பெட்ரோல், டீசல் விலை குறையுமா? 8 முதல் 10 வருஷத்துக்கு வாய்ப்பில்ல ராஜா... தலையில் குண்டை தூக்கி போட்ட மோடி...
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு வாய்ப்பில்லை என பாஜக தலைவர் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அனைத்து மாநிலங்களுக்கும் ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்பதால், அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு, பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு வாய்ப்பில்லை என பாஜக தலைவர் சுஷில் குமார் மோடி கூறியுள்ளார். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் பெட்ரோலிய பொருட்களில் இருந்து மத்திய அரசும், மாநில அரசுகளும் கூட்டாக 5 லட்சம் கோடி ரூபாயை வரியாக ஈட்டி வருவதாகவும் சுஷில் குமார் மோடி தெரிவித்தார். நிதி மசோதா 2021 மீதான விவாதத்தில் பங்கேற்றபோது மாநிலங்களவையில் அவர் இந்த தகவலை தெரிவித்தார். சுஷில் குமார் மோடியின் பேச்சு வாகன ஓட்டிகளை கவலையடைய செய்துள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை எந்த அளவிற்கு உயர்ந்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் விதித்து வரும் அதிகப்படியான கலால் வரி மற்றும் வாட் வரி காரணமாகவே, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மிகவும் அதிகமாக உள்ளது.

எனவே மத்திய, மாநில அரசுகள் வரிகளை குறைக்க வேண்டும் அல்லது ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்தால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கணிசமாக குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வரும் நிலையில்தான், சுஷில் குமார் மோடி இதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநிலங்களவையில் அவர் பேசுகையில், ''பெட்ரோல் மற்றும் டீசலை அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு வாய்ப்பு இல்லை.

ஏனெனில் ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை (அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து) சந்திப்பதற்கு மாநிலங்கள் தயாராக இல்லை. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்தால், மாநில அரசுகள் இந்த 2 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை எப்படி ஈடுகட்ட முடியும்? பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி மூலம் மத்திய, மாநில அரசுகள் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கின்றன'' என்றார்.

பாஜக தலைவர் சுஷில் குமார் மோடியின் இந்த பேச்சு மூலம் பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படுமா? என்ற சந்தேகம் வாகன ஓட்டிகளுக்கு எழுந்துள்ளது. இதற்கிடையே பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து வாகன ஓட்டிகளுக்கு தற்காலிகமாக சிறிய நிவாரணம் தற்போது கிடைத்து வருகிறது.

ஆம், சமீப நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன. ஆனால் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டிதான் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.


Click it and Unblock the Notifications








