டிரைவர் இல்லாமல் ஓடும் கார்களை சோதிப்பதற்கு பிரபல நிறுவனம் செய்து வரும் காரியம்! என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க
ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் வாகனங்களை சோதனை செய்வதற்காக பிரபல நிறுவனம் முன்னெடுத்துள்ள முயற்சி ஒன்று கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆட்டோமொபைல் துறையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி கொண்டுள்ளன. நாம் எளிமையாகவும், சௌகரியமாகவும் பயணம் செய்ய இந்த தொழில்நுட்பங்கள் உதவி செய்கின்றன. சாதாரண பட்ஜெட் கார்களில் கூட இன்று ஏராளமான தொழில்நுட்ப வசதிகளை வாகன உற்பத்தி நிறுவனங்கள் வழங்குகின்றன.

இந்த சூழலில், ஆட்டோமொபைல் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், ஓட்டுனர் இல்லாமலேயே இயங்கும் வாகனங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை தற்போது உலகின் பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இதில், வேமோ (Waymo) நிறுவனம் முன்னணியில் உள்ளது. இது அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஆகும்.

கூகுள் நிறுவனம் நம் அனைவருக்குமே தெரியும். அதன் தாய் நிறுவனம் ஆல்பாபெட். இந்த நிறுவனத்தின் கீழ் கூகுள் மட்டுமல்லாது இன்னும் ஏராளமான துணை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில், வேமோ நிறுவனமும் ஒன்று. அட்டானமஸ் டிரைவிங் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் வேமோ நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இந்த சூழலில் செயற்கையான ஒரு நகரத்தை உருவாக்கும் பணிகளில் வேமோ நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது. அட்டானமஸ் வாகனங்களை சோதனை செய்வதற்கு என பிரத்யேகமாக இந்த செயற்கை நகரம் உருவாக்கப்படுகிறது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இந்த செயற்கை நகரத்தை வேமோ நிறுவனம் கட்டமைத்து வருகிறது.

உண்மையான நகரங்களில் வாகனம் ஓட்டும் சூழல் எப்படி இருக்குமோ? அதேபோன்று இந்த செயற்கை நகரமும் அமைந்திருக்கும். ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார்கள் மற்றும் லாரிகளை சோதனை செய்வதற்கு இந்த செயற்கை நகரம் பயன்படுத்தப்படும். வெவ்வேறு வகையான நகர சூழல்களில், தானியங்கி வாகனங்கள் இங்கு சோதனை செய்யப்படவுள்ளன.

கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவும் உண்மையான நகரங்களில் தானியங்கி வாகனங்களை சோதனை செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே உண்மையான நகரத்தின் சூழல்களை அப்படியே செயற்கையாக உருவாக்கி, அங்கு தானியங்கி வாகனங்களை சோதனை செய்வதற்கு வேமோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

போக்குவரத்து ஆராய்ச்சி மையத்துடன் (Transportation Research Center) இணைந்து, ஓஹியோ மாகாணத்தில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஓட்டுனர்கள் இல்லாமல் இயங்க கூடிய வாகனங்களுக்கு மோசமான வானிலை மிகப்பெரிய எதிரி. இந்த சூழல்களில் வாகனத்தின் சென்சார்களால் சரியாக செயல்பட முடியாமல் போனால் விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனவே இந்த புதிய செயற்கை நகரத்தில் பனி உள்பட அனைத்து வகையான வானிலை சூழல்களிலும் தனது வாகனங்களை பரிசோதனை செய்வதற்கு வேமோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தானியங்கி வாகனங்களை சோதனை செய்வதற்காக செயற்கையாக ஒரு நகரத்தையே உருவாக்கி வரும் வேமோ நிறுவனத்தின் முயற்சி கவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








