புதிய கார் வாங்குவதற்கு சரியான நேரம் எது தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
புதிய கார் வாங்குவதற்கு ஆண்டு இறுதி சிறந்ததா? அல்லது புத்தாண்டு சிறந்ததா? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

புதிய கார் வாங்குவது என்பது யாராக இருந்தாலும் பெரிய செலவுதான். ஆனால் கார் வாங்கும் காலத்தை நீங்கள் சரியாக முடிவு செய்தால், கணிசமான தொகையை சேமிக்க முடியும். சரி, புதிய கார் வாங்க எது சரியான நேரம் என கேட்கிறீர்களா? உங்களுடைய கேள்விக்கு இந்த செய்தியில் நாங்கள் வழங்கியுள்ள பதில் நிச்சயமாக நீங்கள் கணிசமான தொகையை சேமிக்க உதவு செய்யும்.

தற்போது 2020ம் ஆண்டு முடிவடைய போகிறது. ஆண்டு இறுதியில் 2020 மாடல் காரை வாங்குவது சிறந்ததா? அல்லது 2021ம் ஆண்டு மாடல் வரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டுமா? என்பதைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். ஆண்டு இறுதிதான் புதிய கார் வாங்குவதற்கு சரியான நேரம் என நாங்கள் நினைக்கிறோம்.

இதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக கூறுகிறோம். ஆண்டு இறுதியில் புதிய கார் வாங்குபவர்கள் ஏராளமான சலுகைகளை பெற முடியும். பொதுவாக ஆண்டு இறுதியில் கார்களின் விற்பனை மந்தமாக இருக்கும். எனவே வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக கார் உற்பத்தி நிறுவனங்களும், டீலர்களும் போட்டி போட்டு கொண்டு தள்ளுபடிகளை வாரி வழங்குவார்கள்.

இதன் மூலம் கார் விற்பனை உயரும் என்பதால், விற்பனை இலக்குகளை அவர்களால் எட்ட முடியும். ஆண்டு இறுதியில் கிட்டத்தட்ட அனைத்து கார் நிறுவனங்களும், டீலர்களும், தள்ளுபடி மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்குவார்கள். இதன்படி புதிய கார்களுக்கு ஒரு சில ஆயிரங்கள் தள்ளுபடி கிடைக்கலாம். சில சமயங்களில் சில கார்களுக்கு லட்சங்களில் கூட தள்ளுபடி கிடைக்கலாம்.

உற்பத்தி நிறுவனங்களால் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் டீலர்கள் அளவில் வழங்கப்படும் தள்ளுபடிகள் இதில் அடங்கும். ஆண்டு இறுதியில் மிகப்பெரிய அளவில் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குவதுடன் மட்டுமல்லாது, ஸ்பெஷல் எடிசன் மாடல்களையும் கார் உற்பத்தி நிறுவனங்கள் அறிமுகம் செய்யும். இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் பெரும்பாலும் வழக்கமான வேரியண்ட்களை போலவேதான் இருக்கும்.

ஆனால் ஒரு சில கூடுதல் ஆக்ஸஸெரிஸ்கள் வழங்கப்படலாம். இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல்கள், பெரும்பாலும் வழக்கமான வேரியண்ட்களின் விலையிலேயேதான் விற்பனை செய்யப்படும். இல்லாவிட்டால் ஒரு சில ஆயிரங்கள் மட்டும் அதிகமாக இருக்கலாம். புதிய காரில் பல்வேறு ஆக்ஸஸெரீஸ்கள் இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், ஸ்பெஷல் எடிசன் மாடல்களை பரிசீலிக்கலாம்.

ஏனெனில் அவை பல்வேறு ஆக்ஸஸெரீஸ்களுடன் வரும். சாதாரண வேரியண்ட்களை வாங்கி அவற்றில் கூடுதலாக ஆக்ஸஸெரீஸ்களை பொருத்துவதை விட, உங்களுக்கு தேவையான ஆக்ஸஸெரீஸ்களுடன் வரும் மாடல்களை வாங்கி விடுவது நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்ததாக இருக்கும். ஆண்டு இறுதியில் புதிய கார் வாங்குவதால் விலை உயர்வை தவிர்க்க முடியும் என்பது மற்றொரு நன்மை.

ஆண்டு இறுதியில் விற்பனையை அதிகரிப்பதற்காக தள்ளுபடிகளையும், சலுகைகளையும் வாரி வழங்கினாலும், புத்தாண்டில் ஏராளமான கார் நிறுவனங்கள் தங்கள் மாடல்களின் விலைகளை உயர்த்தி விடும். பொதுவாக 2 முதல் 3 சதவீதம் வரை விலை உயரலாம். இந்த விலை உயர்வானது, கார் நிறுவனங்கள் மற்றும் மாடல்களை பொறுத்து மாறுபடும்.

எனவே புத்தாண்டில் புதிய கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் கொஞ்சம் அதிக பணத்தை செலவிட வேண்டியிருக்கும். அதற்கு பதிலாக விலை உயரும் முன்பே வாங்கி விடுவது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். எனினும் விலை உயர்ந்தாலும் பரவாயில்லை என சிலர் புதிய மாடலுக்காக காத்திருக்கலாம். ஆனால் மாடல்களுக்கு இடையே பெரிய அளவில் எல்லாம் மாற்றம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கார் வெகு சமீபத்தில்தான் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றால், அந்த கார் புத்தாண்டில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் அல்லது அப்டேட்களை பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே கிடைக்கும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை பயன்படுத்தி கொண்டு, ஆண்டு இறுதியிலேயே காரை வாங்கி விடுவது சிறந்தது.

குறிப்பிடத்தகுந்த அளவில் அப்டேட்கள் வழங்கப்படும் என தெரிந்தால் வேண்டுமானால், புதிய மாடல்களுக்கு காத்திருப்பதில் அர்த்தம் உள்ளது. பொதுவாக கார் நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை (தோராயமாக) தங்களுடைய மாடல்களை மேம்படுத்தி ஃபேஸ்லிஃப்ட்களை அறிமுகம் செய்யும். இதை மனதில் வைத்து நீங்கள் செயல்படலாம்.

அதாவது நீங்கள் வாங்க விரும்பும் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வருகிறது என தெரிந்தால் நீங்கள் காத்திருப்பதில் அர்த்தம் இருக்கிறது. பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படாது என்றால், ஆண்டு இறுதியிலேயே தள்ளுபடிகளை பயன்படுத்தி காரை வாங்கி விடலாம். இதன் மூலம் நீங்கள் கணிசமான தொகையை சேமிக்க முடியும்.


Click it and Unblock the Notifications








