சூப்பர் சார்... சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சைக்கிளில் போக இவ்வளவு நேரம்தானா? சைலேந்திர பாபு அசத்தல்!
ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு, சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியர்கள் பலர் தற்போது உடல் பருமனாலும், காற்று மாசுபாடு பிரச்னையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை இரண்டிற்குமே மோட்டார் வாகனங்கள்தான் முக்கியமான காரணமாக உள்ளன. நடந்து சென்று விடக்கூடிய இடத்திற்கு கூட வாகனங்களில் செல்வது தற்போது வழக்கமாகி விட்டது. உடல் பருமன் பிரச்னைக்கு இது காரணமாகிறது.

அத்துடன் மோட்டார் வாகனங்கள் கக்கும் புகையால் காற்றும் மிக கடுமையாக மாசடைந்து வருகிறது. தலைநகர் டெல்லி உள்பட இந்தியாவின் பல்வேறு முக்கியமான நகரங்களில் தற்போது காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. ஆனால் சைக்கிள் பயன்படுத்துவதன் மூலமாக இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும்.

ஆனால் இதுகுறித்து போதிய விழிப்புணர்வும், ஆர்வமும் இளைஞர்களிடம் இல்லை. எனவே இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு, சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரை தற்போது சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு குறித்து தமிழக மக்களுக்கு அறிமுகமே தேவையில்லை.

குறிப்பாக இளைஞர்கள் பலருக்கும் அவர் ஒரு முன் மாதிரியாக உள்ளார். உடலை எப்படி 'ஃபிட்' ஆக வைத்து கொள்ள வேண்டும்? என்பதை அவரிடம் இருந்துதான் நாம் கற்று கொள்ள வேண்டும். இந்த சூழலில், சைக்கிள் ஓட்டுவதற்கு இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு அவர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த 11ம் தேதி சென்னையில் தொடங்கிய அவரது சைக்கிள் பயணம் கடந்த 13ம் தேதி தனுஷ்கோடி அரிச்சல்முனையில் நிறைவடைந்தது. இடைப்பட்ட சுமார் 600 கிலோ மீட்டர்கள் தொலைவை வெறும் 36 மணி நேரத்தில் ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு கடந்துள்ளார். சைக்கிள் பந்தய வீரர்கள் 4 பேருடன் இணைந்து, அவர் இந்த பயணத்தை மேற்கொண்டார்.

இதுகுறித்து ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு கூறுகையில், ''இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு சைக்கிள் பயிற்சி அளிப்பது சிறப்பானதாக இருக்கும். ஒரு சில வளர்ந்த நாடுகளில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினர் மத்தியிலும் சைக்கிள் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இதன் மூலமாக காற்று மாசுபாடு பிரச்னைக்கு தீர்வு காண முடியும். அத்துடன் இது நல்ல உடற்பயிற்சியாகவும் இருக்கும்'' என்றார்.

ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு கூறியதுபோல், ஒரு சில வளர்ந்த நாடுகளில் சைக்கிள் பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது. அந்தந்த நாடுகளின் அரசுகளே சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிப்பது போல், சைக்கிள் பயன்பாட்டையும் அந்த நாடுகள் ஊக்கப்படுத்தி வருகின்றன.
சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்பதே இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. ஆனால் இந்தியாவில் சைக்கிள் பயன்பாடு மிகவும் குறைவாக இருக்கிறது. எனினும் ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு போன்றவர்களின் முயற்சியால் இந்தியாவில் மக்கள் மத்தியில் சைக்கிள் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








