கார்களில் பொருத்தப்படும் புல் பார்களுக்கு பின்னால் மறைந்துள்ள ஆபத்துக்கள்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே...
புல் பார்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக தமிழக அதிகாரிகள் தற்போது கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் வாகனங்களில் புல் பார்களை பயன்படுத்துவதற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. இதன் பின்னர், புல் பார்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களின் காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கினர்.

ஆனால் இந்தியாவில் இன்னமும் ஏராளமான வாகனங்கள் புல் பார்களுடன் இயங்கி கொண்டுள்ளன. எனவே தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் தற்போது புல் பார்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக மீண்டும் கடும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளனர். நிகழ்விடத்திலேயே வாகனங்களில் இருந்து புல் பார்களை அகற்றுவதுடன், வாகன உரிமையாளர்களுக்கு அவர்கள் அபராதமும் விதிக்கின்றனர்.

முன் பகுதியில் பெரிய புல் பார் உடன் வந்த டொயோட்டா இன்னோவா கார் ஒன்றை நிறுத்தி, தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. நிகழ்விடத்திலேயே அந்த காரில் இருந்து புல் பார் அகற்றப்பட்டு விட்டது. அத்துடன் சட்டத்திற்கு புறம்பான ஆக்ஸஸெரியை பயன்படுத்திய காரணத்தால், அந்த காரின் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

ஆனால் எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது? என்ற சரியான தகவல் கிடைக்கவில்லை. அதேபோல் காரில் இருந்து அகற்றப்பட்ட புல் பார் மீண்டும் காரின் உரிமையாளரிடமே கொடுக்கப்பட்டு விட்டதா? அல்லது அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து விட்டனரா? என்பதும் உறுதியாக தெரியவில்லை. ஆனால் இப்படிப்பட்ட ஆக்ஸஸெரீஸ்களை பொதுவாக அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுவார்கள்.

திரும்ப ஒப்படைத்தால், வாகன உரிமையாளர்கள் அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே சட்டத்திற்கு புறம்பான ஆக்ஸஸெரீஸ்களை பறிமுதல் செய்வதைதான் அரசு அதிகாரிகள் வழக்கமாக வைத்துள்ளனர். புல் பார்களை பொருத்துவதால் ஏர்பேக் சரியான நேரத்தில் விரிவடைந்து, உயிர்களை காப்பாற்றும் என சிலர் நினைத்து கொண்டுள்ளனர். இது முற்றிலும் தவறான தகவல்.

உண்மையில் காரின் முன் பகுதியில் நீங்கள் புல் பார்களை பொருத்துவதால், ஏர் பேக்குகள் விரிவடையாமல் போவதற்கான வாய்ப்புகள்தான் உள்ளன. விபத்தின் தாக்கத்தை உணர்ந்து ஏர் பேக்குகளை விரிவடைய செய்யும் சென்சார்கள், காரின் முன் பகுதியில்தான் வழங்கப்பட்டிருக்கும். அங்கு புல் பார்கள் இருந்தால், விபத்தின் தாக்கத்தை சென்சார்கள் கண்டறியாமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அதாவது சென்சார்களின் செயல்பாட்டில் புல் பார்கள் பாதிப்பை ஏற்படுத்தி விடும். இதனால் ஏர் பேக்குகள் சரியான நேரத்தில் விரிவடையாமல் போகலாம். இதன் விளைவாக விபத்து நேரும் சமயங்களில், காரின் உள்ளே இருப்பவர்கள் படுகாயம் அடைவதற்கோ அல்லது உயிரிழப்பதற்கோ அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன் புல் பார்களால் பாதசாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம்.
புல் பார்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மோதினால், பாதசாரிகள் படுகாயம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற காரணங்களால்தான் புல் பார்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. உங்கள் காரில் புல் பார் பொருத்தப்பட்டிருந்தால் இன்றே அதனை கழற்றி விடுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் பிரச்னைகளை எதிர் கொள்ள நேரிடலாம்.


Click it and Unblock the Notifications








