புது கார்களின் விலை 40 சதவீதம் குறைய போகுது! விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ள நிறுவனங்களில் ஒன்று டாடா மோட்டார்ஸ் (Tata Motors). ஆனால் எம்ஜி மோட்டார் (MG Motor) போன்ற நிறுவனங்கள், தற்போது தலை தூக்க தொடங்கியுள்ளன. அத்துடன் மாருதி சுஸுகி (Maruti Suzuki) போன்ற நிறுவனங்களின் வருகையும் போட்டியை கடுமையானதாக மாற்றியுள்ளன.
எனவே தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி கொள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு மாற்று வழிகளை செயல்படுத்த தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக வெகு சமீபத்தில் பாஸ் (BAAS - Battery As A Service) முறையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடைமுறைப்படுத்தியது.

தற்போதைய நிலையில் டாடா பன்ச் இவி (Tata Punch EV) எலெக்ட்ரிக் காரை மட்டும் நீங்கள் பாஸ் முறையில் வாங்கலாம். டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை நீங்கள் வழக்கமான முறையில் வாங்கினால், அதன் விலை 9.69 லட்ச ரூபாய் ஆகும். அதுவே பாஸ் முறையில் வாங்கினால், விலை வெறும் 6.49 லட்ச ரூபாய் மட்டுமே.
ஆனால் பாஸ் முறையை தேர்வு செய்தால், ஒரு கிலோ மீட்டருக்கு 2.60 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். பாஸ் முறையை தேர்வு செய்தால், ஆரம்ப விலையில் பல லட்ச ரூபாயை நீங்கள் சேமிக்க முடியும். அதற்கு பிறகு தேவைக்கு ஏற்ப ஓட்டி விட்டு, அதற்கு மட்டும் கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம்.

இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், வரும் காலங்களில் இன்னும் ஏராளமான கார்களில், பாஸ் திட்டத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செயல்படுத்தவுள்ளது. இதன் மூலம் டாடா எலெக்ட்ரிக் கார்களின் விலை சுமார் 40 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உதாரணத்திற்கு ஒரு எலெக்ட்ரிக் காரின் விலை சுமார் 10 லட்ச ரூபாய் என்றால், பாஸ் திட்டத்தில் அந்த எலெக்ட்ரிக் காரை வெறும் 6 லட்ச ரூபாயிலேயே வாங்கி விட முடியும். பாஸ் திட்டத்தை மற்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு விரிவுபடுத்துவதற்கு முன்னதாக, தற்போது மற்றொரு புதுமையான திட்டத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
வழக்கமான பெட்ரோல், டீசல் கார்கள் உடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் கார்களில் ஒரு சில பிரச்சனைகள் இருக்கின்றன. வீடுகளில் வேகமாக சார்ஜ் ஏறும் பாஸ்ட் சார்ஜர்களை பொருத்துவதற்கு அதிகமாக செலவு ஆகும். இது எலெக்ட்ரிக் கார்களில் இருக்கும் மிக முக்கியமான பிரச்சனை ஆகும்.
இந்த பிரச்சனையை சரி செய்வதற்காக ஹோப்சார்ஜ் (Hopcharge) நிறுவனத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது கைகோர்த்துள்ளது. வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று, அவர்களின் டாடா எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக, இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே டாடா எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்கள் இனி 'ஹோம் சார்ஜர்' பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
இந்த திட்டத்திற்காக ஃபாஸ்ட் சார்ஜர் உடன் கூடிய வேன்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. நீங்கள் விரும்பும் சமயத்தில், அந்த வேன் உங்கள் வீட்டிற்கு வந்து விடும். இந்த திட்டத்தில் மொத்தம் 3 சந்தா திட்டங்கள் (Subscription) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில், எக்ஸ்பீரியன்ஸ் திட்டம் (6 மாதங்கள்) ஒன்றாகும். இதில், 24 முறை ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
அதே நேரத்தில் சக்ஸஸ் 3.3 திட்டத்தில் (12 மாதங்கள்), நீங்கள் 48 முறை ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை பயன்படுத்தி கொள்ள முடியும். மறுபக்கம் சக்ஸஸ் 7.2 (24 மாதங்கள்) திட்டத்தில், 96 முறை நீங்கள் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். தற்போதைய நிலையில் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் மட்டும் இந்த திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக எதிர்காலத்தில் அதன் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக 2 புதிய எலெக்ட்ரிக் கார்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அவை டாடா சியரா இவி (Tata Sierra EV) மற்றும் டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் (Tata Tiago EV Facelift) ஆகியவை ஆகும்.


Click it and Unblock the Notifications








