ஹீரோ ஆப்டிமா எச்எஸ் மின்சார ஸ்கூட்டர் விலை அதிரடி குறைப்பு... வாங்குவதற்கு பொன்னான தருணம்!
மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மானியம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் ஹீரோ ஆப்டிமா எச்எக்ஸ் மின்சார ஸ்கூட்டர் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மானியத்தை மத்திய அரசு அண்மையில் கணிசமாக அதிகரித்ததது. இதனால், மின்சார இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை கணிசமாக குறைத்து வருகின்றனர். அந்த வகையில், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனமும் தனது ஆப்டிமா எச்எக்ஸ் ஸ்கூட்டரின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.

ஹீரோ ஆப்டிமா எச்எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிங்கிள் பேட்டரி மற்றும் டியூவல் பேட்டரி என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இதில், சிங்கிள் பேட்டரி விலை ரூ.8,040 வரையிலும், டியூவல் பேட்டரி மாடல் விலை ரூ.15,680 வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால், ஹீரோ ஆப்டிமா எச்எக்ஸ் மின்சார ஸ்கூட்டர் இனி முறையே ரூ.53,600 மற்றும் ரூ.58,990 ஆகிய எக்ஸ்ஷோரூம் விலைப் பட்டியலில் கிடைக்கும். இது நிச்சயம் மின்சார ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டிருப்போரின் கவனத்தை வெகுவாக கவரும் விலையாக இருக்கிறது. ஹீரோ எலெக்ட்ரிக் இணையதளம் மூலமாக இந்த ஸ்கூட்டரை ரூ.2,999 செலுத்தி புக்கிங் செய்ய முடியும்.

ஹீரோ ஆப்டிமா எச்எக்ஸ் மின்சார ஸ்கூட்டரில் 51.2V/30Ah லித்தியம் அயான் பேட்டரியும், 550W பிஎல்டிசி மின் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரின் சிங்கிள் பேட்டரி மாடல் 82 கிமீ வரையிலும், டியூவல் பேட்டரி மாடல் 122 கிமீ தூரம் வரையிலும் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 5 மணிநேரம் பிடிக்கும். இந்த ஸ்கூட்டர் மணிக்கு 42 கிமீ வேகம் வரை செல்லும்.

எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், யுஎஸ்பி சார்ஜர், போர்ட்டபிள் பேட்டரி, ரிமோட் லாக் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் இரண்டு ஷாக் அப்சார்பர்கள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும் இடம்பெற்றுள்ளன. அலாய் வீல்கள், ட்யூப்லெஸ் டயர்களும் முக்கிய அம்சங்களாக உள்ளன.

மின்சார வாகன விற்பனையை ஊக்கப்படுத்தும் விதத்தில் ஃபேம்-2 என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் ஏற்றும் நிலையங்களின் கட்டமைப்பை அதிகரிக்கும் வகையில் மானியம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பேட்டரி திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நிபந்தனைகளுடன் இந்த மானியத் திட்டம் நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில், நகர்ப்புறங்களில் வாகன மாசு உமிழ்வு பிரச்னைக்கு முடிவு கட்டும் விதத்தில் மின்சார வாகன விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மானியத்தை அதிரடியாக அதிகரித்துள்ளது.

இதன்படி, பேட்டரியின் ஒரு kWh திறனுக்கு ரூ.10,000 ஆக இருந்த மானியத்தை தற்போது ரூ.15,000 ஆக அதிகரித்துள்ளது மத்திய அரசு. இதனால், மின்சார இருசக்கர வாகன நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை கணிசமாக குறைத்து வருகின்றன.


Click it and Unblock the Notifications







