ரூ. 20 ஆயிரத்தில் உருவாக்கப்பட்ட இ-சைக்கிள்! உருவாக்கிய தமிழர் யார்னு தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க!
விழுப்புரத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் ரூ. 20 ஆயிரம் செலவில் இ-மிதிவண்டியை உருவாக்கியிருக்கின்றார். இந்நிகழ்வுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின் வாகனங்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஃபேம்-2 திட்டத்தின்கீழ் மானியம் வழங்குவது, வரி சலுகை வழங்குவது என பல்வேறு சிறப்பு சலுகைகள் மூலம் ஊக்குவிப்பு பணிகள் மிக தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

இதனால், கடந்த காலங்களைக் காட்டிலும் இந்தியாவில் மின் வாகனங்களின் எண்ணிக்கைக் கணிசமாக உயரத் தொடங்கியிருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் தனக்கான இ-மிதிவண்டியை தானே உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது கை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட இ-சைக்கிள் உடன் பாஸ்கரன்.
விழுப்புரம் மாவட்டம், பாகமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். டிப்ளமோ மெக்கானிக்கல் இஞ்ஜினியர் படித்த இவர் தற்போது முழு நேர பணியாக விவசாயம் செய்து வருகின்றார். கோவிட்-19 வைரசால் வேலையை இழந்தவர்களில் இவரும் ஒருவர் ஆவார். இதன் பின்னரே முழு நேர விவசாயியாக அவர் மாறியிருக்கின்றார்.

விவசாய பணிகளுக்கு இடையில் கிடைக்கும் இடைவெளி நேரங்களை பயன்படுத்திக் கொள்ளும் விதமாகவே பாஸ்கரன் இ-சைக்கிளை உருவாக்கியிருக்கின்றார். ஆமாங்க, விவசாயம் சார்ந்த பணிகள் முடித்துவிட்டு வீட்டில் வேலையின்றி இருக்கும் நேரங்களை பயன்படுத்தியே தனக்கான இ-மிதிவண்டியை மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் படித்திருக்கும் விவசாயி இளைஞர் செய்திருக்கின்றார்.

இந்த இ-மிதிவண்டியை உருவாக்க் அவர் ரூ. 20 ஆயிரம் செலவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. ரூ. 2 ஆயிரத்தை பயன்படுத்திய சைக்கிளை வாங்கவும், ரூ. 18 ஆயிரத்தை வழக்கமான சைக்கிளை இ-சைக்கிளாக மாற்றவும் அவர் செலவிட்டிருக்கின்றார்.

இ-சைக்கிளை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 50 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனில் பாஸ்கரன் உருவாக்கியிருக்கின்றார். இதற்கான செலவு ரூ. 10 மட்டுமே ஆகும் என்ற ஆச்சரிய தகவலையும் அவர் வெளியிட்டிருக்கின்றார்.

ஆகையால், பாஸ்கரன் உருவாக்கியிருக்கும் இ-சைக்கிளில் 50 கிமீ பயணிக்க வெறும் ரூ. 10 மட்டுமே செலவாகும் என்பது குறிப்பிடத்தகுந்தது. பெட்ரோலால் இயங்கும் இருசக்கர வாகனத்தில் 50 கிமீ பயணிக்க தற்போதைய பெட்ரோல் விலை நிலவரப்படி ரூ. 100 வரை செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

எனவே தற்போது பயன்பாட்டில் இருக்கும் பெட்ரோல் இரு சக்கர வாகனங்களைக் காட்டிலும் பல மடங்கும் பண சேமிப்பை பாஸ்கரன் உருவாக்கியிருக்கும் இ-மிதிவண்டி வழங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. எலெக்ட்ரிக் மோட்டார், பேட்டரி, கன்ட்ரோல்லர்கள் மற்றும் பிரேக் கட்-ஆஃப் ஸ்விட்ச் ஆகியவற்றை பாஸ்கரன் இ-சைக்கிளில் பயன்படுத்தியிருக்கின்றார்.

இதில் பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டார் மணிக்கு 30 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த இ-சைக்கிளை அடிப்படையாகக் கொண்டு விரைவில் புதிய விலைக்குறைந்த இ-சைக்கிளை உருவாக்க பாஸ்கரன் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் மூன்று சக்கர வாகனங்களில் இந்த வசதியை விரைவில் வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications







