அவங்க கண்ணில் சிக்கினால் அவ்ளோதான்... எக்ஸ்ட்ரா பம்பர் உள்ள வாகனங்களை போலீஸ் குறி வைப்பது ஏன் தெரியுமா?
எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறி பலர் தங்கள் வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்து வருகின்றனர். ராட்சத டயர்கள் மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பொருத்துவது என பல வழிகளில் வாகனங்கள் மாடிஃபிகேஷன் செய்யப்படுகின்றன.

இதில், கார்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களின் முன் பகுதியில் புல் பார்கள் எனப்படும் எக்ஸ்ட்ரா பம்பர்களை பொருத்தி கொள்வதும் ஒன்றாக உள்ளது. வாகனங்கள் விபத்தில் சிக்கினால், முன் பகுதி சேதமடைவதை எக்ஸ்ட்ரா பம்பர்கள் தடுப்பதாக, அவற்றை பொருத்தியுள்ளவர்கள் கூறுகின்றனர். அவர்களின் கூற்றில் உண்மை இருக்கவே செய்கிறது.

ஆனால் எக்ஸ்ட்ரா பம்பர்கள் பொருத்துவதால் கிடைக்கும் நன்மைகளை காட்டிலும் தீமைகள்தான் அதிகம். குறிப்பாக ஏர்பேக் உள்ள வாகனங்களில் எக்ஸ்ட்ரா பம்பர்கள் பொருத்தியிருந்தால், விபத்துக்களின்போது உயிரிழப்பு நேரிடலாம். விபத்தின் தாக்கத்தை உணர்ந்து சரியான நேரத்தில் ஏர்பேக்குகளை விரிவடைய செய்யும் சென்சார்கள் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்.

அங்கு எக்ஸ்ட்ரா பம்பர்கள் இருந்தால், மோதலின் தாக்கத்தை சென்சார்கள் உணர்வதில் பிரச்னை ஏற்படும். இதன் விளைவாக ஏர்பேக்குகள் விரிவடையாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் எக்ஸ்ட்ரா பம்பர்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள், பாதசாரிகளுக்கும் எதிரிகள்தான். தற்போதைய நவீன கார்களின் முன் பகுதி பாதசாரிகளுக்கு நட்பாக வடிவமைக்கபடுகிறது.

விபத்துக்களில் பாதசாரிகள் படுகாயம் அடைவதை தடுப்பதற்காக பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை வாகன உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றன. ஆனால் எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்பட்ட வாகனங்கள் மோதினால், பாதசாரிகள் படுகாயம் அடைவதற்கோ, உயிரிழப்பதற்கோ வாய்ப்புகள் உள்ளன.

எனவே வாகனங்களில் எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி பலர் இன்னமும் எக்ஸ்ட்ரா பம்பர்களை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக தமிழகத்தில் அதிகாரிகள் தற்போது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

வாகனங்களில் விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்ட்ரா பம்பர்களை உடனடியாக அகற்றி விட வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனையும் மீறி எக்ஸ்ட்ரா பம்பர்களை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களை கண்டறிவதற்காக தமிழகம் முழுவதும் தற்போது சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் இந்த பணிகளில் களமிறங்கியுள்ளனர். எக்ஸ்ட்ரா பம்பரை அகற்றாமல் அலட்சியம் காட்டும் வாகன உரிமையாளர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








