ட்ரம்ப் செய்த வேலையால் நடுத்தெருவுக்கு வரும் இந்திய மக்கள்! போக போக நிலைமை இன்னும் மோசம் ஆகும்!
அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் (US-Israel-Iran War) காரணமாக, உலக பொருளாதாரம் (Global Economy) மிக கடுமையான பாதிப்புகளை சந்திக்க தொடங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய 2 நாடுகளும் ஒன்றாக சேர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஈரான் மீது போர் தொடுத்தன.
இதில், ஈரான் அதி உயர் தலைவர் காமேனி (Supreme Leader Ali Khamenei) உள்பட பலரும் கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடியாக, அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள சவுதி அரேபியா (Saudi Arabia), ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) மற்றும் கத்தார் (Qatar) போன்ற நாடுகளை குறி வைத்து, ஈரான் தாக்கி வருகிறது.

இதற்கு தேவையான உளவு தகவல்களை ஈரானுக்கு, ரஷ்யா (Russia) வழங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் காரணமாக கச்சா எண்ணெய் (Crude Oil) மற்றும் சமையல் எரிவாயு (Cooking Gas) ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து (Price Hike) வருகிறது.
அத்துடன் ஹார்மூஸ் நீர்வழி (Strait Of Hormuz) மூடப்பட்டுள்ளதால், கப்பல் போக்குவரத்தும் மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான போரில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் கூட, உலகின் பல்வேறு நாடுகளும் தற்போது கடுமையான இழப்புகளை சந்தித்து கொண்டுள்ளன. இதில், இந்தியாவும் ஒன்றாகும்.

இந்தியாவில் இருந்து முட்டை மற்றும் மருந்துகள் போன்றவற்றின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் காரணமாக, இந்தியாவின் ஆட்டோமொபைல் தொழில் துறை (Automobile Industry) தற்போது உச்சகட்ட பாதிப்புகளை சந்திக்க தொடங்கியுள்ளது. அந்த பாதிப்புகள் என்னென்ன? என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
வாகனங்களின் விலை உயரலாம்: தற்போது போர் நடைபெற்று கொண்டுள்ள மத்திய கிழக்கு பிராந்தியம், உலக கப்பல் போக்குவரத்தின் மிக முக்கிமயான மையங்களில் ஒன்றாகும். தற்போது அந்த பிராந்தியம் போரால் பாதிக்கப்பட்டுள்ளதால், கப்பல்கள் மாற்று வழியில் சுற்றி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு வழக்கமான பயண நேரத்தை விட, 14 முதல் 20 நாட்கள் கூடுதல் அவகாசம் தேவைப்படும். இது கப்பல் போக்குவரத்திற்கான செலவுகளை அதிகரிக்கும். அத்துடன் சரக்குகளுக்கான காப்பீட்டு செலவும் உயரும். இறுதியில் இது சரக்குகளின் விலை உயர காரணமாக அமையும். இந்த விலை உயர்வை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் மீதுதான் சுமத்தும்.
இதன் காரணமாக இந்தியாவில் வாகனங்களின் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. வாகனங்களை உருவாக்க தேவையான மிக முக்கியமான ஆட்டோமொபைல் பாகங்கள் மற்றும் செமிகண்டக்டர்கள் ஆகியவற்றை ஐரோப்பிய கண்டத்தில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. தற்போதைய சூழலில் இவற்றை இறக்குமதி செய்ய கூடுதல் செலவு ஆகும்.
அத்துடன் அவற்றின் இறக்குமதிக்கு தாமதமும் ஏற்படும். இதன் காரணமாக இந்தியாவில் வாகனங்களின் விலை உயரும் சூழல் உருவாகியுள்ளது. விலை உயர்ந்தால், விற்பனை குறைவது இயற்கை. எனவே இந்தியாவை சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு இது மிகவும் சவாலான ஒரு காலகட்டம்தான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
வாகன ஏற்றுமதி முடங்கலாம்: இந்தியாவில் இருந்து ஒரு ஆண்டுக்கு சுமார் 5 மில்லியன் டூவீலர்கள் மற்றும் கார்கள் போன்ற வாகனங்கள், அதாவது 50 லட்சம் வாகனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாருதி சுஸுகி (Maruti Suzuki), பஜாஜ் (Bajaj) மற்றும் டிவிஎஸ் (TVS) போன்ற பல்வேறு நிறுவனங்கள், இந்தியாவில் இருந்து அதிகப்படியான வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகின்றன.
இந்தியாவில் இருந்து உலகின் பல்வேறு பிராந்தியங்களுக்கு வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில், மத்திய கிழக்கு பிராந்தியம் மிக முக்கியமான ஒன்றாகும். தற்போது அங்கு தீவிரமான போர் நடைபெற்று கொண்டுள்ளதால், ஏற்றுமதி ஆர்டர்களை நிறைவேற்ற முடியாமல் போய், இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம்.
வாகனங்களின் உற்பத்தி பாதிக்கப்படலாம்: வாகன தொழிற்சாலைகளில் பெயிண்ட் ஷாப் ஓவன்களை இயக்குவது போன்ற பணிகளுக்கு இயற்கை எரிவாயு (Natural Gas) அவசியம். ஆனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடைபெற்று வரும் போர் காரணமாக, இயற்கை எரிவாயு சப்ளை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இயற்கை எரிவாயு பற்றாக்குறை காரணமாக, குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் உள்ள டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் தொழிற்சாலையில் வாகன உற்பத்தி 50 சதவீதம் வரை குறைக்கப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டால், காத்திருப்பு காலம் (Waiting Period) அதிகமாகும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது நீங்கள் முன்பதிவு செய்த வாகனம், உங்கள் கைகளுக்கு கிடைப்பதற்கு நீண்ட காலம் ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஒட்டுமொத்தத்தில் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வாகனங்கள் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால், அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர், இந்தியாவின் நடுத்தர வர்க்க மக்களுக்கு மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்த போகிறது என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் முடிவடைய வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் தற்போது வெளியாகி வரும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், இந்த போர் இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என தெரிகிறது. போர் ஆரம்பித்து ஒரு சில நாட்கள் மட்டுமே கடந்துள்ள நிலையிலேயே, உலக பொருளாதாரம் ஆட்டம் காண தொடங்கியுள்ளது.
நிலைமை இப்படி இருக்கும்போது, இந்த போர் இன்னும் சில மாதங்கள் நீடித்தால், நிலைமை இன்னும் மோசமாகும். எனவே சம்பந்தப்பட்ட நாடுகள், அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, தங்களுக்கு இடையேயான பிரச்சனையை தீர்க்க முயல வேண்டும் என்பதுதான் உலக மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
குறிப்பாக இந்திய மக்களுக்கு மறைமுகமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதால், இந்த போரை நிறுத்துவதற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) முயல வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) உள்ளிட்ட தலைவர்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினால் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








