'மேட் இன் இந்தியா' குட்டிக் காரை தயாரிக்க ஹோண்டா ஆயத்தம்!
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே ஒரு புதியக் குட்டிக் காரை வடிவமைக்க ஹோண்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டோக்கியோ மோட்டார் ஷோவில் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியாவில் புதிய குட்டிக் கார் திட்டம் குறித்து பரிசீலித்து வருவதாகவும், ஆனால், இதற்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

விறுவிறு பணிகள்
புதிய குட்டிக் கார் திட்டத்தை செம்மையாக செயல்படுத்த ஏதுவாக, இந்தியாவில் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை வலுப்படுத்த ஹோண்டா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

புதிய குட்டிக் கார்
பிரியோவுக்கு கீழான ரகத்தில் புதிய ஹேட்ச்பேக் காரை ஹோண்டா தயாரிக்க உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்த குட்டிக் காரை முழுக்க முழுக்க இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்திலிருந்து உருவாக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இந்த காருக்கான 100 சதவீத பாகங்கள் இந்தியாவிலிருந்து பெறுவதற்கும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், புதிய ஹேட்ச்பேக் காரை மிகச் சவாலான விலையில் அறிமுகம் செய்ய முடியும் என்று ஹோண்டா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய கார்கள்
அதேவேளை, மார்க்கெட் பங்களிப்பை அதிகரித்துக் கொள்ளும் விதமாக, அடுத்த ஓர் ஆண்டிற்குள் 3 புதிய மாடல்களை ஹோண்டா அறிமுகம் செய்ய உள்ளது. புதிய சிட்டி, ஜாஸ் மற்றும் மொபிலியோ ஆகிய கார்கள்தான் இந்த பட்டியலில் தற்போது இடம்பெற்றுள்ளன.

அட்டவணை
அடுத்த வாரம் புதிய தலைமுறை சிட்டி செடான் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, ஜனவரியில் புதிய ஜாஸ் காரும், அடுத்த ஆண்டு மத்தியில் புதிய மொபிலியோ எம்பிவி காரையும் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டம் போட்டுள்ளது.

அதிகாரி கருத்து
பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஹோண்டாவின் ஆசிய பிராந்திய நிர்வாக அதிகாரி யோஷியுகி மட்சுமோட்டோ கூறுகையில்," பெரும்பாலான நேரத்தை இந்தியாவில்தான் செலவழிக்கிறேன். அங்கு 3 இருக்கை வரிசை கொண்ட மாடலுக்கு அதிக தேவை இருக்கிறது. இதனையொட்டி, எங்களது திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்," என்றார்.

முக்கிய நபர்
அமேஸ் காரின் டீசல் எஞ்சினை வடிவமைத்ததில் முக்கிய காரணகர்த்தாவாகிய தோமயா அபேவை பத்திரிக்கையாளர்களிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இவர்தான் ஹோண்டா இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு தலைவராக பணியாற்றி வருகிறார். எனவே, புதிய குட்டிக் கார் திட்டத்தை இவரை நம்பி ஒப்படைக்க ஹோண்டா முடிவு செய்துள்ளது.

புதிய எஸ்யூவி
டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வெஸல் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு, அதுகுறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று ஹோண்டா அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, 2015ல் தான் வெஸல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








