகையை அதிகரிப்பது என இன்னும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








