காரில் ஜாதி ஸ்டிக்கரை ஒட்டியிருந்த அரசு அதிகாரிக்கு ஆப்பு... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்...
சமூக பிரிவின் ஸ்டிக்கரை காரில் ஒட்டியிருந்த அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. வாகனங்களில் தாங்கள் சார்ந்த சமூகம் தொடர்பான ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதவிர வாகனங்களில் 'போலீஸ்' போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு செல்வாக்கை காட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் வாகனங்களில் விதிமுறைகளை மீறி தேவையில்லாத ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளவர்கள் மீது உத்தர பிரதேச மாநில காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.

இந்த வரிசையில் அரசு அலுவலகத்தில் காரை நிறுத்தியிருந்த அரசு அதிகாரி ஒருவருக்கு தற்போது 5 ஆயிரம் ரூபாய் அதிரடியாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அரசு அதிகாரி உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே அவர் காரை நிறுத்தியிருந்தார்.

காவல் துறை அதிகாரிகள் அந்த காரை பார்த்த உடனேயே, அரசு அதிகாரிக்கு 5,000 ரூபாயை அபராதமாக விதித்து விட்டனர். சமூக பிரிவின் பெயர் அந்த காரில் ஸ்டிக்கராக ஒட்டப்பட்டிருந்ததால்தான் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு காவல் துறையினர் அபராதம் விதித்த உடனேயே கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு தொற்றி கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பலரது வாகனங்களில் இதேபோன்று ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தது. காவல் துறையினரின் அபராதங்களில் இருந்து தப்பித்து கொள்வதற்காக அவர்கள் அங்கேயே உடனடியாக ஸ்டிக்கர்களை அகற்றி விட்டனர். இதற்கிடையே அபராதம் விதிக்கப்பட்ட அரசு அதிகாரி, தான் ஓட்டிக்கொண்டு வந்தது தனக்கு சொந்தமான கார் கிடையாது என கூறியுள்ளார்.

அது அவரது குடும்ப உறுப்பினர் ஒருவருடையது என அவர் கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்தும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்பது குறித்தும் தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி தெரிந்திருந்தால் நானாகவே ஸ்டிக்கரை அகற்றியிருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமூகத்தின் பெயரை வாகனங்களில் ஸ்டிக்கராக ஒட்டக்கூடாது என்பது தெரியவில்லை என அரசு அதிகாரி ஒருவர் கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாகதான் உள்ளது. இருந்தபோதும் காவல் துறையினர் தன் மீது மேற்கொண்ட நடவடிக்கையை மதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் மட்டுமல்லாது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறு வாகனங்களில் பலர் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர்.

வாகனங்களின் விண்டுஸ்க்ரீன் மற்றும் நம்பர் பிளேட் உள்ளிட்ட இடங்களில், தாங்கள் சார்ந்த சமூக பிரிவை குறிக்கும் ஸ்டிக்கர்களை ஒட்டுவதை பலர் பெருமிதமாக கருதி வருகின்றனர். மற்ற ஒரு சில மாநிலங்களில் காவல் துறையினர் இதனை பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்து வரும் நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தின் காவல் துறை தற்போது கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








