வீட்டில் நின்ற காருக்கு 3 டோல்கேட்டில் பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூல்... எவ்ளோனு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க...
வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு பாஸ்டேக்கில் கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ஐடி ஊழியர் வினோத் ஜோஷி. 48 வயதாகும் இவரது செல்போனுக்கு கடந்த புதன் கிழமையன்று மூன்று எஸ்எம்எஸ்-கள் வந்துள்ளன. இதில், அவரது பாஸ்டேக் கணக்கில் இருந்து ஒட்டுமொத்தமாக 310 ரூபாய் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இதனால் என்ன பிரச்னை என கேட்கிறீர்களா? பிரச்னை இருக்கிறது.

ஆம், சம்பவத்தன்று அதாவது பாஸ்டேக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ்-கள் வந்த சமயத்தில் வினோத் ஜோஷியின் கார் அவரது வீட்டில்தான் நிறுத்தப்பட்டிருந்தது. இன்னும் சொல்லப்போனால் அன்றைய தினம் முழுவதும் வினோத் ஜோஷியின் கார் அவரது வீட்டிலேயேதான் நின்று கொண்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த வினோத் ஜோஷி, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து வினோத் ஜோஷி கூறுகையில், ''கடந்த புதன் கிழமை எனது மகளை பள்ளியில் விடுவதற்காக சேனாபதி பபாட் சாலைக்கு மட்டுமே நான் எனது காரை எடுத்து சென்றேன்.

பஷான் பகுதியில் உள்ள எனது வீட்டில் நாள் முழுவதும் கார் நின்று கொண்டிருந்ததற்கான சிசிடிவி ஆதாரம் என்னிடம் உள்ளது'' என்றார். மேலும் வாஷி சுங்க சாவடியில் 40 ரூபாய் கட்டணம் எடுக்கப்பட்டதாக முதல் எஸ்எம்எஸ்-ஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது எனவும் வினோத் ஜோஷி கூறியுள்ளார். இது எப்படி நடந்தது? என்பதை நான் கண்டறிவதற்கு முன்னதாக காலை 8.40 மணிக்கு இரண்டாவது எஸ்எம்எஸ் வந்தது.

இதில், காலாப்பூர் சுங்க சாவடியில் 203 ரூபாய் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்பின் மதியம் 12.40 மணியளவில் மூன்றாவது எஸ்எம்எஸ் வந்தது. இதில், தாலேகான் சுங்க சாவடியில் 67 ரூபாய் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது'' என்றார். ஒட்டுமொத்தமாக அவரது கணக்கில் இருந்து 310 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்னை குறித்து, பாஸ்டேக் வழங்கிய வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு பேச முயன்ற வினோத் ஜோஷியின் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. எனவே இந்த பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என வினோத் ஜோஷி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால் இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம், சுங்க சாவடியை கடந்ததாக கூறி, கடந்த காலங்களில் பாஸ்டேக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 15-16ம் தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவில், சுங்க சாவடிகளில் அனைத்து லேன்களும் பாஸ்டேக் லேன்களாக மாற்றப்பட்டன. இப்படிப்பட்ட ஒரு சூழலில் பாஸ்டேக்கில் இதுபோன்ற குளறுபடிகள் தொடர்ச்சியாக அரங்கேறி வருவது, வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








