இந்திய சாலைகளில் விரைவில் ஓடப்போகும் அதிநவீன ஹைட்ரஜன் பஸ்களின் மிரட்டலான சிறப்பம்சங்கள்
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, இந்திய சாலைகளில் ஹைட்ரஜன் பஸ்கள் ஓடுவது உறுதியாகியுள்ளது. அந்த பஸ்ஸின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, இந்திய சாலைகளில் ஹைட்ரஜன் பஸ்கள் ஓடுவது உறுதியாகியுள்ளது. அந்த பஸ்ஸின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களால் சுற்றுச்சூழல் மிக மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யின் விலையும், சர்வதேச சந்தையில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது.

இதன் காரணமாக இந்தியாவில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டது. இதனால் பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ சாமானிய மற்றும் மிடிஸ் கிளாஸ் மக்கள்தான். எனவே எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற அவர்கள் முயன்று வருகின்றனர்.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாறுவதை மத்திய அரசும் கூட ஊக்குவித்து வருகிறது. ஏனெனில் எலக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. பெட்ரோல், டீசலை விட பல மடங்கு குறைவான செலவில், எலக்ட்ரிக் வாகனங்களை இயக்க முடியும்.

ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களை விட ஒரு படி மேலே போய் ஹைட்ரஜன் வாகனங்கள் என்ற யோசனையை, கடந்த திங்கள் கிழமை (ஜூலை 2ம் தேதி) உச்சநீதிமன்றம் வழங்கியது. மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களை காட்டிலும் ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் வாகனங்கள் சிறப்பானவை.

நாட்டின் பிற பகுதிகளை காட்டிலும், தலைநகர் டெல்லிதான் காற்று மாசுபாட்டினால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிராந்தியம். அங்கு காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்துவது தொடர்பான ஒரு வழக்கு கடந்த ஜூலை 2ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது 1,000 எலக்ட்ரிக் பஸ்களை வாங்க திட்டமிட்டிருப்பதாக டெல்லி மாநில அரசு தெரிவித்தது. ஆனால் இந்த யோசனையை மூட்டை கட்டி வைத்து விட்டு, ஹைட்ரஜன் பஸ்களை இயக்குவது தொடர்பாக ஆராயும்படி உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஹைட்ரஜன் பஸ்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழலுக்கு ஒரு சதவீத பாதிப்பை கூட ஏற்படுத்தாத ஹைட்ரஜன் பஸ்களை இயக்குவதற்கான செலவும் கூட மிக மிக குறைவுதான் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

எனவே டெல்லி மாநில அரசு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் (EPCA-Environment Pollution Prevention & Control Authority) ஆகியவை, ஹைட்ரஜன் பஸ்களை இயக்குவது தொடர்பாக ஆராயும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இது பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகுந்த பயன் அளிக்க கூடிய உத்தரவாக கருதப்படுகிறது. எனவே சிரமம் கருதாமல் நடைமுறைக்கு கொண்டு வரப்படுமா? அல்லது வழக்கம் போல நீதிமன்றத்தின் உத்தரவு காற்றில் பறக்க விடப்படுமா? என்ற பெரிய அளவிலான எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் இந்திய சாலைகளில் ஹைட்ரஜன் பஸ்கள் ஓடுவது தற்போது உறுதியாகியுள்ளது. ஆம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று ஹைட்ரஜன் பஸ்களை இயக்க, டெல்லி மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் அந்த பஸ்கள், முழுக்க முழுக்க ஹைட்ரஜன் வாயுவால் இயக்கப்படுபவை அல்ல.

HCNG என்ற எரிபொருளை சோதனை அடிப்படையில் 50 பஸ்களில் பயன்படுத்த டெல்லி மாநில அரசு முன்வந்துள்ளது. HCNG என்பது ஹைட்ரஜன் (Hydrogen) மற்றும் Compressed Natural Gas (CNG) எனப்படும் நிலைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு அடங்கிய கலவையாகும்.

எலக்ட்ரிக் வாகனங்களை போல் சிஎன்ஜி மூலம் இயங்கும் வாகனங்களும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதவைதான். ஆனால் சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் ஆகிய இரண்டை காட்டிலும், HCNG எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்கள்தான் 'பெட்டர்' என கருதப்படுகிறது.

டெல்லியில் கடந்த 2001ம் ஆண்டு சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதும் கூட உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பிறகுதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிஎன்ஜி மூலம் ஒரு கிலோ மீட்டருக்கு பஸ்களை இயக்குவதற்கு தோராயமாக ஆகும் செலவு 18.54 ரூபாய்.

எலக்ட்ரிக் பஸ்களை ஒரு கிலோ மீட்டருக்கு இயக்குவதற்கு தோராயமாக ஆகும் செலவு, 17.25 ரூபாய். டெல்லி அரசு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆயிரம் பஸ்களை வாங்க திட்டமிட்டிருந்தது. ஒவ்வொரு பஸ்ஸின் விலையும் சுமார் 2 முதல் 2.5 கோடி வரை வரும்.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட சிறந்ததாக HCNG இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெறுமனே சிஎன்ஜி மூலம் இயங்கும் பஸ்களை காட்டிலும், HCNG மூலம் இயங்கும் பஸ்களின் மைலேஜ் 4-5 சதவீதம் அதிகமாக கிடைக்கும்.

ஹைட்ரஜன் மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றின் கலவைதான் HCNG. இதில், ஹைட்ரஜனின் பங்கு மட்டும் 18-20 சதவீதம் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எஞ்சிய அனைத்தும் சிஎன்ஜிதான். சோதனை அடிப்படையில் HCNG பஸ்கள் இயக்கப்பட்டு, அதன் அறிக்கை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து டெல்லியை சேர்ந்த உயரதிகாரிகள் கூறுகையில், ''மீத்தேனில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஹைட்ரஜன், சிஎன்ஜியுடன் கலக்கப்பட்டு HCNG உருவாக்கப்படும். இதன் கார்பன் உமிழ்வு, சிஎன்ஜியை காட்டிலும் மிக மிக குறைவாகவே இருக்கும்'' என்றனர்.

அதிகாரிகள் மேலும் கூறுகையில், ''ஹரியானா மாநிலம் பரிதாபாத் நகரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் லேபராட்டரியில் HCNG உருவாக்கப்படுகிறது. தற்போது சிஎன்ஜி மூலம் இயங்கி வரும் எங்களது பஸ்களை HCNG எரிபொருளுக்கு ஏற்ப எளிதாக மாற்றி விட முடியும்'' என்றனர்.

சிஎன்ஜியை காட்டிலும் HCNGதான் என்விரான்மெண்ட் ப்ரெண்ட்லி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது டெல்லியில் உள்ள பஸ்களை, HCNGக்கு ஏற்ப மாற்றுவதும் அவ்வளவு ஒன்றும் கடினமான வேலை இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் முழுக்க முழுக்க ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பஸ்களை கொள்முதல் செய்வது தற்போது கடினமான காரியம் என்றும், அதனை நடைமுறைக்கு கொண்டு வர அதிக கால அவகாசம் தேவைப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே முதற்கட்டமாக குறைந்தளவு ஹைட்ரஜனுடன் ஓடக்கூடிய பஸ்கள் அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் இதனை பின்பற்றினால், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதுடன், போக்குவரத்து கழகங்களுக்கு அதிக லாபமும் கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








